ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்உடல் பயிற்சி

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

ஒரு பிரச்னை நம்ம உடம்பு, எண்ணம், உணர்வு, செயல்னு எல்லாத்தையும் பாதிக்கும்; நினைவுத்திறனை அழித்தல், படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, எலும்பின் அடர்த்தி குறைதல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், இதயப் பிரச்னைகள்னு அத்தனையையும் வரவழைக்கும்னா அதை நாம எவ்ளோ சீரியஸா எடுத்துக்கணும்? ஆனா, நாம அதைக் கண்டுக்கறதே இல்லை.

இவ்ளோ பிரச்னைகளையும் ஏற்படுத்துறது நம்ம உடலில் இருக்குற `கார்டிசால்’ங்கிற ஹார்மோன்தான்.

heavy

அவுத்துவிட்டா ஊரையே துவம்சம் செய்யக்கூடிய அரக்கன் இவன். ஆனா, ஊர்க்காவலனும் இவன்தான். நமக்கு ஆபத்து நேரும் காலங்களில் நம்ம உடம்பைக் காப்பாத்துறதும் இதே ஹார்மோன்தான். அதனால இதைத் தவிர்க்கவும் முடியாது.

கார்ட்டிசால் ஹார்மோனை அதிகப்படுத்தி, நம்ம உடம்புக்கு பாதிப்பை ஏற்படுத்துறது எது தெரியுமா? நாம `நல்லது’னு நினைச்சிட்டிருக்குற ‘உழைப்பு.

’ அதாவது அளவுக்கு அதிகமான உழைப்பு, அதனால வர்ற ஸ்ட்ரெஸ். தொடர்ந்து உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சியில ஈடுபடுற வீரர்கள், வீராங்கனைகளுக்கும் கூட அவங்களோட வேலைப் பளு காரணமா உருவாகிற ஸ்ட்ரெஸ், உடல் பலவீனத்தை ஏற்படுத்துறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

1996-ம் ஆண்டில் பெல்ஜியத்தைச் சேர்ந்த சைக்கிள் வீரர் ஜெஃப் கெய்ஸ் (Jef Geys), பயிற்சி செய்யுறப்போ அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்திருக்கார். போட்டிக்கு ரெண்டு வாரம் இருந்த நிலைமையில அவரோட பயிற்சியாளர், அவரை விடுப்பு எடுத்துட்டுப் போகச் சொல்லியிருக்கார்.

`அவ்வளவுதான், நம்ம கனவு தகர்ந்தது’னு நினைச்சுட்டு இருந்தார் கெய்ஸ். ஆனா, குறிப்பிட்ட நாளில் அவரே எதிர்பார்க்காம அந்தப் போட்டியில ஜெயிச்சுட்டார். அந்த ஆச்சர்யத்தைத் தன்னோட `Rest is the new sport’ங்கிற புத்தகத்துல குறிப்பிட்டிருக்கார்.

`தொடர்ச்சியான பயிற்சியும், உடல் உழைப்புமே வெற்றி தரும்’ என்பது மாறி, போதுமான ஓய்வுடன்கூடிய அளவான பயிற்சியே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதை உணர்ந்திருந்தார் கெய்ஸ்.

பெல்ஜியத்தில் ஸ்போர்ட்ஸ் பிஸியோ- தெரபிஸ்ட்டாக இருக்கும் இவர், ‘ஓய்வுடன் அளவான பயிற்சியே உடலுக்கு ஆரோக்கியம்’ அப்படிங்கிற கருத்தை வலுவாகப் பரப்பிக்கிட்டிருக்கார்.

`ஸ்ட்ரெஸ் குறித்துப் பேசுறப்போ சில அறிகுறிகளைக் கவனிக்கவேண்டியது ரொம்ப அவசியம்’னு சொல்றார் கெய்ஸ்.

அதுல ரொம்ப ரொம்ப முக்கியமானது `மனம் ஓய்வை விரும்புவது.’ மனம் விரும்பும்போது அளிக்கப்படுற ஓய்வு, உடலைச் சரிசெய்து மறுபடியும் புத்துணர்ச்சியோட செயல்படவைக்கும்.

ஒரு நாளின் முடிவுல நம்ம எல்லாருக்குமே அசதி வரும்தான். அதுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை. ஆனா, `காலையில தூக்கத்துலருந்து விழிக்கிறப்போ புத்துணர்ச்சி இருக்கா?’ங்கிறதுதான் நாம, நம்மைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி. பதில், `இல்லை’னு வந்தா, நாம ஸ்ட்ரெஸ்ஸுல இருக்கோம்னு புரிஞ்சிக்கலாம்.

