ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

விதைகளைப் பாதுகாப்பது என்பது உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முன் கூட்டிய நடவடிக்கை

‘‘பொதுவாக விதைகளை அகற்றிவிட்டே பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துகிறோம். சுவை என்ற கோணத்தில் விதைகள் என்பவை வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக விதைகள் என்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் விதைகளுக்கு உண்டு’’ என்கிற சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம், இன்றியமையாததாக இருக்கிற விதைகள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் விளக்குகிறார்.

* விதைகளைப் பாதுகாப்பது என்பது உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முன் கூட்டிய நடவடிக்கையாகும். விதை உள்ள பழங்கள் காய்கள்தான் ஆரோக்கியமானது என்பது நமக்குத் தெரியும்.

அதுபோல நம் அன்றாட உணவில் ஒதுக்கும் அல்லது தெறிந்து கொள்ளாத விதைகள் நிறைய இருக்கிறது.

* விதைகள் என்பவை மீண்டும் ஒரு புது தாவர சந்ததியை உருவாக்குகிற ஓர் அற்புதமான அமைப்பாகும். தாவரங்களின் இனப் பெருக்க செயல்களின் வெளிப்பாடே விதைகளாகும்.

seads

அதிலும், பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க நிகழ்ச்சிகள் முழுவதும் விதையின் மூலம் நடைபெறுகிறது.

மலரில் கருவுறுதல் நடைபெற்றபின் சூலகத்தினுள் உள்ள சூல் விதையாக மாறுகிறது. இவ்வாறு தாவரங்கள் தம் சந்ததி விரிவாக்கத்திற்கு விதைகளை உண்டாக்குகிறது.

* விதைகள் முளைக்கும்போது அவற்றிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் அந்த விதைகளிலேயே சேமிப்புப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

அவை உணவுப் பொருளாகவோ அல்லது வேதிப் பொருளாகவோ அமைந்துள்ளது. இந்தப் பொருட்கள்தான் மருத்துவத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

* விதைகள் மூன்று வகைப்படும்.

1. சர்க்கரைப் பொருட்கள்,

2.கொழுப்பு எண்ணெய்,

3.புரதங்கள் என்பன ஆகும்.

இந்த பொருட்களின் சேமிப்பைப் பொறுத்தே விதைகளின் மருத்துவ குணங்கள் அமைகின்றன.

* கழற்சிக்காயின் விதை அண்டவாதம் என்ற விதை வீக்க நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

இதற்கு விதை பொடியினை முட்டை வெண்கருவில் அரைத்துப் பற்று போட வேண்டும். இதன் விதைகளை பொடித்து பெருங்காயம் சிறிது சேர்த்து மோரில் கலந்து குடிக்க, குன்மம் என்ற வயிறு அல்சர் குணமாகும்.

* பூனைக்காலி விதையில் விதை ஒரு சிறந்த நரம்பு டானிக். பார்க்கின்ஸன் நோய் என்ற நடுக்குவாதத்திற்கு பூனைக்காலி விதைகளால் நல்ல குணம் கிடைக்கிறது.

மேலும் இந்த விதைகளால் விந்துவின் எண்ணிக்கையும், அதன் தரமும் அதிகரிக்கிறது. விதைகளை பொடித்து பாலில் கொடுத்து வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

* அலிசி விதைகளால், நீர் எரிச்சல், வீக்கம், கட்டிகள் குணமாகும். விதைகளை அரைத்து கட்ட நோய் வீக்கம் குறையும்.

பழுக்காத கட்டிகள் பழுத்து உடையும். இதன் எண்ணெய் ஒரு பங்கும் சுண்ணாம்புத் தெளிநீர் அரை பங்கும் கலந்து, குழைத்து இறகால் தடவி வர நெருப்பினால் உண்டான புண், வெந்நீர் புண் ஆறும்.

* அறுகீரை விதைகளை நல்லெண்ணெயுடன் கூட்டி காய்ச்சி தைலம் வடித்து தேய்த்து வர தலைவலி குணமாகும். தலை முடி நன்கு கறுத்து வளரும்.

* கருஞ்சீரக விதைகள் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். தோலில் உண்டாகும் அரிப்பு, படை இவற்றிற்கு கருஞ்சீரக விதைகள் சிறந்த மருந்தாகும்.

மேலும் இது ஒரு சிறந்த புழுக்கொல்லி மருந்தாகும். இந்த விதைகளை அரைத்து நல்லெண்ணெயுடன் குழப்பி தோல் நோய்களுக்கு வெளிப் பிரயோகமாக பயன்படுத்த கரப்பான், சொறி, அரிப்பு முதலிய தோல் நோய்கள்
குணமாகும்.

