அழகு குறிப்புகள்

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

தக்காளியின்றி அமையாது குழம்பு. தக்காளி சேர்க்காத சமையல் முழுமையடைவதில்லை. சீஸன் இல்லாமல் எல்லாகாலங்களிலும் கிடைக்கும் தக்காளியை பச்சையாக சாப்பிடலாம். குழம்பு, ரசம், தக்காளி சட்னி, தக்காளி சூப், தக்காளி சாஸ் என்று விதவிதமாக செய்து ருசிக்கலாம். எப்படி சாப்பிட்டாலும் சத்துக்கள் கொடுக்கும் நெல்லிக்கனி போலதான் தக்காளியும்.

tomato

தக்காளியின் சிவப்பு நிறத்துக்கு காரணம் அதிலுள்ள லைகோபின் என்னும் நிறமிதான். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலில் தேங்கியிருக்கும் நச்சு பொருள்களை வெளியேற்றுகிறது. புற்றுநோயால் பாதிப்படைந்த திசுக்களுடன் போராடுகிறது. பிராஸ்டேட் கேன்சர், பெண்களுக்கு உண்டாகும் கருப்பை புற்று நோய், மார்பக புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோய் போன்றவை உருவாகாமல் தடுக்கும் குணங்களை தக்காளி பெற்றிருக்கிறது.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட் டின், லூட்டின் கரோட்டினாய்டுகள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, பி, சி,கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. பெரும்பாலான உணவுகளில் பெறமுடியாத கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தை தக்காளி தருகிறது. தக்காளி சேர்த்த உணவுகள் சாப்பிடுவதால் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் அல்ட்ராவைலட் கதிர்களின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

தக்காளியில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு சம்பந்தமான ஆஸ்டியோ பெராசிஸ் என்னும் நோய் வராமல் காக்கிறது. குறிப்பாக உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைக்க தக்காளி உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்தைக் காப்பதிலும் தக்காளி முதன்மையாக இருக்கிறது.

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் விழும் சுருக்கங்களைத் தடுத்து வயதான தோற்றப் பொலிவு உண்டாவதைத் தடுக்கிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முகத்தில் கறுமையை உண்டாக்கி பொலிவை இழக்க செய்யும். தேங்கிய இறந்த செல்களை வெளியேற்ற தக்காளி கூழில் ரவை, கோதுமை தவிடு, சர்க்கரை ஏதேனும் ஒன்றை கலந்து ஸ்க்ரப் போல் பயன்படுத்தி சருமத்தில் தேய்த்து வந்தால் இறந்த செல்கள் உதிர்ந்து சருமம் பொலிவு பெறும்.

முகத்தை மென்மையாக்கிட தக்காளியைக் கூழாக்கி பசும்பாலேடு அல்லது தயிரை கலந்து முகத்தில் பேக் போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். தொடர்ந்து இதை செய்து வந்தால் முகம் மிருதுவாகும். பொலிவிழந்து கருவளையத்துடன் காணப்படும் கண்களுக்கு மீண்டும் உயிரூட்டுகிறது தக்காளி. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி துண்டுகளையும் சேர்த்து அரைத்து கண்களுக்கு கீழ் தடவி வந்தால் கருவளையம் காணாமல் போகும்.

கரும்புள்ளிகளையும் கழுத்தில் இருக்கும் கருமை நிறமும் போக்கிடவும் தக்காளி பயன்படுகிறது..

முகத்திலும் சருமத்திலும் சுருக்கம் விழுந்தாலும் கவலையில்லை. தங்கம் போல் ஜொலிக்கத்தான் தக்காளி இருக்கே…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button