இதுக்குப் போய் பைசாவ கரைக்காதீங்க! முகப் பொலிவுக்கு ஹோம்லி ரெமடீஸ்:
பொதுவாக தொடர்ச்சியான வேலை காரணமாக நமது தோற்றப்பொலிவை கவனிக்காமல் விடும்போது, அழுத்தம் காரணமாக முகம் சோர்வடைந்து அந்த சோர்வு நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் தரும்.
சோர்வான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் நாம் உடனடியாக அதை போக்க நிச்சயமாக ஏதாவது ஒரு கிரீமை வாங்கி அப்ளை செய்ய கடைக்கு செல்வோம் இல்லையா. அப்படி கிரீம்களை வாங்க கடைக்கு போவதற்கு முன்பு கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள். அங்கேயே அதற்கான தீர்வுகள் இருக்கின்றன என்றால் நம்புங்கள்.
அதற்காக உங்களிடம் அந்த கிரீம்கள் எல்லாம் பயனற்றவை வாங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதைவிட விரைவாக பலனளிக்க கூடியவை நம் சமையல் அறையில் உள்ள பொருட்கள். அப்படி என்ன சமையல் அறையில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
How To Make Face Glow In Minutes: முக அழகு டிப்ஸ்
முகம் உடனடியாக பொலிவடைய முட்டைகோஸ்
இதுவரைக்கும் உங்களுக்கு முட்டைகோஸ் பிடிக்குமோ? பிடிக்காதோ என்பது தெரியாது. ஆனால், முட்டைகோஸ் சரும பிரச்னைகளுக்கு பலனளிக்க கூடியது. முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, டி ஆகிய மூன்று வைட்டமின்கள் உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உங்களுடைய முகம் உடனடியாக பொலிவடைய வேண்டுமா கவலையே படாதீர்கள், முட்டைகோஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின்னர் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள் உங்கள் முகத்தின் பளபளப்பை.
முகம் புதுப்பொலிவுடன் இருக்க தயிர் ஆலிவ் ஆயில்
அதே போல, இன்னொரு டிப்ஸ், உங்கள் வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி அப்ளை செய்வது என்றால், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். பிறகு உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.
முகம் புதுப்பொலிவு பெற தயிர் வெள்ளரிக்காய் தண்ணீர்
அதே போல, உங்களுடைய முகம் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்க நீங்கள் தயிருடன் வெள்ளரிக்காய் தண்ணீரை கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போதும் அத்தகைய பலனைப் பெறலாம்.
தேங்காய் பால் ஒரு சரும பாதுகாப்பு நிவாரணி
தேங்காய் பால் சரும அடுக்குகளில் உள்ள டெட் செல்களை நீக்கும் ஒரு மிகப்பெரிய சரும பாதுகாப்பு நிவாரணி. அரை கப் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதியை முகம் மற்றும் உடல் மீது தடவவும். மீதமுள்ளவற்றை சிவப்பு சந்தனப் பவுடருடன் பசை போல கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். இதை உடல் முழுவதும் கூட தடவலாம். இது உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
இயற்கையான சரும ஈரப்பதத்திற்கு இளநீர் அன்னாசிப்பழம்
இளநீர் இயற்கையாக சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. இது வறண்ட சருமத்துக்கு நல்ல பிரகாசத்தை தருகிறது. நீங்கள் இளநீருடன் இரண்டு தேக்கரண்டி அன்னாசிப் பழச் சாறைக் கலந்து முகத்தில் தடவுங்கள். அது காய்ந்ததும் ஐஸ் கட்டிகளைக்கொண்டோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ முகத்தைக் கழுவுங்கள். பிறகு உங்கள் முகம் நல்ல பிரகாசமுடன் இருப்பதை உணர்வீர்கள்.
சருமத்திலிருந்து நச்சுகளை அகற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் முகத்திலிருந்து நச்சுகளை அகற்றுகிறது. அதனால், நீங்கள் உங்களுடைய முகத்தில் இளமையான பிரகாசத்தை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ரோஸ்வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். பிறகு கண்ணாடியைப் பாருங்கள் உங்கள் முகத்தில் இளமையான பிரகாசம் வெளிப்படுவதை உணர முடியும்.