அறுசுவைசைவம்

பரோட்டா!

  • மைதா மாவு – அரைக் கிலோ
  • பால் – ஒரு கப்
  • பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
  • சீனி – 2 தேக்கரண்டி
  • உப்பு – 1 1/2 தேக்கரண்டி
  • நெய் – கால் கப்
  • எண்ணெய் – 100 மி.லி

parotta
கொடுத்திருக்கும் தேவையானப் பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொள்ளவும். பாலில் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து மாவில் ஊற்றி பிசறிய பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். பிசைந்த மாவு கையில் சிறிதும் ஒட்டாமல் மிருதுவாக இருக்க வேண்டும். இதுவே சரியான பதம்.

பிறகு ஒரு ஈரத் துணியை கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை நன்கு மூடி அதற்கு மேல் மூடி போட்டு முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.

கையில் சிறிது நெய் தடவி கொண்டு மாவிலிருந்து சப்போட்டா அளவிலான உருண்டை உருட்ட தேவையான மாவை எடுத்து அழுத்தி நான்கு பக்கம் மடித்து பின் உருண்டை உருட்டினால் உருண்டை ஸ்மூத்தாக இருக்கும். அந்த உருண்டையின் மேல் நெய் முழுவதும் தடவி வைக்கவும்.

மீதமிருக்கும் மாவு முழுவதும் இதேப்போல் செய்யவும். (மொத்தம் ஒன்பது உருண்டைகள் வரும்). அதையும் ஈர துணி கொண்டு மூடி அதன் மேல் தட்டு போட்டு மூடி குறைந்தது இரண்டு மணி நேரம் வைத்திருக்கவும்.

ஒரு மீடியமான மரவை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவிக் கொள்ளவும். சப்பாத்தி உருட்டும் கட்டையிலும் எண்ணெய் தடவி கொண்டு மாவு உருண்டையை அதில் வைத்து எவ்வளவு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக மாவை தேய்த்து வைக்கவும்.

பிறகு விரலால் எண்ணெய் எடுத்து தேய்த்து வைத்திருக்கும் மாவில் தெளித்து விட்டு அதை முன்னும், பின்னும் மாறி மாறி மடிக்கவும் அல்லது ஒன்று சேர்த்து சுருட்டி அதன் மேலே எண்ணெய் தொட்டு வைக்கவும்.
இதேப்போல் எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடுப்படுத்தி முதலில் சுருட்டிய உருண்டையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் ரொம்ப மெல்லியதாகவும், மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக தேய்த்து சூடேறிய தவாவில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

லேசாக தூக்கி பார்த்து சிவந்ததும் பரோட்டாவை திருப்பி போட்டு ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெயை சுற்றிலும் ஊற்றி எல்லா இடத்திலும் படுமாறு செய்யவும்.

மீண்டும் லேசாக பரோட்டாவை தூக்கி பார்த்து நன்கு சிவந்திருந்தால் மறுபடியும் திருப்பி போட்டு சிவந்ததும் தவாவை விட்டு எடுத்து மரவையில் வைத்து இரண்டு கைகளால் பரோட்டாவை உள்நோக்கி மூன்று முறை அடிக்கவும்.

இப்போது சுவையான மிருதுவான ஈஸி பரோட்டா ரெடி. இந்த சுவையான குறிப்பினை /திருமதி. அப்சரா அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்

பரோட்டா என்றால் விசுறுவது என்பது தான் சிறப்பு. அப்படி இல்லாமல் இப்படியும் செய்யலாம் நன்றாகவே வரும் என்று செய்து காட்டி உள்ளேன். இது முதன் முதலில் சமைக்க கற்று கொள்பவர்களுக்காக விரிவாக சொல்லி உள்ளேன் இந்த முறை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வதற்கு எளிமையாக இருக்கும். அதே போல் ப்யூர் வெஜ் சாப்பிடுபவர்கள் முட்டை இல்லாமல் செய்வதை தான் விரும்புவார்கள். இது போல் என் ஃப்ரண்டுக்காக நான் முட்டை இல்லாமல் முயற்சி செய்து அது நன்கு வரவே இப்போது முட்டை சேர்க்காமல் தான் செய்கிறேன். இது கடை பரோட்டா போல் இருக்கும். எனவேதான் நிறைய தோழிகளுக்கு இது பயன்பெறும் என்று இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button