ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… கொளுத்தும் வெயில்.. வீட்டை குளிர்ச்சியுடன் எப்படி வைத்து கொள்ளலாம்?

கோடைக்காலத்தில் வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்!!

கோடை வெயில், வெளியில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு கொளுத்துகிறது. வெளியே போகாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நம்மால் நன்கு உணர முடிகிறது.

அதனால் பலரும் ஏ.சி. வாங்க நினைப்பார்கள். ஏ.சி. உடலுக்கு தீங்கு தருபவை என்பதால், இயற்கையாகவே வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வது? என்று பார்க்கலாம்.

பகல் நேரத்தில் வீட்டில் தேவையில்லாமல் விளக்குகளை போடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் வெப்ப அளவு அதிகரிக்கிறது.

வீட்டிற்குள் காற்று வர வேண்டும் என்பதற்காக திரைச்சீலைகளை நீக்கிவிட்டு, வெயில் காலத்தில் வீட்டின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும். அதற்குப் பதிலாக அனல் காற்று வீட்டினுள் நுழையாதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். இதனால் அனல் காற்று வீட்டினுள் வராமல் இருக்கும்.

தினமும் காலை, மாலை என இரு வேளையும் வீட்டை நன்றாக சுத்தமான தண்ணீரால் துடைத்தால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

காற்றை வெளியேற்றும் மின்விசிறியை, வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறையில் பொருத்த வேண்டும். இதனால் வீட்டிலுள்ள வெப்பக் காற்றை, அந்த மின்விசிறி வெளியேற்றி, அறையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

படுக்கை அறை குளிர்ச்சியுடன் இருக்க, இரவில் படுக்கும் போது டேபிள் மின்விசிறியின் முன் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். இதனால் அறையில் வெப்பம் குறைந்து, படுக்கை அறை நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.

மாலை மற்றும் இரவு வேளைகளில் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். இதனால் வீட்டினுள் காற்றோட்டம் அதிகரித்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும்.

கோடைக்காலத்தில் நம் வீட்டை மட்டும் குளிர்ச்சியுடன் வைத்துக்கொண்டால் போதாது. நம் உடலையும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அதிகம் பருகுவதோடு, அதிகம் வெயிலில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button