மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா டெட்டனஸ் தொற்றை தடுக்கும் இந்த வகை மஞ்சள் !

தமிழர்களின் அன்றாட வாழ்வில், சமையலில் இருந்து, வைத்தியம் வரை அனைத்து தேவைக்கும் தொன்று தொட்டு கலந்து வரும் ஒரு மூலிகை மருந்தாகத் திகழும் மஞ்சளில், விராலி மஞ்சள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் எனும் வகைகள் அதிகம் பயன்பட்டாலும், மற்றொரு வகை மஞ்சளும், பயன்பாட்டில் உண்டு. மனிதர்களின் உடல் நலத்தைக் காக்கத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகளில், அதிக அளவில் பயன்படும் அந்த மஞ்சள், மர மஞ்சள் என்று அழைக்கப்படுகிறது.

இதர மஞ்சளைப் போல, இதன் வேரில் உள்ள கிழங்குகள் பயனாவதில்லை, மாறாக, மர மஞ்சளின் தண்டுப் பகுதியே, மருத்துவ குண நலன்கள் மிக்கதாகக் காணப்படுகிறது.

மர மஞ்சள், அடர்ந்த காடுகளில், வளரக் கூடிய சிறிய வகைத் தாவரமாகும். சிறந்த கிருமி நாசினி, உடல் காயங்கள், சர்க்கரை பாதிப்பை சரி செய்யும், சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது.

செரிமானமின்மை மற்றும் அல்சர் எனும் குடற்புண்ணை ஆற்றுவதில் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. உடல் சூட்டை சரி செய்து, பசியின்மையைப் போக்கும். மர மஞ்சளில் உள்ள பெர்பெரின் எனும் வேதிப் பொருளே, இதன் அரிய நற்பலன்களுக்கு மூல காரணமாக, அமைகிறது.

நன்கு காய வைத்து பதப்படுத்தப்பட்ட நறுமணமுள்ள மர மஞ்சள் தண்டுகள், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. மர மஞ்சளின் மூலப்பொருளான பெர்பெரின், பல்வேறு வியாதிகள் போக்கும் மேலை மருந்துகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மர மஞ்சள் பெருமளவில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கைக்குழந்தைகளின் உடலைத் தேற்றும் மர மஞ்சள்:
தாய்ப்பால் பருகும் குழந்தைகள், சமயத்தில் தாய் உண்ணும் உணவுகளால், தாய்ப்பாலில் ஏற்படும் பாதிப்புகளால், செரிமானமின்மை ஏற்பட்டு, தாய்ப்பாலில் நாட்டம் விலகி, உடல் சூடு மற்றும் வயிறு பாதித்து, உடல் வலி மற்றும் ஜுரம் ஏற்பட்டு, உடல் இளைத்து, குழந்தைகள் சவலைப் பிள்ளைகள் போலக் காணப்படுவர். இத்தகைய பாதிப்புகள் விலக,

மர மஞ்சள் சூரணம் எனும் பொடியை, சிறிதளவு எடுத்து, தண்ணீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, சிறிதளவு பாலாடையில் இட்டு, குழந்தையின் வாயில் புகட்டி வர, பாதிப்புகள் எல்லாம் விலகி, குழந்தைகள் உடல் மெலிவு மாறி, உடல் நன்கு தேறும்.

டெட்டனஸ் கிருமிகளிலிருந்து காக்கும் :
அடிபட்ட காயங்கள் மூலம், கிருமிகள் உடலில் தொற்றை ஏற்படுத்தாமல் தடுக்க சிறந்த கிருமி நாசினியான, மர மஞ்சள் தண்டுகள் அல்லது பொடியை சிறிது தண்ணீரில் இட்டு, நன்கு சூடாக்கி, ஆற வைத்து, அந்த நீரில் சிறிதளவு எடுத்துப் பருகி வர, காயங்களின் மூலம், உடலில் டெட்டனஸ் கிருமிகள் பரவுவதைத் தடுத்து அழித்து, காயத்தை ஆற்றும் சிறந்த மருந்தாக, மர மஞ்சள் செயல்படுகிறது.மேலும், மர மஞ்சள் பொடியை, தேங்காயெண்ணையில் கலந்து, காயங்களின் மேல் தடவி வர, காயங்கள் விரைவில் ஆறி விடும்.

முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைய:
மர மஞ்சள் தூளைப் பாலில் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொண்டு, முகத்தில் முழுவதுமாகத் தடவி, சற்று நேரம் ஊறிய பின், முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு அலசி வர, முகத்தில் தோன்றிய பருக்கள் மற்றும் கரும் புள்ளிகள் சில நாட்களில் மறைந்து விடும்.

