ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

“கர்ப்பகாலத்தால் சில தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே, சிசேரியனைத் தவிர்த்துவிடலாம்.

கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான பிரசவ வழிமுறை சிசேரியன். ‘சி செக்‌ஷன்’ (C-section) எனப்படும் இந்த வழிமுறை, ’35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது’ என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

ஆனால், உடல் எடை அதிகரிப்பு, மெனோபாஸ் கால சிக்கல்களை அதிகரிப்பது, கர்ப்பப்பையில் நோய்த்தொற்று பிரச்னைகள் ஏற்படுவது எனப் பல பிரச்னைகளைப் பின்னாளில் அது ஏற்படுத்தலாம்.

“கர்ப்பகாலத்தால் சில தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே, சிசேரியனைத் தவிர்த்துவிடலாம். ஆரோக்கியமான
பழக்க வழக்கங்கள், சரியான உணவுப் பழக்கவழக்கம், சில உடற்பயிற்சிகள், போதிய ஓய்வு போன்றவற்றின் மூலம் சுகப்பிரசவத்தைக் கருவுற்றுள்ள பெண்கள் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கௌதம். இதுகுறித்து அவரிடம் மேலும் பேசினோம்.

“சிசேரியன் செய்துகொண்டவர்களால், சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களைப்போல, இயல்பாக இருக்க முடியாது. சில தினங்களில் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. பிரசவித்த பின்னர், அறுவைசிகிச்சை மேற்கொண்டதன் காரணமாகப் படுத்தே இருப்பதால் உடலின் ஏதேனும் ஒருபகுதியில் ரத்தக்கட்டுகூட ஏற்படலாம். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள். அப்படி அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, சிசுவின் உடலில் `ஸ்டீராய்ட் ஹார்மோன்’ (Steroid Hormones) சுரப்பு சீராக இருக்கும். இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, பிறந்து சில நிமிடங்களில் குழந்தை அழத்தொடங்கிவிடும். மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. ‘பிரசவத்தில், 15 சதவிகிதம் மட்டுமே அறுவைசிகிச்சை மூலம் நடக்கலாம்’ என்று பரிந்துரைக்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், அந்த அளவைவிட சில மடங்குகள் அதிகமாகவே தமிழகத்தில் சிசேரியன் நடக்கிறது என்கிறது தேசிய குடும்ப நல ஆய்வின் மற்றொரு ஆய்வு.

மருத்துவர்கள் சிசேரியனைப் பரிந்துரைக்கும் முக்கிய சூழல்கள்:

* தாய்க்கு சர்க்கரைநோய் அல்லது ரத்தஅழுத்தப் பிரச்னை இருக்கும் சூழல்
* கர்ப்பப்பைக்குள் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்பட்டு அதனால் குழந்தை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் சூழல்
* கர்ப்ப காலத்தில், தாய் தன் உடல்நலனின் மீது காட்டும் அலட்சிய அணுகுமுறைகள்

இதில் கூறப்பட்டுள்ள உடல்நல அலட்சியம்தான், மற்ற இரண்டையும்விட முக்கியமானது. காரணம், அதுதான் தாயின் உடலில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, எளிதில் உடல்பருமனை ஏற்படுத்தும். பிரசவ காலம் நெருங்கும்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்தும், பிரசவ நேரத்தில் தாய்க்கு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும். சுகப்பிரசவத்துக்கான சாத்தியக் கூறுகளைத் தடுக்கும். மருத்துவர்களும் இறுதியில் வேறு வழியின்றி சிசேரியனை பரிந்துரைத்துவிடுவார்கள்.

சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை…

* கருத்தரித்த காலத்தில் இருந்தே வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

* முதல் ஐந்து மாதம் பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆறாவது மாதம் தொடங்கும்போதாவது பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். ஸ்குவாட்ஸ், பட்டர்ப்ளை போன்ற உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இவை அனைத்துமே, பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை எளிதில் கீழே திரும்ப உதவுவதற்கான இடுப்புத் தசைகள் விரிந்து கொடுக்க உதவும். உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.

* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.

* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.
35bbd2dc73d694b625
* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.

மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலில், பல பெண்களும் பிரசவ வலியைத் தாங்குவதற்குத் தயாராக இருப்பதில்லை. ஆனால், ஆறு முதல் எட்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிட வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி நடக்காத சூழலில், சிசேரியன் செய்யும்படி அறிவுறுத்திவிடுகின்றனர். இன்னும் சிலர், நல்ல நேரம் எனக்கூறி அந்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். இதற்காக, அவர்களே சிசேரியனைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவையாவும் தவிர்க்கப்பட வேண்டிய சூழல்கள்” என்கிறார் கவிதா கௌதம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button