மருத்துவ குறிப்பு

தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி

தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லி நாம் அன்றாடம் எவ்வகையிலேனும் உணவோடு சேர்த்துக் கொள்ளும் ஓர் வாசனை நிறைந்த கீரை வகையாகும். கொத்தமல்லி உள்ளுறுப்புகளைத் தூண்டிச் செவ்வனே செயல்படச் செய்யும் ஓர் அற்புத தூண்டுவிப்பான் ஆகும்.தொல்லை தரும் வயிற்று நோய்களைப் போக்குவிக்கும் வல்லமை பெற்றதாகும். வயிற்றில் சேர்ந்து வயிற்றைப் பெருக்கச் செய்தும் வலிக்கச் செய்தும், மூச்சிறைப்பு ஏற்படுத்தியும் துன்பம் தருகின்ற வாயுவை வெளியேற்றிச் சுகமுண்டாக்குவது கொத்தமல்லியும் அதன் விதையுமாகும். விட்டுவிட்டு வந்து வலியை உண்டாக்குவதும் வயிற்றை இழுத்துப் பிடித்தாற் போல வலிக்கின்ற நிலையையும் போக்கக் கூடியது கொத்தமல்லியாகும்.மேலும் இதை எவ்வகையிலேனும் உணவோடு சேர்த்துக் கொள்வதால் உடலில் சேர்ந்து தேங்கி வீக்கம் உண்டாகக் காரணமாக இருக்கும் சிறு நீரைத் தாராளமாக வெளியேற்றக் கூடிய வல்லமை உள்ளது ஆகும். மேலும் ரத்தத்தில் சேறும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயினின்று பாதுகாப்பு தரக்கூடியதாகும்.மேலும் வீக்கத்தைக் கரைக்க கூடிய ஓர் உன்னத மருந்தாகவும் கொத்தமல்லி விளங்குகின்றது. கொத்தமல்லி விதைகளினின்று ஓர்வித எண்ணெய் தயார் செய்யப்படுகின்றது. இவ்வெண்ணெய் நுண் கிருமிகளை அழித்து அகற்றவல்லது, புழுக்களையும் போக்கவல்லது. கொத்தமல்லியை சீன தேசத்து மக்கள் தட்டம்மை நோயின் துன்பத்தை தணிக்கவும், சர்க்கரை நோய்க்கு ஓர் தடுப்பாகவும், அகட்டு வாய்வு அகற்றியாகவும், வயிற்றுக் கோளாறுகளைத் தரும் பேதி, டைபாய்ட் போன்ற நோய்களினின்று சுகம் பெறவும் பயன்படுத்துகின்றனர்.

கொத்தமல்லியில் “கோலின்” என்னும் வேதிப்பொருளும் மிகுதியாக அடங்கியுள்ளது. அது குறிப்பிட்ட சில ஈரல் நோய்களைப் போக்கும் திறன் படைத்தது. கொத்தமல்லியை உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் போது ஒரு வேளைக்கு விதைப்பொடி, 1 முதல் 3 கிராம் வரை அந்தி சந்தி என இருவேளை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவ நூல்கள் பரிந்துரை செய்கின்றன.

கொத்தமல்லியின் விதையும் மகத்தான மருத்துவப் பயன்களை உள்ளடக்கிய ஓர் உன்னத மூலிகைப் பொருளாகும். இரண்டு கிராம் கொத்தமல்லி விதைப் பொடியில் கீழ்க்காணும் சத்துப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவை பின் வருமாறு:-

“புரோட்டின்” 223 மி.கி., நீர்ச்சத்து 0.2 கிராம், “பைட்டோ ஸ்டிரால்ஸ்” 828 மைக்ரோ கிராம், மொத்த சத்துவம் 5.4 மி.கி., “கார்போஹைட்ரேட்” 0.99 கிராம், உணவாகும் நார்ச்சத்து 754 மி.கி., கொழுப்புச் சத்து 320 மி.கி., விட்டமின் ‘சி’ சத்து 378 மைக்ரோ கிராம், தயாமின் 4.3 மை.கிராம், ரிபோஃப்ளேவின் 5.2 மை.கிராம், நியாசின் 38 மை.கிராம், தாது உப்புக்கான “கால்சியம்” 13 மி.கி., இரும்புச் சத்து 294 மை.கிராம், “மெக்னீசியம்” 5.9 மி.கி., “பாஸ்பரஸ்” 7.4 மி.கி., “பொட்டாசியம்“ 23 மி.கி., “சோடியம்” 630 மை.கிராம். துத்தநாகம் பொட்டாசியம் 85 மை.கிராம், செம்பு 18 மை.கிராம், “மேங்கனீஸ்” 34 மை.கிராம், “செலினியம்” 0.47 மை.கிராம் ஆகியனவாகும்.

தனியாவின் மருத்துவப் பயன்கள்:

* தனியாவில் இருக்கும் “சினியோல்” மற்றும் “லினோலிக் அமிலம்” ஆகியன மூட்டுவலிகளைத் தனிப்பதாகவும் வாத வலிகளைப் போக்குவதாகவும், வீக்கத்தைக் குறைப்பதாகவும் விளங்குகின்றது. மேலும் சிறுநீரகப் பழுதாலும் ரத்த சோகையாலும் ஏற்படும் துன்பங்களைத் துடைப்பதாகவும் விளங்குகின்றது.