உடல் வலி போக்கும் மர மஞ்சள் குளியல்.
குளிக்கும் நீரை சுட வைத்து, அந்த நீரில் மர மஞ்சள் தூளை இட்டு சற்று சூடாக்கி, உடல் பொறுக்கும் சூட்டில் குளித்து வர, உடல் உழைப்பால் ஏற்பட்ட உடலின் தசை வலிகள் மற்றும் உடல் வலி நீங்கி, உடலில் புத்துணர்வு ஏற்படும்.

மஞ்சள் காமாலை வியாதியைப் போக்கும் :
மர மஞ்சள் பொடியை, தேனில் கலந்து, தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை வியாதி விரைவில் குணமாகும். கல்லீரல் சம்பந்தப் பட்ட நோய்களும் விரைவில் குணமடையும்.

பெண்களின் மாதாந்திர பாதிப்புகளை சீராக்கும் : சிறிது மர மஞ்சள் தூளைத் தேனில் கலந்து, பாதிப்புள்ள பெண்கள் தினமும் சாப்பிட்டு வர, மாதாந்திர விலக்கு நாட்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு போன்ற பாதிப்புகள், விலகி விடும்.

சரும வியாதிகளைப் போக்கும் : மர மஞ்சள் சூரணத்தை சிறிது எடுத்து, தண்ணீரில் இட்டு நன்கு சூடாக்கி, ஆற வைத்து, தினமும் இரு வேளை பருகி வர, கிருமிகளால் பாதிப்படைந்த உடல் இரத்தம் தூய்மையாகி, அதனால், சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகன்று, சருமம் நல்ல பொலிவாகும். இந்த மர மஞ்சள் குடிநீரே, நாவின் சுவை நரம்புகளை சீராக்கி, நாவின் சுவை உணர்வை அதிகரிக்கும் ஆற்றலும் மிக்கது.

கண் வியாதிகள் போக்கும் மர மஞ்சள் : மர மஞ்சள் தூளை சிறிது தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி, மேலும் காய்ச்சி வர, தண்ணீர் தைலப் பதத்தில் இருகி வரும், அதை நிழலில் உலர்த்தி, சேகரித்து வைத்துக் கொண்டு, பின்னர் அதில் சிறிதளவு எடுத்து, படிகாரத் தூள் கலந்து, நெய்யில் குழைத்து, கண் இமைகளில் மை போல மெலிதாக இட்டு வர, கண்களில் தோன்றும் கண் சிவத்தல், கண் அழுக்கு மற்றும் இதர கண் வியாதிகள் சரியாகும்.

விஷக்கடி போக்கும் : மர மஞ்சள் பொடியை சிறிதளவு எடுத்து, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் சுண்டி வரும்போது, எடுத்து ஆற வைத்து பருகி வர, குரங்கு, பூனை மற்றும் வீட்டு விலங்குகளின் கடி விஷம், முறிந்து விடும்.

சர்க்கரை நோய்க்கு : சர்க்கரை பாதிப்பு மற்றும் நாட்பட்ட வியாதிகளுக்கு, மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயங்களில், மர மஞ்சளை உடலுக்கு வலு சேர்க்கும் மருந்தாக சேர்த்து பயன்படுத்தி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, வியாதிகள் குணமாகும்.

சிறுநீர் பாதிப்புகளை சரிசெய்யும் மர மஞ்சள்: மர மஞ்சள் தூளைக் காய்ச்சி, தைலப் பதத்தில் எடுத்து உலர்த்திக் கொண்டு, அதை சிறிது எடுத்து, நெல்லிக்காய் தூளுடன் சேர்த்து, கால் லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி, பின்னர் ஆற வைத்துப் பருகிவர, கிருமிகளின் தொற்றால், சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட வீக்கம், அடைப்பு மற்றும் வலிகள் நீங்கும்.

இரத்தக் கட்டு பாதிப்புகள் விலக: மர மஞ்சள் சூரணத்தை சிறிது நீரில் கலந்து, நன்கு அரைத்து, அடிபட்டதால் உடலில் ஏற்பட்ட இரத்தக் கட்டு மற்றும் வீக்கத்தின் மேல் தடவி வர, இரத்தக் கட்டு கரைந்து, வீக்கங்கள் வடிந்து, பாதிப்புகள் விலகி விடும்.

cover 04 1512368489

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button