ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…நம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க குடிச்சது இத தாங்க…

இன்று பலரும் உரையாடும் ஓர் விஷயம் என்றால் அது உடல் எடை குறைப்பு பற்றியதாக தான் இருக்கும். அதிலும் தற்போது ஊரடங்கினால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பார்கள். இந்த காலத்தில் பலரது மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் பலரும் தங்களின் உடல் எடையைக் குறைக்க இந்த ஊடரங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம். அப்படி நீங்கள் நினைப்பவராயின், இக்கட்டுரை உங்களுக்கானது.

பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றாலே அதில் உணவு பழக்கம் முக்கிய பங்கை வகிக்கும். உங்களுக்கு ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் தொப்பையின்றி இருந்ததற்கு காரணம் ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் அதோடு அவர்கள் குடிக்கும் சில பானங்களும் தான்.

முக்கியமாக நம் முன்னோர்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற குடித்து வந்த ஒரு பானம் தான் சோம்பு, சீரகம், மல்லி நீர். இந்த பானம் உடலை சுத்தம் செய்வதோடு, உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறவும் உதவி புரிகிறது. அதோடு இது ஒரு சிறப்பான கோடைக்கால பானமாகும். இப்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், இந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மல்லி – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 டம்ளர்

* எலுமிச்சை – 1/2

* தேன் – சுவைக்கேற்ப

* உப்பு – 1 சிட்டிகை

சீரகத்தின் நன்மைகள்

இந்திய மசாலாப் பொருட்களுள் ஒன்றான சீரகத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதோடு சீரகம் நல்ல செரிமானத்திற்கு தேவையான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும். செரிமானம் தடையின்றி சிறப்பாக நடந்தால், அது எடை இழப்பிற்கு வழிவகுக்கும். கோடையில் உடல் வெப்பம் அதிகரிப்பதால், அது பல்வேறு செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். சீரகம் அதைப் போக்க உதவும். சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், காப்பர் போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

மல்லியின் நன்மைகள்

மல்லி பல்வேறு கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் பவர்ஹவுஸ். இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவி, உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். இந்த விதைகளில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், இது பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்யும். முக்கியமாக மல்லியை கோடையில் உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் கோடை வெயிலால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் வியர்வையால் ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகள் தடுக்கப்படும்.

சோம்பின் நன்மைகள்

கோடையில் பருக்களால் நிறைய மக்கள் அவஸ்தைப்படுவார்கள். சோம்பில் உள்ள குளிர்ச்சித் தன்மை, சரும வெப்பத்தால் பருக்கள் வருவதைக் குறைக்கும். அதோடு இதில் ஜிங்க், கால்சியம், செலினியம் போன்ற சில கனிமச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் ஹார்மோன்கள் மற்றும் ஆக்ஸிஜன் அளவை சமநிலையில் பராமரித்து, ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக சோம்பு செரிமானத்திற்கும், மெட்டபாலிசத்திற்கும், எடை இழப்பிற்கும் உதவக்கூடியது என நிபுணர்களும் கூறுகின்றனர்.

பானம் தயாரிக்கும் முறை:

* முதலில் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில், 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில், அந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, சுவைக்கேற்ப தேன் மற்றும் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். உங்களுக்கு அசிடிட்டி இருந்தால் எலுமிச்சை சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.1 ingredietns 1589

இதர நன்மைகள்

சீரகம்-சோம்பு-மல்லி நீரை ஒருவர் காலையில் எழுந்ததும், டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும். மேலும் காலையில் இந்த பானத்தை தினமும் குடிப்பதன் மூலம், உடலில் இருக்கும் நச்சுக்கள் அன்றாடம் வெளியேற்றப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button