கூந்தல் பராமரிப்பு

முடி உதிர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்….

பெண்கள் தங்கள் அழகை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு ஆயுதமாக பயன்படுத்துவது முடியையே. முடி உதிர்வு ஆரம்பித்து விட்டால் அவர்களின் கவலையும் அதிகரித்து விடுவது சாதரணமானதே.

முடி உதிர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இரசாயண முடி சிகிச்சைகள், சூழல் மாசுக்கள், அதிகமாக சூரிய ஒளி படுதல் போன்றவையே. இந்தப் பிரச்சினையை பல பெண்கள் சந்தித்து வந்தாலும் சரியான முடி பராமரிப்பு இருந்தால் முடி உடைவதைத் தடுக்க முடியும்.

பல முயற்சிகளில் பயன் கிடைக்காது சோர்ந்து போன உங்களுக்கு சில ஆயுர்வேத முறைகளைப் பற்றி கூறவுள்ளோம். முடி உதிர்வு ஆரம்பித்தவுடனேயே ஆயுர்வேத முறையைப் பின்பற்ற ஆரம்பித்தால் முழுமையான தீர்வைப் பெற முடியும்.

hair3 1

1. துளசி
துளசி சிறந்த மூலிகைச் செடி. துளசி எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வந்தால் வேகமாக முடி வளர்ச்சியடையும்.

தேவையானவை:
• துளசி இலைகள் சிறிதளவு.
• தேங்காய் எண்ணெய்.

செய்முறை:
துளசி இலையை வெயிலில் இரண்டு நாட்கள் உலர வைக்கவும். பின் தேங்காய் எண்ணெய்யில் அதனை ஊற வைக்கவும். தேங்காய் எண்ணெய் போத்தலை சூரிய ஒளி படாதவாறு வைப்பது சிறந்தது. அந்த எண்ணெய் இளம்பச்சை நிறமாக மாறியவுடன் இரவில் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

2. நெல்லிக்காய்.
கனியுப்புக்கள், விட்டமின்கள், அண்டிஒக்ளிடன் நிறைந்த நெல்லிக்காய் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி வருகின்றது. இதனால் வலிமையான ஆரோக்கியமான கூந்தல் கிடைப்பதுடன், முடியின் கருமை நிறம் பாதிப்படையாமல் வைத்திருக்கும்.

தேவையானவை:
• 6 மேசைக்கரண்டி நெல்லிக்காய் பவுடர்.
• நீர்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீரையும், நெல்லிக்காய் பவுடரையும் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை நன்றாக தேய்த்து, 30 நிமிடங்களின் பின் சம்போ போட்டுக் குளிக்கவும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் செய்வது சிறப்பானது.

3. சீயாக்காய்.
சீயாக்காய் இயற்கையான சம்போ. இது முடியின் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், பொடுகில் இருந்தும் தீர்வைத் தருகிறது.

தேவையான பொருட்கள்:
• 5 மேசைக்கரண்டி சீயாக்காய் பவுடர்.
• நீர்.

செய்முறை:
சீயாக்காயை நீரில் கலந்து சம்போவைப் போன்று தலையில் பயன்படுத்தி 5 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதனால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

4. பிராஹ்மி:
இது முடிக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன். மூளைக்கும் ஊட்டச்சத்தை வழங்கி ஞாபக சக்தி, அறிவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.

தேவையானவை:
• 2 மேசைக்கரண்டி பிராஹ்மி பவுடர்.
• 2 மேசைக்கரண்டி நெல்லிக்காய் பவுடர்.
• 2 மேசைக்கரண்டி அஸ்வகந்தா பவுடர்.
• ½ கப் தயிர்.

செய்முறை:
எல்லா சேர்மானங்களையும் ஒன்றாகச் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். இதனை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை தடவி, 1 மணி நேரத்தின் பின் சம்போ பயன்படுத்திக் கழுவவும்.

5. வேம்பு:
வேம்பு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தினை வழங்கி வருகின்றது.

தேவையானவை:
• ஒரு கையளவு வேப்பிலை.
• ஒரு கப் நீர்.

செய்முறை:
வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை குளிர வைக்கவும். அந்த நீரைப் பயன்படுத்தி தலையினைக் கழுவவும்.

hair3 1
6. வெந்தயம்.
வெந்தயம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வாசனைத் திரவியம். இது பொடுகை நீக்குவதுடன், தலையின் ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

தேவையானவை:
• 2 மேசைக்கரண்டி வெந்தயம்.
• 2 மேசைக்கரண்டி பச்சைக் கடலை.
• 2 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு.
• கையளவு கறிவேப்பிலை.

செய்முறை:
சேர்மானங்கள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து அதனை சம்போ போல் வாரத்தில் இரு தடவை பயன்படுத்துவதனால் முடி உதிர்வு குறைவடையும்.

7. கற்றாளை:
கற்றாளை தலைக்கு ஊட்டச்சத்தை வழங்கி அதன் ஆரோக்கியத்தைப் பேணுகிறது.

தேவையானவை:
• ½ கப் கற்றாளைச் சாறு.
• 3 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்.
• 2 மேசைக்கரண்டி தேன்.

செய்முறை:
சேர்மானங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கலவையாக எடுத்துக் கொள்ளவும். இதனை வாரத்திற்கு இரு தடவை தலையில் தேய்த்து தலையைக் கழுவவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button