மருத்துவ குறிப்பு

கற்ப மூலிகை மூக்கிரட்டையை கேள்விப்பட்டிருக்கீங்களா?உங்க உடல் எடையைக் குறைத்து, இளமைப்பொலிவைத் தரும் தெரியுமா?

நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பலன்களின் மூலம், அறிந்திருப்போம்.

அந்த வகையில் களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும், காயகற்ப மூலிகையாக விளங்குகிறது என்பதை, அவர்களில் பலர் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு நகரங்களில் மூலிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பு, கிராமங்களில் இன்னும் பரவலாகவில்லை, என்பது ஆச்சரியம் என்றால், அதை விட மற்றுமொரு ஆச்சர்யம், பெரும்பாலான கிராம மக்கள் சில மூலிகைகளின் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள் கூட அறியாமல் இருப்பது தான்.

எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தன் தனித் தன்மையை நிரூபித்து வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற் செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.

சிறுநீரக செயல்பாட்டிற்கு : மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.

வயிற்று பாதிப்புகள் : மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.

புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும். மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.

மூக்கிரட்டை இலைகளின் பயன்கள் மூக்கிரட்டை இலைகள், கீழாநெல்லி இலைகள் மற்றும் பொன்னாங்கன்னி இலைகளை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.

உடல் எடை குறைய : மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.

மலச்சிக்கல் : மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப் பொலிவுடன் காணப்படும். மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.

மூக்கிரட்டை வேரின் பயன்கள்: மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.

சரும வியாதிகள் : மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.

அலர்ஜி : உணவாலோ வேறு பாதிப்பின் காரணமாகவோ, உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது, அதனால், உடலில் நமைச்சல் எனும் அரிப்பு உண்டாகும். இதனால், எப்போதும், கைகளால் அரிப்புள்ள பகுதியை சொரிய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதுவே, முக்கியமான அலுவல்களில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் சொரிய வைத்து, மற்றவர்கள் என்ன என்று கேட்கும் அளவுக்கு, மிக்க ஒரு மன வேதனையை அளிக்கும் செயலாக மாறிவிடும். இந்த பாதிப்பைப் போக்க, உலர்த்திய மூக்கிரட்டை வேரை சற்று, இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, ஆற வைத்து, அந்த நீரில் சற்று விளக்கெண்ணை கலந்து தினமும் இரு வேளை பருகி வர, ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல் அரிப்பு விலகி, சருமத்தில் புதுப் பொலிவு ஏற்படும்.

மூச்சுத் திணறல் : உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

சிறுநீரக கற்களுக்கு : சிறுநீரக பாதிப்புகளின் கடுமையான விளைவுகளால், இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரிப்பால், சிறுநீரகங்களின் இயக்கம் செயல் இழக்கும் அபாய நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர, மூக்கிரட்டை வேரை சிறிது எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு, அதில் சிறிது சோம்பு சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்து, தினமும் பருகி வர, பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதிப்புகள் மெல்ல விலகும், சிறுநீர் அடைப்பை நீக்கி, சிறுநீரகத்தைக் காத்து, சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது.

மலக்குடலை சுத்தம் செய்ய : இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.

கண் வியாதி : மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சிறிதளவு சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும்.

உயிரணுக்கள் அதிகரிக்க : கற்ப மூலிகை மூக்கிரட்டை செடியின் விதைகள், ஆண்களின் உயிரணுக்களின் ஆற்றலையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் தன்மை மிக்கது. பெண்களின் மாதாந்திர பாதிப்புகளை சரியாக்கி, அவர்களின் உடல் நலத்தை காக்கும்

cover 09 1512804316

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button