அசைவ வகைகள்

சுவையான குண்டூர் சிக்கன் மசாலா செய்வது எப்படி???

இது ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபி. சுவை அட்டகாசமாக இருக்கும். நிச்சயம் இதனை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்…

தேவையான பொருட்கள்:

சிக்கன்- 300 கிராம்
வெங்காயம்- 1
தக்காளி- 2
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 3
தயிர்- 1/2 கப்
எலுமிச்சை பழம்- 1/2
கடுகு- 1 1/2 தேக்கரண்டி
வர மல்லி- 2 தேக்கரண்டி
மிளகு- 2 தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
வெந்தயம்- 1/4 தேக்கரண்டி
வர மிளகாய்- 4
துருவிய தேங்காய்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மல்லி தழை- சிறிதளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:

குண்டூர் சிக்கன் மசாலா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் 300 கிராம் அளவு சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை எடுத்து கொள்ளவும். அதில் 1/2 மூடி எலுமிச்சை சாறு, 1/2 கப் தயிர், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து இருபது நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளலாம்.

அடுத்து சிக்கன் மசாலா செய்வதற்கு ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி முழு தனியா, இரண்டு தேக்கரண்டி முழு மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு, நான்கு காய்ந்த மிளகாய் மற்றும் இரண்டு தேக்கரண்டி துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டதும் அடுப்பை அணைத்து விட்டு இதனை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம் போடவும். கடுகு பொரிந்தவுடன் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.

இப்போது ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளலாம். வெங்காயம் பாதி வதங்கியதும் மூன்று பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள்.

ஒரு தேக்கரண்டி உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மசாலா ஐந்து நிமிடங்கள் வதங்கிய பின் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். இதனோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.

கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இது சாம்பார், ரசம் ஆகியவற்றிற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இதனை அப்படியேவும் சாப்பிடலாம். உங்கள் அனைவருக்கும் நிச்சயம் இந்த ரெசிபி பிடிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button