மருத்துவ குறிப்பு

காச நோயா…கவலை வேண்டாம்

 

காச நோயா...கவலை வேண்டாம்

‘டிபி’ எனப்படும் காச நோய் முன்பு மருத்துவ உலகிற்கு சவாலாக இருந்தது. ஆனால் இப்பொழுது எளிதாக மருத்துவ உலகில் கையாளப்படுகின்றது. இது மைக்கோ பாக்டீரியா, அநேகமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோஸிஸ் என்ற நோய் கிருமியால் ஏற்படுகின்றது.

பொதுவாக இது நுரையீரலை பாதிக்கின்றது. எனினும் உடலின் எந்த பகுதியிலும் பாதிப்பு ஏற்படலாம். காற்றின் மூலமே பரவும். இது ஒருவரின் இருமல், தும்மல், சளி இவற்றின் மூலம் அடுத்தவருக்குப் பரவுகின்றது. சிகிச்சை எடுக்காவிடில் மிகவும் ஆபத்தாகி உயிரை பறித்து விடும் அபாயம் கொண்டது.

நீண்ட கால இருமல், ரத்தத்தோடு கூடிய எச்சில், இரவு வியர்வை, திடீரென எடை குறைதல், மதியத்திற்கு மேல் ஜூரம் என்ற பல அறிகுறிகளைக் காட்டும். எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் முதல் இன்றைய நவீன மருத்துவ பரிசோதனைகள் வரை இருப்பது இந்நோயை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த முடிகின்றது.

உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த நோயால் பாதித்திருப்பதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. 2006-ம் ஆண்டிலிருந்து இந்த பாதிப்பின் அளவு குறைந்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இந்நோயின் பாதிப்பு கூடுதலாக இருப்பதாகவும் தெரிகின்றது. எய்ட்ஸ் நோயின் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக காசநோயின் பாதிப்பும் கூடுகின்றது.

‘டிபி’ எனப்படும் காசநோய் உடலின் எந்த பகுதியையும் தாக்கக் கூடியது. அதிகமாக நுரையீரலைத் தாக்கும். இக்கிருமியால் தாக்கப்படும் மக்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பர். ஏனெனில் இது அமைதியாக பல காலம் அப்படியே இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதோ, முதுமையின் பொழுதோ, எய்ட்ஸ் தாக்குதலின் பொழுதோ நோயின் வீரியம் ஆரம்பிக்கும். டிபி பாதிப்பு வீரியம் இல்லாது இருந்தாலும் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

நோயின் அறிகுறிகள் :

* உடல் நலம் சரியின்மை

* இருமல், எச்சிலில் ரத்தம்

* அதிக சோர்வு

* மூச்சு வாங்குதல்

* எடை குறைவு

* ஜூரம்

* இரவு வியர்வை

* நெஞ்சில் வலி

* பசியின்மை போன்றவை ஆகும். டி.பி. நோய் பாதிப்பு உள்ளதா என்பதை மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். சிறுகுழந்தைகள், முதியோர் கையின் சருமத்தில் சிறு ஊசி மூலம் சிறிதளவு ஒரு குறிப்பிட்ட திரவத்தினை செலுத்தி 48 மணி நேரத்தில் அந்த இடத்தில் அறிகுறி பார்த்து கண்டு பிடிப்பது துல்லியமானதாக இருக்கும்.

அதோடு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை போன் றவையும் இந்த நோயினை கண்டு பிடிக்க மிகவும் உதவும். அதிக நெரிசல் உள்ள இடங்கள், நோய் பாதிப்பு உள்ளவர்களோடு அதிகம் இருப்பது போன்றவை நோய் பரவும் காரணங்களாகின்றன. பொதுவாக ஆப்ரிக்காவில் சில பகுதிகள் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வசிப்பதும், பயணம் செய்வதும் டி.பி., கிருமி பாதிப்பின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.

குடிபழக்கம், புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த கிருமி தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று கூறப்படுகின்றது. முதுகுவலி, இடுப்பு மற்றும் மூட்டு பாதிப்பு, மூளை, கல்லீரல், சிறுநீரகம், இருதயம் போன்ற வற்றிலும் கடும் பாதிப்பாக ரத்தத்தின் மூலம் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது. 6 மாதம் முதல் 9 மாதத்துக்குள் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் இந்த நோயிலிருந்து நிவர்த்தி பெற முடியும்.

முறையாக மாத்திரைகளை விடாது தொடர்ந்து மருத்துவர் கூறும் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு உடையவர்கள் நல்ல காற்றோட்டமான அறையில் இருக்க வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் வாயில் கைகுட்டை வைத்து மூடிக்கொள்வது மிக அவசியம். முதலில் சில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து கண்டிப்பாய் ஒதுங்கி இருப்பதே பிறருக்கு இந்நோய் பரவாமல் தவிர்க்கும்.

