தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும்….
சில குறிப்பிட்ட நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகமான ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ முடிக்கு அடிக்கடி உபயோகிப்பது, மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் முடி அதிகமாக கொட்டுகின்றது. நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். இங்கே பொதுவாக தவறான முறையில் சீப்பை உபயோகப்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் திருத்தி கொள்ளுங்கள்.
முதலில் முடியில் உள்ள சிக்கல்களை போக்க சீப்பை வேர்களில் இருந்து உபயோகிக்காமல் முடியின் பாதியில் இருந்து உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்து சிக்கல்களை நீக்கிய பின்பு முடியின் வேர்களில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தலாம்.
ஆரம்பத்திலேயே சிக்கல்களை எடுக்காமல் வேரில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தினால் முடி மேலும் சிக்கலாகி முடி பலவீனமாகும். இதனால் பலவீனமடைந்த முடிகள் கொட்ட ஆரம்பிக்கும் எனவே அதிகப்படியான முடி கொட்டும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது முடியைப் பராமரிக்க பல்வேறு ரசாயனப் பொருட்கள் மார்க்கெட்களில் கிடைக்கிறது.
கிரீம்கள், சீரம், பேஸ்ட் போன்ற பொருட்கள் ஸ்டைலிங் காரணமாக முடிக்கு உபயோகப்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இவற்றை முடியில் உபயோகித்த பிறகு சீப்பை பயன்படுத்தாதீர்கள். உங்கள் விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
சில நேரங்களில் சிலர் முடியை சீப்பு கொண்டு நுனியில் இருந்து வேர் நோக்கி சீவுகின்றனர். இது முடி அடர்த்தியாக அதிகமாக இருப்பது போன்று காட்சி அளிக்க உதவுகிறது. இது ஒரு தந்திரம் தான் என்றாலும் அடிக்கடி இவ்வாறு செய்வதால் தலையின் புறத்தோல் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்து அடர்த்தி குறையும். எனவே முடிக்கு பாதிப்பில்லாமல் முடியை அடர்த்தியாக காட்ட சில முடி ஸ்ப்ரே (அதிக ரசாயனம் கலக்காதது) உபயோகப்படுத்தலாம்.