அழகு குறிப்புகள்ஆரோக்கியம்

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு என்ன தெரியுமா?

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும்.

பாதைமாறும் பெண்களும்.. பாதிப்படையும் வாழ்க்கையும்..

பெண்கள் அனைவரும் கலைத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய திறமை அவர்களது சிறுவயதிலே வெளிப்படுகிறது. ஆனால் அந்த திறமையை வளர்த்தெடுக்க எல்லா பெற்றோராலும் முடிவதில்லை. அதற்கு ஏழ்மை தடையாக இருக்கிறது. அன்றாட உணவுத்தேவையையும், அடிப்படையான கல்வியையும் வழங்கவே பெரும்பாலான பெற்றோர் படாதபாடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அத்தகைய குடும்பங்களில் வளரும் பெண்கள், தங்கள் கலைத்திறனையோ, விளையாட்டுத்திறனையோ வளர்த்தெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதை மீறி பல்வேறு தியாகங்களை செய்து, தங்கள் மகள்களை அவர்கள் விரும்பும் துறைகளில் வளர்த்தெடுக்கும் பெற்றோரும் உண்டு.

women 1

அவர்கள் தங்கள் மகள்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ சிரமப்படுகிறார்கள். எத்தனையோ இன்னல்களை தாங்கிக்கொள்கிறார்கள். பல்வேறு தியாகங்களை செய்கிறார்கள். அவைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு சில பெண்கள் கலைத்துறைகளில் வளர்ந்து விடுகிறார்கள். ஆடல், பாடல், நடிப்பு போன்ற ஏதாவது ஒரு துறை அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துவிடுகிறது.

அதை பயன்படுத்திக்கொண்டு பலருக்கும் தெரிந்த முகங்களாக அந்த பெண்கள் மாறும்போது, சில நேரங்களில் அவர்கள் செல்லும் பாதை மாறிவிடுகிறது. எளிய வாழ்க்கை வாழும் அவர்களது பெற்றோர், மகளிடம் ‘நீ செல்லும் பாதை சரியில்லையே!’ என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். பெற்றோரையே புறக்கணித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார்கள். அதன் பின்பு தனிமையிலோ, பிரச்சினைக்குரிய வெளிநபர்களுடன் சேர்ந்தோ வாழ்ந்துவிட்டு பல்வேறு துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்துவிட்டு மீண்டும் தாயிடம் போய் சேருகிறார்கள். இது ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

ஜூலி நடுத்தர குடும்பத்து பெற்றோரால் வளர்க்கப்பட்ட செல்லப்பெண். அவளது அம்மா தனது மகள் ஆடல், பாடல், பேச்சு போன்ற கலைகளில் சிறக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார். பண கஷ்டங்கள் ஏற்பட்டபோதும், எப்படியோ பணத்தை புரட்டி மகளுக்கு தேவையான பணத்தை செலவிட்டார். அவள் கலைகளில் தேர்ச்சி பெற்ற பின்பு, பல்வேறு பிரபல மனிதர்களை சந்திக்க அழைத்துச்சென்றார். அப்போது பல்வேறு அவ மானங்களையும் மகளுக்காக தாங்கிக்கொண்டார்.

ஒருசில வருடங்களுக்கு பின்பு அவளது வாழ்க்கையில் பிரகாசம் தென்பட்டது. கலைத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை பெற்றாள். பிரபலமானாள். பணம் குவிந்தது. அதன் பின்புதான் அவள் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினாள். அரைகுறை ஆடை அணிந்தாள். ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள். ஊர் சுற்றினாள்.

பெற்றோரால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் அவர்களை ஏளனமாகப் பார்த்தனர். மகளிடம், அவள் நடவடிக்கைகள் திசைமாறி செல்வதை எடுத்துரைத்தனர். அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப்படவில்லை. இதனால் மனம் வருந்திய பெற்றோரும் உறவினர்களும் ஜூலியை கண்டித்தனர். இது அவளுக்கு பிடிக்கவில்லை. வெளியுலக நண்பர்களின் புகழ்ச்சி போதையிலிருந்த அவளுக்கு பெற்றோரின் கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் பிடிக்கவில்லை. உறவினர், பெற்றோரை வெறுத்தாள்.

‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து பெற்றோராகிய உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை மற்றவர்கள் முன்னால்வைத்து குற்றவாளி போன்று விமர்சிக்கிறீர்கள். அதை எல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்ற அவள், பெற்றோரின் அழுகையையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். அவள் எங்கு சென்றாள், யாரோடு வசிக்கிறாள் என்று பெற்றோருக்கு தெரியவில்லை. உறவினர்கள் சிலர் தேடி அலைந்து, அவளது நண்பர்கள் வழியாக செல்போனில் தொடர்புகொண்டபோது, ‘வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், அங்கு கலை நிகழ்ச்சி ஒன்று நடத்திக் கொண்டிருப்பதாகவும்’ புதுக்கதைவிட்டாள்!

ஆனால் அவள் அந்த பெருநகரத்தின் இன்னொரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலையில் இஷ்டம்போல் வாழ்ந்தாள். தன்னை மறந்தாள். அவள் ஈடுபட்டிருந்த துறையில் அவளது வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பலவிதமான பிரச்சினைகளில் சிக்கிய பின்பு, தாய் மடி தேடி வந்தாள். அப்போது அவளது உடலும், மனதும் பாதிக்கப்பட்டிருந்தது.

பெற்றோரை தவிக்கவிட்டு வெளியேறுவது, எவ்வளவு பெரிய தவறு என்பதை பல இழப்புகளுக்கு பிறகே ஜூலியால் புரிந்துகொள்ள முடிந்தது. திரும்பி வந்த அவளை பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அவளை திமிர்பிடித்தவள் என்றே கூறினார்கள்.

அவளை முதலில் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று வர்ணித்து அவளது அறிமுகத்திற்கு ஏங்கியவர்கள்கூட பின்பு அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவளை திருமணம் செய்துகொள்ள போட்டிபோட்ட உறவுக்காரர்கள்கூட, அலட்சியப்படுத்தினார்கள். அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள். பணம் சமூக அந்தஸ்தையும், மகிழ்ச்சியையும் தருவதில்லை என்ற உண்மையை புரிந்துகொண்டாள்.

இன்று நிறைய இளம்பெண்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். பணத்தை பார்க்கும் அவர்கள் பின்பு குணத்திற்கு மரியாதைகொடுக்க தவறிவிடுகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கண்டிப்புகள், விவாதங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்.

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும். பெற்றோரை புறக்கணித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போது அவர்கள் பாதுகாப்பற்ற நிராயுதபாணியாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களைத் தேடி அன்பு, பாசம், அனுசரணை போன்ற போலி முகமூடிகளைத் தரித்துக்கொண்டு சிலர் அணுகுகிறார்கள். அவர்களது வலைக்குள் பெண்கள் சிக்கிக்கொள்ளும்போது எல்லையற்ற இன்னல்களையும், அவமானங்களையும், இழப்புகளையும் சந்திக்கிறார்கள். அதுவே அவர்கள் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் அதிலிருந்து பாடம் கற்று தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button