* தனியா ரத்தத்தில் ஒன்றியுள்ள கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படா வண்ணம் பாதுகாக்கிறது.

* தனியா சீரண உறுப்புகளுக்கு பலம் சேர்ப்பதாகவும் ஈரலின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவும் வயிற்றுப் போக்கை உடனடியாக குணப்படுத்தக் கூடியதாகவும் விளங்குகின்றது.

* தனியாவுக்கு நுண்கிருமிகளை ஒழிக்கவும், புண்களை ஆற்றவும் தேவையான மருத்துவ குணங்கள் உண்டு. இதை வாயிலிட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் விலகி போவதோடு வாய்ப்புண், நாக்குப்புண், ஈறுகளின் வீக்கம் ஆகியவையும் ஓடிப்போகும்.

* தனியாவில் அடங்கி இருக்கும் வாசனைச் சத்து பசியைத் தூண்டி செரிமானத்தை ஊக்குவிக்கக் கூடியது.

* தனியாவில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை, புத்துணர்வைத் தரும் தன்மை, நோய்த் தொற்றைத் தடுக்கும் தன்மை, தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை ஆகியன உடலுக்கு நோய் எதிர்ப்புச் சத்தை அளிக்க வல்லது ஆகும். அம்மை போன்ற நோய்கள் வராது காத்து நிற்கிறது.

* தனியா உடலிலுள்ள நாளமில்லா, நாளமுள்ள சுரப்பிகளைத் தூண்டி உடல் நலத்துக்கு உறுதுணையாக விளங்குகிறது. மேலும் இது மாதவிடாய்க் கோளாறுகளைச் சீர் செய்து மாதவிலக்குக் காலத்தில் ஏற்படும் வலியைப் போக்குவதாகவும் உதவுகிறது.

* தனியாவில் செரிந்துள்ள விட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்துக்களோடு புத்துணர்வு தூண்டிகள், தாது உப்புக்களான “பாஸ்பரஸ்” போன்றவை கண்களின் சுழற்சியைப் போக்கிக் கண்களுக்கு ஆரோக்கியத்தையும் கூர்மையான பார்வையையும் தர வல்லவையாக விளங்குகின்றன.

* தனியா வயிற்று வலி, குமட்டல், ஈரல் கெடுதல், அமிலச் சுரப்பால் வயிற்றில் புண்கள், சீதபேதி, காய்ச்சல், டைபாய்ட் காய்ச்சல், சுவாசப்பாதைக் கோளாறுகள் இருமல், சளி ஆகிய துன்பங்களையும் துடைத்து அகற்றும் வல்லமை பெற்ற ஓர் உணவாகும் மருந்து என்று சொல்வது மிகையாகாது.

கொத்தமல்லி மருந்தாகும் விதம் :

* கொத்தமல்லி இலைச்சாறு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து புளிப்பில்லாத புதிய மோரில் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் அசீரணத்தை அகற்றும், வயிற்றில் சேர்ந்த வாயுவை வெளியேற்றும் இருமலைத் தணிக்கும்.

* கொத்தமல்லி இலையை மைய அரைத்து நெற்றிக்கு பற்றாகப் போட காய்ச்சல் தலைவலி, ஒற்றைத் தலைவலி மட்டுப்படும்.

* கொத்தமல்லி விதைச் சூரணத்தை இரண்டு கிராம் அளவு எடுத்து நீரிலிட்டு உடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவிட்டு எடுத்து ஆறவைத்துக் குடிக்க அது ஒரு சிறு நீர்ப்பெறுக்கியாக பயன்படுவதோடு சிறு நீரகத்துக்கு பலம் தந்து செம்மையாகச் செயல்படச் செய்ய உதவும், சிறு நீர்த் துரையில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவையும் குணமாகும்.

* கொத்தமல்லி விதைச் சூரணத்தை இளஞ்சூட்டில் பச்சை வாடை போகுமாறு வறுத்து இரண்டு கிராம் அளவு தேனிலோ மோரிலோ சேர்த்துக் குடிக்க ரத்தம் கலந்து போகும் குருதிக் கழிச்சல், அசீரணக் கழிச்சல் ஆகியன குணமாகும்.

* கொத்தமல்லி விதைச் சூரணம் வெருகடி அளவும் அதன் சம அளவு சோம்புச் சூரணமும் சேர்த்து சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட இடைவிடாத ஏப்பம் நீங்குவதோடு இதயமும் பலம் பெறும்.

* கொத்தமல்லி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வற்றாத வீக்கம், கரையாத கட்டிகள் ஆகியவற்றின் மேல் வைத்துக் கட்டி வைக்க வீக்கம் வற்றி கட்டிகளும் கரைந்து போகும்.

* கொத்தமல்லி இலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்ணுவதால் வயிற்றுப்புண் குணமாவதோடு விந்து வெளியேறி வீணாகுதல் தவிர்க்கப் பெறும்.

* கொத்தமல்லி இலையும், விதைச் சூரணமும் தாராளமான உணவில் சேர்த்துக் கொள்வதால் விந்தவைக் குறைபாடுகள் விலகிப்போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button