ஆரோக்கிய உணவு

உங்கள் கவனத்துக்கு ஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க!

பொதுவாக தென் தமிழகம் மற்றும் மலையோர கிராமங்களில்தான் அதிகளவில் ஆட்டுப்பாலை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆட்டுப்பாலுக்கு ஏற்பட்ட திடீர் மவுசால் ஆட்டின் உரிமையாளர்கள் ஒரு லிட்டர் ஆட்டுப்பாலை ரூபாய் 140 வரையிலும் கூட விற்கிறார்கள். ஆட்டுப்பாலில் அப்படி என்னதான் சிறப்பு என்று ஆயுர்வேத மருத்துவர் கரோலினிடம் கேட்டோம்…

‘‘ஆட்டுப்பால் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் நம் தேசத்தந்தை மஹாத்மா காந்திதான். இயற்கை மருத்துவ முறைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட காந்தியடிகள் விரும்பி அருந்தியது ஆட்டுப்பால் என்பதையும் நோயின்றி ஆரோக்கியத்துடன் அவர் வாழ்ந்ததற்கு ஆட்டுப்பாலும் முக்கியக் காரணம் என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

பசு, எருமை மாடுகளின் பாலைக் காட்டிலும் ஆட்டுப் பாலில் சில கூடுதல் மருத்துவ குணங்கள் உள்ளன. ஆட்டுப்பால் தாய்ப்பாலைப் போன்று இருப்பதால், மாட்டுப்பாலை அருந்துவதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப்பால் அருந்துவதால் ஏற்படுவதில்லை. இதற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதமான ஆல்பா எஸ் 1 கேசினின் அளவு ஆட்டுப்பாலில் குறைவு என்பதே காரணம். ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை.

மாட்டுப்பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது சில ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது.

இந்த லாக்டேஸ் அளவு மிகக் குறைவாக அல்லது முற்றிலுமாக இல்லாமல் இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் (Lactose intolerence) அவதிப்படுகின்றனர்.

ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை ஏற்படுவதில்லை’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் கரோலின், அதன் மருத்துவரீதியான பலன்களை இன்னும் அழுத்தமாகத் தொடர்ந்து விவரிக்கிறார்.

எலும்புத்தேய்வு ஏற்படாமல் காக்கிறது250 மிலி பசுவின் பாலில் 276 மி.கி அளவு கால்சியமும் அதே அளவு ஆட்டுப் பாலில் 327 மி.கி அளவு கால்சியமும் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களுக்கு மிகுந்த வன்மையைக் கொடுக்கக் கூடியது. எலும்பு தேய்வு என்னும் ஆஸ்டியோபோரோசிஸ்(Osteoporosis) ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான கால்சியத்தில் 35-40 % ஒரு கப் ஆட்டுப்பாலில் நமக்குக் கிடைத்து விடுகிறது.

இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறதுஆட்டுப்பாலில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. உடலிலுள்ள கொழுப்பு அமிலங்களை சரி செய்வதின் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.

அதன் மூலமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ஆட்டுப்பாலில் அதிகளவில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது .பால் செரியாமை அல்லது பால் எதிரெடுத்தல்பசுவின் பாலில் அதிகளவில் லாக்டோஸ் என்னும் சர்க்கரை உள்ளது.

அதை செரிக்க செய்யக்கூடிய லாக்டேஸ் என்னும் நொதி குறைவாக இருப்பின் பாலைச் செரிக்கச் செய்ய முடியாமல் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் நோய்நிலை ஏற்படும். ஆனால், ஆட்டுப்பாலில் லாக்டோஸ் குறைந்த அளவில் இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.

ஆட்டுப்பாலில் இருக்கக்கூடிய கொழுப்பு அணுக்கள் பசுவின் பாலில் இருப்பதை விட மிக சிறியதாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. மேலும் ஜீரணப்பாதையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் இதிலுள்ள கொழுப்பு அணுக்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியதில்லை.

நோய் எதிர்ப்பு சக்திநோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய செலினியம் என்னும் சத்து ஆட்டுப்பாலில் இருப்பதால் நோயின்றி வாழ துணை செய்கிறது. இதிலுள்ள சத்துக்கள் ஏறக்குறைய தாய்ப்பாலில் இருப்பதை போலவே உள்ளதால் மிகச்சிறந்த உணவாகிறது.உயிர்ச்சத்துக்கள்புரதம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, பொட்டாசியம், செலினியம், போன்ற சத்துக்கள் ஆட்டுப்பாலில் அடங்கியுள்ளன.

இன்னும் சில முக்கியமான பயன்கள்

*ஆட்டுப்பாலில் இரும்புச்சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் உணவுப்பாதையில் உறிஞ்சப்படுவதைத் தூண்டுவிப்பதால் சில நோய்களுக்கு மருந்துகள் வழங்கும்போது வெள்ளாட்டுப்பாலும் சேர்த்துக்கொண்டால் நோய் விரைவில் நீங்கும்.

* வெள்ளாட்டுப் பாலுடன் நீர் சேர்த்துக் காய்ச்சி கற்கண்டுத் தூள் சேர்த்து காலை மாலை அருந்தினால் கப நோய்கள் நீங்கும்.

*கல்லீரல் மண்ணீரல் நோய்களினால் வருந்துபவர்களுக்கு வெள்ளாட்டுப் பாலை உணவாக வழங்கலாம்.

*முக்கியமாக பசுவுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் உயிர் ஊக்கிகள் போன்றவை ஆடுகளில் பயன்படுத்தபடாததால் நச்சுத்தன்மை குறைந்த அல்லது நச்சுத்தன்மை அற்ற உணவாக இதைக் கொள்ளலாம்.

*வெள்ளாட்டுப் பாலானது சித்த மருத்துவத்தில் அனேக மருந்துகள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தனை சிறப்புமிக்க ஆட்டுப்பாலை வாய்ப்பு கிடைத்தால் நாமும் அருந்தி பயன்பெறலாமே!ht4451702412

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button