ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்மைக்குறைவு ஏற்படுமா விதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால்?

இப்போது கிடைக்கும் பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, ஒரு விதைகூட பற்களில் சிக்குவதில்லை. என்ன காரணம்? கடினமான விதைகளையும் மாவாக நசுக்குமளவுக்கு நமது பற்கள் அதீத பலம் பெற்றுவிட்டனவா அல்லது பற்களுக்கிடையே சிக்காத அளவு நமது பற்கள் நெருக்கமடைந்துவிட்டனவா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்… இப்போது கிடைக்கும் பழங்களில் விதைகளே இருப்பதில்லை என்பதுதான்.

`விதையில்லாத பழங்களைச் சாப்பிடலாமா? விதையில்லா பழங்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமாமே?’ இப்படியொரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருக்கிறார், கிருஷ்ணன் என்ற வாசகர்.
hjhj
தர்பூசணி

விதையில்லாத பழங்களைச் சாப்பிடுவோம் என நினைத்துப் பார்த்திருப்போமா? ஆனால், அன்றாடம் விதையில்லாத பழங்களைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். கடினமான விதைகளை நீக்கிவிட்டு, சாப்பிடுவதற்கு எளிமையாகப் பல்வேறு பழங்கள் உருமாற்றம் அடைந்துவிட்டன. தர்பூசணியும் திராட்சையும் இதற்கு எடுத்துக்காட்டுகள். இதுபோன்று பல எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

நவீன கண்டுபிடிப்பால், விதையில்லா பழங்களை உருவாக்க முடியுமே தவிர, விதைகளின் உள்ளே இயற்கையாகக் காணப்படும் மருத்துவப் பலன்களை உருவாக்க முடியாது. விதைகளுக்கான மருத்துவப் பலன்களை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறது சித்த மருத்துவம். நவீன அறிவியல் ஆய்வுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. விதைகளின் பயன்களை அறிந்து பழங்களைச் சாப்பிடும்போது, ஆசையாக விதைகளைத் தேடினால் ஒன்றிரண்டுகூட கிடைப்பதில்லை.
zcvfcxvgxfg
ஒரு காலத்தில், திராட்சையில் இருக்கும் விதைகளைத் துப்பிவிட்டு, சதைகளை மட்டும் சுவைத்தோம். ஆனால், திராட்சையின் விதைக்குள்ளே இருக்கும் சத்துகள் பிரித்தெடுக்கப்பட்டு, அது பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் செய்தி நம்மில் பலருக்கும் தெரியாது. இப்போது, விதையுள்ள திராட்சைகளைப் பார்ப்பது அபூர்வம். விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மருந்து, அமோகமாக விற்கப்படுகிறது.

பப்பாளி

நாட்டு பப்பாளிப்பழத்தை வெட்டும்போதே, அதன் உள்ளே நூற்றுக்கணக்கான மிளகு போன்ற விதைகள் கொட்டும். சமீப காலமாக, ‘ஹைபிரிட்’ பப்பாளிப் பழங்களே சந்தைகளில் அதிகம் உலா வருகின்றன. அவற்றை வெட்டி லென்ஸ் வைத்துப் பார்த்தால்கூட விதைகள் இல்லை. சுவையோ குறைவு. உடலுக்கு நன்மை செய்யும் பல நுண்ணூட்டங்கள் பப்பாளியில் இருப்பதாகப் பாரம்பர்யமும் அறிவியலும் பேசுவதால் விதையில்லாத பப்பாளிப் பழங்களைச் சாப்பிடவேண்டியுள்ளது.

பூசணி விதை, மாதுளை விதை, தாமரை விதை என விதைகள் சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்துகளாகச் செயல்படுகின்றன. பல்வேறு சித்த மருந்து தயாரிப்புகளில், விதைகளின் சேர்மானம் நிச்சயம் உண்டு. உதாரணமாக, ‘மாதுளை விதை, சுக்கிலத்தை இறுக்கி அதிலுள்ள குற்றத்தைப் போக்கும்’ எனக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம். நவீன அறிவியல் அடிப்படையில், விந்தணுவில் பிரச்னை இருக்கிறது என்பதை அதன் உருவ அமைப்பில் (Sperm morphology) ஏற்படும் பாதிப்புகளைக்கொண்டு குறிப்பிடலாம். இப்போதைய சூழலில், பலருக்கும் விந்தணு உருவக் குறைபாட்டால் குழந்தைப்பேறு தள்ளிப்போவதை அறிந்திருப்போம்.

முருங்கை

‘முருங்கை விதை, நீர்த்த விந்துநீரைப் பிசின் போலாக்கும்’ என்கிறது சித்த மருத்துவம். இப்படி விதைகளுக்கு எண்ணற்ற பலன்கள் உண்டு. விதை உள்ள பழங்கள் மட்டுமே உடலுக்குத் தேவைப்படும் முழு ஆற்றலை வழங்கும். இயற்கை பொதுவாகவே அதன் வம்சத்தை விரிவுபடுத்த விதைகளின் உள்ளே அதன் மரபு அச்சைப் பொதிந்துவைத்திருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, நமது வசதிக்காக செயற்கையாக உருவாக்க முற்படும்போது, வியாபார ரீதியாக பலன்கள் பெருகலாம். ஆனால், அவை உடல்நலனுக்கு உகந்ததா என்பது கேள்விக்குறிதான்.

