ஆரோக்கியம் குறிப்புகள்

கையெழுத்து சொல்லும் ரகசியம்

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு ‘கிராபாலஜி’ என்பது பெயராகும். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளமுடியும் என்று கருதப்படுகிறது.

மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் ஆராய்ந்து அந்த எழுத்துக்குச்சொந்தக்காரரின் குணநலன்களை அறிந்து கொள்வது தான் ‘கிராபாலஜி’ எனப்படும் கையெழுத்துக்கலையாகும்.

ஒருவரின் கையெழுத்தின் மூலம் அவரது குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. அழுத்தம்: எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம். காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்பிறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதேநேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.

உங்களது கையெழுத்து காகிதத்தின் பின்பிறம் தெரியவில்லை என்றால் நீங்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக்கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் விருப்பத்தின்படி நடப்பதை விரும்பமாட்டீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே எதையும் செய்வீர்கள். மேலும் நீங்கள் பிறரின் கருத்துக்கும், விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்து, பிறர் சொல்வதை பொறுமையுடன் கேட்டால் நீங்கள் வெற்றியாளர்களாக மாறலாம்.

2. எழுத்தின் கோணம்: சிலர் எழுதும் போது இடது அல்லது வலது புறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை சரித்தும், கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு. வலது அல்லது இடது புறம் சரித்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும். ஒருவரது எழுத்து வலது புறம் சரிவாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர். இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.

எழுத்துக்கள் நேராகவும், எழுதும் வார்த்தைகள் நேர்கோட்டிலும் அமைந்து இருந்தால் அவர் திட்டமிட்டு வாழ்பவர். சந்தோஷம், துக்கம் எதுவாக இருந்தாலும் அதை சமமாக எடுத்துக்கொள்பவர்.

இன்னும் சிலர் ஒரு வரியில் பல்வேறு விதமாக எழுதும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஒரு எழுத்து வலப்புறமும், மற்றொரு எழுத்து இடப்புறமும், சில எழுத்துக்கள் நேராக ஒரே நேர்கோட்டிலும் இருக்கும். இப்படிப்பட்ட கையெழுத்துக்கு சொந்தக்காரர்கள் நிலையற்ற தன்மை கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் குழப்பத்தில் இருப்பார்கள். எந்த முடிவையும் தெளிவாக எடுக்க தயங்குவார்கள். தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியவர்கள்.
handwrtting
3. எழுத்தின் அளவு: ஒருவர் எழுதும் போது அவர் எழுதும் எழுத்தின் அளவை வைத்து அவர் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருவரது எழுத்து பெரிய அளவில் அழுத்தமாக இருந்தால் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். எழுத்துக்கள் சிறிய அளவில் இருந்தால் அவரிடம் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும்.

‘ஐ’ (மி) என்று உச்சரிக்கப்படும் ஆங்கில எழுத்தை சிலர் பெரியதாகவும், அழுத்தமாக எழுதுவதுண்டு. அப்படி எழுதுபவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்திறன் மிக்கவர்களாவும் இருப்பார்கள்.

பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள் சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல்லிலும், செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும்.

4. எழுத்தின் இடைவெளி: எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்களும் நெருக்கமாக இருப்பது அல்லது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பது உண்டு. இதில் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். அந்த நண்பர்களிடம் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவர்களிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் நல்ல நண்பர்கள், தீய நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் நெருக்கம் காட்டுவார்கள். மேலும் இத்தகைய எழுத்துக்களை எழுதுபவர்கள் எதிலும் ஒழுங்கான தன்மையை கையாள மாட்டார்கள். இவர்களிடம் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் இருக்காது.

வார்த்தைகளுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால் அவர் அதிக செலவாளியாக இருப்பார்கள். அதேநேரத்தில் இவர்கள் தெளிவாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி சீராக இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாக, நட்பு பாராட்டுபவர்களாக இருப்பார்கள்.

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். எனவே அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button