​பொதுவானவை

செயின் பறிப்பு – கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?

 

செயின் பறிப்பு - கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி? சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் செயின் பறிப்பு நடந்து வருகிறது. இதனால் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் செயின் பறிப்பு சம்பவங்களை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.அதே நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், செயின் பறிப்பில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது பற்றியும் பார்ப்போம்.

* பெண்கள் தாங்கள் அணியும் தங்க நகைகள் வெளியில் தெரியாத வகையில் பார்த்துக் கொள்வது நல்லது. சுடிதார் அணிந்து பலர் துப்பட்டாவை மாலை போல கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். அது போன்று செய்தால் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் வெளியில் தெரியாது.

* சேலை அணிந்து செல்பவர்கள், ஜாக்கெட்டுடன் சேர்த்து செயினை சேப்டிபின் (ஊக்கு) அல்லது குண்டு ஊசியால் மாட்டி வைத்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வது ஓரளவுக்கு செயினை பாது காக்கும்.

* சேலை கட்டி கோவிலுக்கு செல்லும் பெண்கள் முந்தானையால் கழுத்தி மறைத்துக் கொண்டு செல்லலாம்.

* தனியாக நடந்து செல்லும் பெண்கள், கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். யாராவது பின் தொடர்கிறார்களா? என்பதை கவனிக்க தவறக்கூடாது. அப்படி சந்தேகப்படும்படியாக யாராவது தொடர்ந்து வருவது தெரியவந்தால், ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் போய் நின்று கொள்ளலாம். பின் தொடர்ந்து வந்த சந்தேக நபர் அங்கிருந்து சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு பயணத்தை தொடரலாம் அல்லது யாரையாவது உதவிக்கு அழைக்கலாம்.

* ஸ்கூட்டியில் தனியாக செல்லும் பெண்கள் மோட்டார் சைக்கிளில் தங்களை யாராவது பின் தொடர்ந்து வருகிறார்களா? என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அப்படி யாராவது பின் தொடர்வது தெரிய வந்தால், அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க தயங்கக் கூடாது.

* சாலையோரமாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல யாராவது நெருங்கி வந்தால் சில அடி தூரங்கள் பின்னால் சென்று அதன் பிறகு பேசுங்கள் இல்லையென்றால் பேசுவதையை தவிர்த்து விடுங்கள். முகவரி கேட்டவர்கள் செயின் பறிப்பு கொள்ளையர்களாக கூட இருக்கலாம்.

* தனியாக செல்லும் பெண்கள் கடைகளில் விற்கப்படும் ‘மிளகு ஸ்பிரே’யையோ அல்லது மிளகாய் பொடியையோ பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ளலாம். தனியாக வெளியே செல்லும் போது பெண்கள் ‘கவரிங்’ நகைகளை அணிவது பாதுகாப்பானது.

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களின் கவனத்துக்கு…

* வீட்டில் தனியாக இருக்கும் போது யாராவது அழைப்பு மணியை அழுத்தினால், வந்திருப்பது யார்? என்பதை பார்த்து தெரிந்து கொண்ட பின்னரே உள்ளே அனுமதியுங்கள்.

* நீங்கள் மட்டும் வீட்டில் இருந்தால், கதவை திறக்காமல் ஜன்னல் வழியாகவே பார்த்து பேசி விட்டு அனுப்பி விடுவது நல்லது. வீட்டின் முன்பகுதியை அது போன்ற வசதியுடன் வடிவமைத்துக் கொள்ளவது நல்லது. வீட்டில் குடிநீர் குழாயை பழுது பார்க்கவோ, மின் சாதனங்களை பழுது பார்க்கவோ, வந்திருப்பதாக யாராவது கூறினால் இப்போது, வீட்டில் யாரும் இல்லை. நாளைக்கு வாருங்கள் என்று கூறிவிடுங்கள். வீட்டில் தனியாக இருக்கும் போது, எக்காரணம் கொண்டும் வேலையாட்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம்.

* வீட்டில் தனியாக இருக்கும் போது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் பதட்டப்படாமல் 100-க்கு போன் செய்து போலீஸ் உதவியை நாடுங்கள் அல்லது கூச்சல் போட்டு அருகில் இருப்பவர்களை அழையுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button