கிராமத்து தோட்டத்தில் விளையும் கடினமான விதைகளைக்கொண்ட நாட்டுக் கொய்யாவையோ நாட்டு மாதுளையையோ சாப்பிட நமக்கு விருப்பமிருப்பதில்லை. விதைகளுக்கான அறிகுறியே இல்லாத ரகங்களைத்தான் தேடி ஓடுகிறோம். சிறு வயதில் பச்சை திராட்சைப்பழத்தை கொட்டையுடன் விழுங்கிவிட்டு, வயிற்றில் கொடி வளர்வதுபோல கற்பனை செய்து பார்த்திருப்போம். அப்படிப்பட்ட கற்பனைக்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை. அனைத்தும் கொட்டையில்லாத ‘ஹைபிரிட்’ மயம்.
பழம்

சுவை தத்துவம்:

ஒரு பழத்தின் சதைக்கு ஒரு சுவை, அதே பழத்தில் இருக்கும் விதைகளுக்கு வேறு சுவை இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இரண்டு சுவைக்கும் வெவ்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கும். ஏதாவது ஒரு காரணத்துக்காகவே, சுவை தத்துவ அடிப்படையில் ‘பழங்களையும் விதைகளையும்’ இயற்கை உருவாக்கியிருக்கும். இந்தச் சுவைக் கலவையே நமது பாரம்பர்யப் பொக்கிஷம். ஆனால், இப்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டேவருகின்றன.

அதிக மகசூலில் பெறப்படும் ‘ஹைபிரிட்’ பழங்கள், ‘பிரிசர்வேட்டிவ்’களில் மிதந்து, ‘ஃப்ரீஸர்களி’ல் தவழ்ந்து, நம்மை அடைய சில பல நாள்கள் ஆகின்றன. ஆனால், விதையுள்ள நாட்டுப்பழங்கள், நம் கண் முன்னே வளர்ந்து, எவ்வித செயற்கைத் தாக்கமுமின்றி நம் கைகளில் தவழும் இயற்கையின் பொக்கிஷங்கள். ஆனால் அவற்றை நாம் உதாசீனப்படுத்துகிறோம்.

ஒரு கற்பனைக் கதை.

பறவைகளும் விலங்குகளும் பழங்களின் விதைகளைச் சாப்பிட்டு, செரிமானமடையாத கடினமான விதைகளைத் தம் கழிவின்மூலம் வெளியேற்றி, காட்டிலுள்ள தாவர வர்க்கத்தின் பெருக்கத்துக்கு பல்லாயிரம் வருடங்களாகவே காரணமாக இருந்துவந்தன. ‘சமீபமாக, நிறைய தாவரங்கள் உருவாவதில்லையே’ எனத் தாவர வர்க்கம், பறவைகள் மற்றும் விலங்குகளிடம் கேள்வியை முன் வைத்தது. ‘இல்லையே நாங்கள் முறையாகத்தானே சாப்பிடுகிறோம். கழிவுகளும் இயல்பாகத்தானே வெளியேறுகிறது… ஏன் தாவரங்கள் பெருகவில்லை’ என்று ஒன்றிணைந்து ஆராய்ச்சி நடத்தின. அப்போதுதான், சில வருடங்களாகவே அவை சாப்பிட்ட பழங்களில் விதைகளே இல்லாமல் இருக்கும் உண்மை தெரியவந்தது. இதை அறிந்ததும், பறவைகளும் விலங்குகளும் அதிர்ந்தன. இது கற்பனைக் கதையாக இருந்தாலும், பல்வேறு உண்மைகள் இதில் இருக்கின்றன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தாமரை

அதிக விளைச்சல் தருவதற்காக உருவாக்கப்பட்ட ஹைபிரிட் பழங்களால் அல்லது விதையில்லாத பழங்களால், ‘ஆண்மைக் குறைவு ஏற்படுமா?’ எனும் சந்தேகம் பொதுவெளியில் உலாவருவதை அறிவோம். ‘மரத்தின் சந்ததியைப் பெருக்கும் விதைக்கும் நமது சந்ததியைப் பெருக்கும் சக்திக்கும் தொடர்பு உண்டா?’ எனும் சந்தேகம் எழுவது இயற்கையே

தற்போது வரை `விதையில்லாப் பழங்களால் ஆண்மைக்கு ஆபத்து’ என்ற ரீதியில் ஆராய்ச்சியில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. `விதையில்லா பழங்கள்’ எனச் சொல்வதே சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், பழங்கள் என்றாலே `விதைகள் கொண்ட அமைப்பு’ என்பதே இலக்கணம். ஆனால், நாம்தான் இயற்கையின் பல இலக்கணங்களைச் சிதைத்துவிட்டோமே.

மாதுளை

விதையுள்ள இயற்கையான பழங்களைத் தேடிப் பிடியுங்கள். கடினமான விதைகளை கடித்துச் சாப்பிடுங்கள். இதனால் பற்களுக்கும் பலம் கிடைக்கும். மலருக்கு நறுமணமும் வண்ணமும் இருப்பது எப்படி இயற்கையின் நியதியோ, அப்படியே பழச்சதைக்குள் விதைகள் இருப்பது இயற்கையின் நியதி. அப்படியானால், விதையில்லாப் பழங்கள்? இது, உடலில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அறிய பல வருடங்கள் காத்திருக்கவேண்டியிருக்கும்.

சில பன்னாட்டு நிறுவனங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாடு முழுவதும் வியாபாரம் செய்யத் திட்டமிடுவது ஒருபுறம் நடக்கிறது. மறுபுறம், விதையில்லாப் பழங்களின் பரிமாற்றம் நடக்கிறது. ‘இவற்றால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுமா?’ என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும். இப்போதைக்கு விதையில்லாப் பழங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்பு ஒன்றை அறுதியிட்டுக் கூறலாம். அது என்னவென்றால், விதைகளில் இருக்கும் நுண்ணூட்டப் பொருள்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் பொருள்களின் மருத்துவக் குணங்கள் நமக்குக் கிடைக்காமல் போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button