* எட்டி விதைகள் நரம்புக்கு ஊட்டம் அளிக்கும் சிறந்த உணவுப்பொருள் ஆகும். நம் உடலில் ஏற்படும் எல்லாவிதமான வாத நோய்களுக்கும் இந்த விதைகளைக் கொண்டு செய்யப்படும் தைலங்கள் பயன்படுகிறது.

பக்க வாதம், மூட்டுவாதம், கீல்வாதம் போன்ற நோய்களுக்குச் சிறந்த தைலமாகப் பயன் தருகிறது.

* ஆமணக்கு விதைகலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த எண்ணெயை தினமும் படுக்கைக்குப் போகும் முன் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர மலம் எளிதாக கழியும்.

மேலும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பல தைலங்களில் இந்த எண்ணெயானது ஒரு முக்கிய மருந்தெண்ணெயாக சேர்க்கப்படுகின்றது.

மேலும், இந்த எண்ணெயானது உடம்பிற்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

* காட்டுச் சீரக விதைகளை பொடித்து 3 கிராம் அளவு தேனில் கலந்து கொடுக்க மலம் கழிந்து வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும்.

இதன் விதைகளை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து பூசி வர சொறி, சிரங்கு முதலிய நோய்கள் குணமாகும். தலையில் தேய்க்கப் பேன்கள் சாகும்.

* தேற்றான் விதை என்ற பெயரில் இருந்தே இது ஒரு சிறந்த டானிக் என்று அறிய முடிகிறது. இது கண்ணுக்கு நன் மருந்தாகும்.

இந்த விதைகளை நீரில் உரைத்துக் கரைத்தால் அந்நீர் தெளிந்து நிற்கும். தேற்றான் விதைக் குடிநீர் நீரிழிவு நோயிற்கு நல்ல மருந்தாகும்.

விதைகளை பொடித்து பாலில் கலந்து கொடுத்தால் நீர்ச்சுருக்கு, நீரிழிவு நோய் குணமாகும்.

* எள் விதைகளிலிருந்து நல்லெண்ணெய் பெறப்படுகிறது. இந்த எண்ணெய் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்பட்டாலும், மருத்துவத்திலும், இதன் பங்கு அளவிடமுடியாது.

இந்த எண்ணெயினால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகிறது. தலைக்கொதிப்பு, சொறி, சிரங்கு, தினவு,படை, புண் போன்ற நோய்கள் நீங்கும்.

நல்லெண்ணெயினால் தலைக்குத் தேய்த்து முழுகி வர, கண் சிவப்பு, கண் வலி, கண் கூசல், மண்டை குத்தல் முதலியன நீங்கும்.

* ஓமத்திலிருந்து செய்யப்படும் ஓமத்தீநீரினால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மந்தம் முதலிய நோய்கள் குணமாகின்றன.

இந்த நீரிலிருந்து மிதக்கும் எண்ணெய் ஓமத் தைலம் எனப்படும். இந்த தைலமும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

* புங்கு விதையினால் கால் புண், கிரந்தி, காது நோய் நீங்கும்.காட்டு புங்கின் விதையினால் தேமல், படை, கீல்களில் வரும் வாத நோய்கள் தீரும்.

புங்கன் தைலம் சித்த மருத்துவத்தில் தோல் நோய்களுக்குச் சிறந்த வெளிப்பூச்சு எண்ணெயாக பயன்தருகிறது.

* வெள்ளரி விதையினால் கடுக்கிற நீரடைப்பு, கல்லடைப்பு, நீர்ப்புழை வெடிப்பு, சதையடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மேலும், இது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாகும்.

இதனால் நம் உடம்பில் தேங்கியுள்ள நீர் வீக்கமானது குறைந்து உடல் நன்னிலைக்கு திரும்பும்.

* வெண்பூசணி விதைகள் மிகச் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாகும். மேலும் உடலைத் தேற்றக் கூடிய டானிக் ஆகும்.

இதன் விதைகளை அரைத்து வெறும் வயிற்றில் கொடுத்து விட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து ஆமணக்கு எண்ணெய் கொடுக்க வயிற்றில் உள்ள தட்டைப்புழுக்கள் வெளிப்படும்.

* தர்ப்பூசணி விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

இதன் மேல் தோலை நீக்கி, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.

விதைகளில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துகள் காணப்படுகிறது.

* விதைகளை பயன்படுத்தும்போது மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் தென்பட்டால் நீங்கள் அதற்குரிய விதைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

விதைகள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சில விதைகள் வீட்டில் பயன்படுத்தப்படும் காய் கனிகளிலிருந்தும் கிடைக்கும்.

* விதைகளை பயன்படுத்தும்போது அவைகளை நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் காலையில் உணவுக்கு முன்னோ அல்லது பின்னோ ஒரே டீஸ்பூன் அளவு வெந்நீரிலோ அல்லது பாலிலோ அல்லது தேனிலோ கலந்து எடுத்துக்கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதது ஆரோக்கியமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button