சிறு குழந்தைகளுக்கு இந்த நோய் வரா மல் தடுக்க ‘தடுப்பு ஊசிகளை’ அவசியம் போட வேண்டும். உலக சுகாதார மையம் 2015-2035-க்குள் காச நோயால் இறப்பவர்களை 95 சத வீதம் குறைக்க வேண்டும் என்றும் புது நோயாளிகள் உருவாகுவதை 90 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஏனெனில் உலகிலேயே காச நோய்தான் தொற்று நோய்களில் முதன்மையான கொல்லும் நோயாக இருக்கின்றது. மிகக் குறைந்த வருமானம், நடுத்தர வருமான முடையோர் இடையே அதிகம் காணப்படுகின்றது. பெண்களில் 15 முதல் 44 வயதிற்குள்ளோர் இந்நோயால் அதிகம் இறக்கின்றனர். சத்து இல்லாத உணவும் டிபி தாக்குதலுக்கு காரணம். எனவே கீழ்கண்ட உணவுகள் டிபி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. அவை:

* ஆரஞ்சு, காரட், அன்னாசி, நெல்லி, தக்காளி பழ சாறுகள்

* அடர்ந்த பச்சை வகை கீரைகள்

* பாகற்காய், முருங்கை, பசலை, பச்சை காலிப்ளவர்

* பருப்பு வகைகள் முழுதானியங்கள்

* புரதம் மிக்க கொழுப்பு குறைந்த அசைவ உணவு போன்றவை ஆகும்.

டிபி நோயாளிகள் அவசியம் தவிர்க்க வேண்டியது :

* புகையிலை

* மது

* அளவற்ற காபி டீ

* வெள்ளை பிரட்,மைதா,வெள்ளைஅரிசி

* அதிக கொழுப்பு சில மருந்துகளால் இந்நோயாளிகளுக்கு பசியின்மை, வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வயிற்றில் இருந்து வலி போன்றவை ஏற்படலாம். இதற்கு மருத்துவ ஆலோசனை பெரிதும் உதவும்.

* டிபி முழுமையாய் குணப்படுத்தக் கூடிய ஒன்றே என்பதனை நன்கு உணருங்கள்.

* பொது இடங்களில் துப்புவதை இனியாவது நிறுத்துங்கள். இது சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய சேவையாக இருக்கட்டும்.

* டிபி பரிசோதனைகளை முழுமையாய் செய்து கொள்ளுங்கள்.

* டிபி மருந்துகளை டாக்டர் சொல்லும் வரை நிறுத்தாதீர்கள்.

அனைவருக்கும் ஏற்ற உணவு :

* ஆப்பிள்: கலோரி சத்து குறைந்தது. பல நன்மைகளைக் கொண்டது. நார்ச்சத்து உடையது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கெட்ட கொழுப்பை நீக்குவது. தோலோடு சாப்பிடுவதே நல்லது.

* பார்லி: அரிசிக்குப் பதிலாக இதனை உபயோகிப்பதால் பல மணி நேரம் சர்க்கரை அளவு சீராய் இருக்கும்.

* பீன்ஸ் கொட்டை அல்லது பீன்ஸ்: நார்ச்சத்து மிகுந்தது. புரதம் உடையது. சர்க்கரை அளவை இழுத்துப் பிடிக்கும்.

* ப்ரோகோலி எனப்படும் பச்சை காலிப்ளவர்: அதிக நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. வைட்டமின் ‘சி’ சத்து நிரம்பியது. ‘க்ரோபியம்‘ கொண்டது. க்ரோபியம் சர்க்கரை அளவை வெகுவாய் கட்டுப்பாட்டில் வைக்கும்.

* கேரட்: காரட் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டும் எனினும் இதில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவு. பீட்டா கரோடின் நிரம்பியது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதே.

* முட்டையின் வெள்ளை கரு, மீன், ப்ளாக்ஸ் விதைகள் இவை அனைத்துமே சிறந்த உணவுதான்.

* பால், தயிர் இரண்டுமே கொழுப்பு நீக்கியதாக இருக்க வேண்டும். புரதமும், கால்சியமும் ஆரோக்கியம் அளிப்பதோடு எடை குறையவும் உதவும்.

* கொட்டைகள் சிறிய அளவில் சிறந்த உணவு.

* ஆலிவ் எண்ணெய்: இது எண்ணெயில் தங்கம் போன்றது. இரத்தக் குழாய்களை சீராக வைக்க, உடல் வீக்கங்களைக் குறைக்க மிகவும் நல்லது.

* சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து எடுத்து சாப்பிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button