இது தொடர்பா நடந்த ஓர் ஆராய்ச்சியில கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் மனஅழுத்தத்துல இருந்தது தெரியவந்திருக்கு. இது கவனிக்கவேண்டிய விஷயம்.

`ரொம்ப ஒல்லியா இருப்பான் சார், தினமும் எக்சர்சைஸ் செய்வான். ஆனா, அவனுக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னே தெரியலை சார்’னு புலம்புறதை இப்போல்லாம் அதிகமா கேக்க முடியுது.

அதுக்குக் காரணம், ஒல்லியான, பிசிக்கல் ஃபிட்டான ஆட்களையும் காவு வாங்குற `ஸ்ட்ரெஸ்’தான்னு சொன்னா, அது மிகையில்லை.

‘கெய்ஸ்’ வார்த்தையில சொன்னா, `நாம எல்லாருமே உடம்புக்கு முடியாம காய்ச்சல், தலைவலினு வந்தா, அதுக்கு ஏத்த மாதிரி மாத்திரை, மருந்து எடுத்துக்கிட்டு நம்ம தினசரி வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுறோம். ஆனா, அசதினு வரும்போது, ரெஸ்ட் எடுக்காம, ஏதோ ஒண்ணைச் செஞ்சுட்டு, அதைக் கண்டுக்காம தாண்டிப் போயிடுறோம்.

உடலுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய ஓய்வைக் கொடுக்கலைன்னா, அது அதிகமா ஓடின கார் டயர் மாதிரி ஒரு நாள் பஞ்சர் ஆகி, நம்மை நடு ரோட்டுல நிறுத்தாம விடாது.’

அசதியை உடல் அளவில், மன அளவில், செயல் அளவில், உடலின் வளர்சிதை மாற்ற அளவில்னு நான்கு நிலைகளில் கவனிக்க வேண்டும். கெய்ஸ், நாம என்ன வகையான அசதியில இருக்கோம்னு வகைப்படுத்திக்க, நான்கு வகையான அசதிகளைக் குறிப்பிடுறார்.

உடலில் அசதி இருப்பவர்கள், தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் தவித்து, தூங்கக்கூட சிரமப்படுகிறார்கள்.

மனதில் அசதி உள்ளவர்கள், ஞாபகமறதி, பதற்றம், எதிலும் ஆர்வமின்மையால் அவதிப்படுகிறார்கள்.

உடலின் செயல்பாடுகளில் அசதியுள்ளவர்கள், ஹார்மோன் பிரச்னைகளாலும் கவனக்குறைவாலும் சிரமப்படுகிறார்கள்.

உடலின் வளர்சிதை மாற்றத்தில் அசதியுள்ளவர்கள் செரிமானமின்மை, பசியின்மை, தூக்கமின்மை போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள்.

இந்த அசதிகள் ஒரு மனிதனுக்குத் தனித் தனியாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று இணைந்தோ தொல்லை கொடுக்கலாம். பல்வேறு நோய்களுக்கு அச்சாரமே அசதிதான்.

இந்த அசதியைத் தருவது அதிக உழைப்பு, ஸ்ட்ரெஸ்.தினமும் உடற்பயிற்சி செய்வதைக்கூட சிலர் வேலைப் பளுவுக்கிடையில் மற்றுமொரு ஸ்ட்ரெஸ்ஸாகச் செய்கிறார்கள்.

ரிலாக்ஸாக வாக்கிங் போக வந்த இடத்தில்கூட, மொபைலில் டென்ஷனுடன் பிஸினஸ் பேசிக்கொண்டு செல்பவர்களை நாம் பார்க்கிறோம். இன்னும் சிலர் மெடிடேஷன், யோகாவைக்கூட ஸ்ட்ரெஸ்ஸுடன் செய்கிறார்கள்.

எந்த ஒரு செயலிலும் பணியிலும் மனம் ஒன்றி, விருப்பத்துடன் செய்வதுதான் மன அமைதிக்கான தியானம். பாடல் கேட்பதோ, சினிமா பார்ப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ அல்லது கோயிலுக்குச் செல்வதோ எது உங்களுக்கு நிம்மதியை அளிக்கிறதோ, அதுதான் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை ஒழிக்கும் தியானம்.

உங்களுக்கு விருப்பமான செயல்களை மனம் விரும்பிச் செய்யுங்கள். மனஅழுத்தத்தைத் தவிருங்கள். ஓய்வெடுப்பதும் ஓர் உடற்பயிற்சியே என்பதை உணருங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button