ஆரோக்கிய உணவு

இதய நோய் வராமல் தவிர்க்க எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் தெரியுமா?அப்ப இத படிங்க!

இன்றைக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்பது மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய் தான். இதற்கு முழு முதற் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தான். மாரடைப்பு வராமல் தடுக்க நாம் பெரும் மெனக்கடல்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. சின்ன சின்ன மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது.

எல்லாம் முற்றிய பிறகு நோயின் தாக்கத்தை குறைக்க பாடுபடுவதை விட முன் கூட்டியே நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னாலேயே நீங்கள் எச்சரிகையாக இருப்பது நல்லது.

நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம் உங்கள் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால். நினைத்தாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது தானே அப்படியானால் விழிப்புணர்வுடன் சில விஷயங்களை கடைபிடித்திடுங்கள்.

உணவு : முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கிய உணவுமுறை : ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1800 – 2400 கிலோ காலரி வரை தான் தேவைப்படுகிறது. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

உணவு வகைகள் : அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசியையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.

கொழுப்பு : கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு.

எண்ணெய் : சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும். ‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் .

ஒமேகா 3 : இந்தச் சத்தை மீன்,நண்டு,இறால், கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிக்கக் கூடாது.

காய்கறி மற்றும் பழங்கள் : அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது.

கீரைகள் : சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது.

பெண்களுக்கு : மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதய நோய் வராமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்.

புகை : இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால்: கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படியெனில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால்,தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, இரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

உடல் எடை: இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் : இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் ரத்தத்தில் சேர்ந்திருக்கக்கூடிய அதிக சர்க்கரையும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும்.

ட்ரான்ஸ் கொழுப்புகள்: ஃபேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.

வைட்டமின்: ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

மனஅழுத்தம்: அதிகமான வேலைப் பளுவின் காரணமாக நிறைய பேர் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.இதனால் இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

cover 20 1511182404

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button