மருத்துவ குறிப்பு

கண்புரைக்கு புதிய சிகிச்சை!

‘காலம் மாற மாற கண்களில் பிரச்னைகளும் புதிதுபுதிதாக ஒரு பக்கம் உருவானாலும், அதற்கேற்ற சிகிச்சைகளும் வந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, கண்புரைக்காக இப்போது அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கேற்ற நவீன, எளிய சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன” என்கிறார் கண் அறுவை சிகிச்சை நிபுணரான லலித்குமார்.

கண்புரை என்றால் என்ன?

”நாம் பார்க்கும் காட்சிகள் கார்னியா எனப்படும் கருவிழி வழியாகச் சென்று அதற்கு உள்ளே இருக்கும் லென்ஸை ஊடுருவி ரெட்டினாவில் பிம்பமாக விழுந்தவுடன்தான் நமக்குப் பார்வை தெரிகிறது. நடுவில் இருக்கும் லென்ஸின் உள்ளே மெல்லிய சதை திரைபோல வளரும்போது கண் பார்வை மங்கலாகும். இதையே கண்புரை(Cataract) என்கிறோம். பளிச்சென்ற நிறங்கள் கூட மங்கலாகவே தெரியும். பைக், கார் ஓட்டுவது சிரமமாக இருக்கும். கண்ணாடி போட்டுக் கொண்டாலும் பார்வை தெளிவாகத் தெரியாது.”

கண்புரை வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடியதா?

”பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடியது என்றாலும் பரம்பரைத்தன்மை, கண்கள் கதிர்வீச்சுக்கு வெளிப்படல், நீண்ட நாட்களாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்ளல், நீரிழிவு மற்றும் கண்ணில் காயம் ஆகியவைபோன்ற காரணங்களால் கண்புரை நோய் முதுமைக்கு முன்னரே கூட உருவாவதை விரைவாக்குகிறது.இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஏறக்குறைய 74 சதவீதம் பேருக்கு கண்புரை நோய் இருக்கிறது அல்லது கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.”நவீன சிகிச்சை முறையில் கேட்ராக்ட் அறுவைசிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

”வெற்றிகரமான கண்புரை அறுவைசிகிச்சை என்பது, அறுவைசிகிச்சைக்குப் பிறகு பார்வை கூர்மையை மீண்டும் வழங்குகிற துல்லிய அம்சத்தின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. முன்பெல்லாம் கண்களின் லென்ஸ் உள்ளே ஏற்படும் பிரச்னை என்பதால் கண்களில் ஊசி போட்டு, கத்தி வைத்து வெட்டி லென்ஸ் அகற்றப்படும் அல்லது உள்ளுக்குள்ளேயே லென்ஸை துகள்துகளாக உடைத்து, அவை வெளியே உறிஞ்சி எடுக்கப்பட்டு புது லென்ஸ் பொருத்தப்படும். இப்படித்தான் கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன.

இப்போது அதைவிட மேலாக, முன்னேற்றம் அடைந்ததாக கம்ப்யூட்டர் உதவியுடன் செய்யப்படும் ஃபெம்டோ செகண்ட்(Femtosecond) என்கிற அறுவை சிகிச்சை வந்திருக்கிறது. இதில் லேஸர் கருவி மூலமாக கருவிழியில் தேவையான இடத்தில் துளை போட்டு கண்புரையை சுக்குநூறாக உடைத்துவிட்டு, அதன் பின்னர் புது லென்ஸ் பொருத்தப்படும். இந்த எல்லா வேலைகளையும் கம்ப்யூட்டரே செய்துவிடும். மிகவும் துல்லியமானது மற்றும் பாதுகாப்பானது என்பதைவிட கண்களில் கைப்படாமல் சர்ஜரி முடிந்துவிடும் என்பதே கூடுதல் சிறப்பு.”

டோரிக் வகை சிறப்பு லென்ஸ் என்கிறார்களே… அது என்ன?

”நவீன டோரிக்(Toric) லென்ஸ்கள், நோயாளிகளுக்கு கண் கண்ணாடிகள் அணிய அவசியமற்ற வாழ்க்கையை வழங்கும் திறனுடையவை. டோரிக் லென்ஸ்களை மிகச்சரியாகவும் துல்லியமாகவும் தனிப்பட்ட தேவைக்கேற்ப பொருத்த முடியும் என்பது சிறப்பு. இதனால் மேம்பட்ட பார்வைத்திறனை நோயாளிகள் பெறமுடியும்.கண்புரை அறுவைசிகிச்சை செய்தபிறகு கண்ணாடிகளையோ, கான்டாக்ட் லென்ஸ்களையோ எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அணிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இப்போது மலையேறிவிட்டன. இதற்கு முன்பு, கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்ட IOL என்ற புள்ளிக்குவியலின் குறைபாட்டை(Astigmatism) சரி செய்ய இயலாது.

அறுவைசிகிச்சையின்போது கருவிழிப்படலத்தில் செய்யப்படும் கீறல்களின் காரணமாகவும் பார்வைத்திறன் பிழை ஏற்படும். ஆனால், நவீன ஃபெம்டோ செகண்ட் கேட்ராக்ட் அறுவைசிகிச்சையில், புள்ளிக்குவியலின் குறைபாட்டை முன்கூட்டியே கணிக்க முடியும். அதற்கேற்ற வகையில் அதிக துல்லியத்தோடு சரி செய்வதற்காகவே நவீன டோரிக் இன்ட்ராக்குலர் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு நான்கைந்து நாட்களில் அன்றாட வாழ்க்கை முறைக்கு திரும்பிவிடலாம்!”
ht4451500

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button