அசைவ வகைகள்

நாசிக்கோரி

தேவையான பொருட்கள் :-

இறால் – 100 கிராம்

பெரிய துண்டு கருவாடு – ஒரு துண்டு

தக்காளி – 3

பெரிய வெங்காயம் – 4

பட்டாணி – கால் கப்

கரட் – 2

கலர் பவுடர் – 2 சிட்டிகை

உப்பு – ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை – 2 கொத்து

முட்டை – 2

எண்ணெய் – அரை கப்

மிளகாய் வற்றல் – 6

பூண்டு – 4 பல்

வெங்காயம் – ஒன்று

சாதம் – 4 கப்

செய்முறை :-

மூன்று பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

கரட்டை தோல் சீவி விட்டு நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

Nasigoreng05052017002

தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஊற வைத்து அரைத்தால் எளிதில் அரைக்க முடியும்.

பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் பூண்டு, வெங்காயம், ஊற வைத்த மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இறால் மற்றும் கருவாடு துண்டை தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

கருவாடை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

சாதத்தை பொலபொலவென்று வடித்து எடுத்துக் கொள்ளவும்.

மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் கலர் பவுடர், கால் தேக்கரண்டி உப்பு போட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை போட்டு அதனுடன் கருவாடு துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.

பின்னர் அதில் கரட், பட்டாணி, தக்காளி, அரைத் தேக்கரண்டி உப்பு போட்டு 10 நிமிடம் காய்கள் நன்கு வேகும் வரை வதக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை பிய்த்து போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

10 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்ததும் பொரித்து எடுத்து வைத்திருக்கும் முட்டை மற்றும் இறால் இரண்டையும் மசாலாவுடன் போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.

அதன் பிறகு வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு மசாலாவுடன் சாதம் சேரும்படி நன்கு கிளறி விட்டு இறக்கவும்.

சுவையான நாசிக்கோரி தயார்.

பரிமாறும் போது மேலே பொரித்து வைத்திருக்கும் கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button