இத பண்ணுங்க.! உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா?
தங்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் வெளியே சொல்லிவிடுவார்கள்.
ஆனால், பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும் யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள். வெளியில் சொல்லத் தயங்குவார்கள்.
சினிமாக்களில் கூட “ஏன் பைல்ஸ் வந்தவன் மாறி நடக்குற” என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கும். பைல்ஸ் என்பதும் ஒரு நோயே. இந்நோயை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் வருவது வருத்தப்படக்கூடிய ஒன்று. இந்த காரணங்களாலும் ‘நான் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்’ என்பதை வெளியில் சொல்லத் தயக்கம் காட்டுகிறார்கள் மூல நோயாளிகள்.
மூல நோய் பொதுவாக 45 வயதை கடந்தவர்களுக்குத்தான் வரும் என்பார்கள். ஆனால், வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் சிறியவர்களுக்கும் இந்நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. மூல நோய் கடைசி நிலையை அடைந்துவிட்டால் கட்டாயம் அறுவை சிகிச்சையால் மட்டுமே இதை குணப்படுத்த இயலும்.
மூல நோய் என்றால் என்ன?
ஆசனவாயில் உள்ள ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதனுள்ளே இருக்கும் ரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது ரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை மூல நோய் அல்லது ‘பைல்ஸ்’ என்று அழைக்கிறோம். இந்நோயை மூன்று வகைகளாக பிரிப்பர்.
உள் மூலம் ( Internal piles )
வெளி மூலம் ( External piles )
பவுத்திர மூலம் (Fistula )
மூல நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
மலச்சிக்கலின் போது வேகமாக முக்கலுடன் மலத்தை வெளியேற்றும் போது ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இநோய் ஏற்படுவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் மலச்சிக்கல் மற்றும் மரபு வழி காரணமாக ஏற்படுவது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
* உடல் சூடு
* அதிக நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பது
* சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் இருப்பது
* மலச்சிக்கல்
* அதிகளவு வயிற்றுப்போக்கு
* அதிக உடல் பருமன்
* அதிகளவு இறைச்சி
* ஆல்கஹால்
* துரித உணவுகள்
* நார்ச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வது
* மரபு வழி
மூல நோய் எப்போது ஏற்படும்?
கோடைக்காலத்தில் தான் மூல நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஏனென்றால், கோடைக்காலத்தில் உடல் எப்போதும் கொதிநிலையிலேயே இருக்கும். அதனால், உடல் உணவை செரிமானம் செய்ய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
அந்த நேரத்தில் உடலை இன்னும் சூடாக்கும் உணவுகளை சாப்பிட்டாலும், பசிக்கும் போது சாப்பிடாமல், அதிக நேரம் வயிற்றைக் காயப்போட்டாலும் மூலநோய் உண்டாக வாய்ப்பு அதிகம். ஆதலால், கோடைக்காலங்களில் உணவு எடுத்துக் கொள்ளும் போது சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூல நோய்க்கான அறிகுறிகள்
* மலம் கழிக்கும்போது வலி ஏற்படுதல்
* இரத்தபோக்கு
* அரிப்பு
* ஆசனவாயில் கட்டி மற்றும் வீக்கம்
* மலச்சிக்கல்
இவ்வகை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முதல் கட்டத்திலே மூல நோய் இருப்பது கண்டறியப்பட்டால் சிகிச்சை மூலமாக குணபடுத்திவிடலாம். ஆனால், கடைசி நிலையை அடைந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மூல நோய் ஏற்படாமல் இருக்க சில எளிய உத்திகள் உள்ளன. அவற்றை பற்றிக் காணலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
குடல் இயக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உணவு முறை அல்லது கூடுதலாக நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் மூல நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இது மிகவும் எளிதான, இயற்கையான வழிகளில் ஒன்று.
உணவில் நார்ச்சத்து சேர்ப்பது என்பது இரைப்பைக் குடலியல் நிபுணர்களின் உலகளாவிய பரிந்துரையாக உள்ளது. ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகள் குடலின் அசைவுகளை துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும்.
* பருப்பு வகைகள்
* பச்சை பட்டாணி
* பயறு வகைகள்
* பீன்ஸ்
* ஓட்ஸ்
* பழுப்பு அரிசி
* முழு தானியங்கள்
* காய்கறிகள்
* ப்ரோக்கோலி
* பேரீச்சம் பழம்
* ஆப்பிள்
* வாழைப்பழம்
* பேரிக்காய்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது
நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு, தண்ணீரிலிருந்து போதுமான நீரேற்றமும் ஆரோக்கியமான குடல் இயக்கங்களுக்கு முக்கியமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
ஒவ்வொரு நாளும் ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய செரிமான அமைப்பு சீராக இயங்கும். இது முழு உடலுக்கும் பயனளிக்கும். மூல நோய் ஏற்படாமல் பாதுகாக்க இது மிகவும் எளிய வழிமுறை.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி, யோக, நடை பயிற்சி, நீச்சல் ஆகியவை செய்வதால் மூல நோய் ஏற்படுவதிலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதால் பெருங்குடல் சீரான இயக்கத்தில் செயல்படும். பளு தூக்குதல் போன்ற அதிக எடைகொண்ட பொருட்களைத் தூக்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதிக எடை தூக்குவதால் கூட மூல நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
மலமிளக்கி
மலச்சிக்கல் ஏற்படும்போது, உடனடியாக மலமிளக்கி மருந்துகளை பயன்படுத்தி மலத்தை வெளியேற்றலாம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே முடிந்தவரை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், சிறு வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மலமிளக்கியை அதிகளவு பயன்படுத்தும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
சிரமப்படுவதை தவிர்க்க வேண்டும்
உங்கள் மலக்குடலில் உள்ள நரம்புகளுக்கு சிரமம் மற்றும் அதிக அழுத்தம் கொடுப்பது வலி அல்லது இரத்தபோக்கு உள்ள மூல நோய் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும். கனமான பொருள்களைத் தூக்குவது, நாள்பட்ட இருமல் அல்லது கர்ப்பம் போன்ற பிற சூழ்நிலைகளும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் மூலம் நோய் ஏற்படலாம்.
ஆதலால், உடலுக்கு சிரமம் தரும் எந்த செயலையும் செய்யாமல் இருப்பது மூல நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மலச்சிக்கலை தவிர்த்து மூல நோய் ஏற்படாமல் பாதுகாக்க இந்த எளிய வழிமுறைகளை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றலாம்.