மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…லேப்டாப் உபயோகிப்பவரா நீங்கள்? இத படிங்க முதல்ல…

இன்று மடிக்கணினி அல்லது ஆங்கிலத்தில் லேப்டாப் என்று அழைக்கப்படும் கணினியின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பள்ளி குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரிடம் தற்பொழுது லேப்டாப்பை பார்க்கலாம். தற்பொழுதுள்ள சூழ்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள், முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லாமல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க சொல்கின்றனர். மாணவர்களும் கூட கணினியின் முன் உட்கார்ந்து இணைய வழி கல்வியை கற்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

இவ்வாறு லேப்டாப்பே கதி என்று அதன் முன் தவம் கிடைக்கும் பலர், சரியான முறையில் அதை பயன்படுத்துவதில்லை. படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும், இன்னும் பல நிலைகளில் கணினியை உபயோகித்து கொண்டிருப்பார்கள். அலுவலகத்தில் சரியான மேஜை நாற்காலி இருக்கும் பொழுதே அதில் பெரும்பாலானோர் சரியாக உட்காருவதில்லை. இதில் வீட்டில், சொல்லவா வேண்டும்? வாருங்கள், சரியான நிலையில் எவ்வாறு லேப்டாப்பை இயக்குவது என்பதை பற்றி பாப்போம்.

லேப்டாப்பை எங்கே வைப்பது?

என்ன தான் லேப்டாப் அல்லது மடிக்கணினி என்று அழைத்தாலும், அதனை மடியில் வைத்து உபயோக படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மடியில் வைத்து உபயோகப்படுத்துவதால் நீங்கள் தலையை சாய்த்து குனிந்துதான் திரையை பார்க்க முடியும். இந்த பழக்கம் நாளடைவில் கழுத்து வலியினை ஏற்படுத்திவிடும். அதே போல் உங்கள் முதுகுத்தண்டும் வளைந்து முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கூட வர வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால், லேப்டாப்பை எங்கே வைத்தால் நல்லது? ஒரு சாதாரண கணினியை நீங்கள் எப்படி வைத்திருப்பீர்களோ அதே போல் லேப்டாப்பையும் வைக்க வேண்டும். அதாவது, ஒரு நன்கு உயரமான மேஜையின் மேல், எந்த ஒரு அசௌகரியமும் இல்லாமல் பார்க்கும் நிலையில் வைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், லேப்டாப் திரையை முன் பின் வளைக்காமல் கண்களுக்கு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எவ்வாறு உட்காருவது?

லேப்டாப்பை சரியான நிலையில் வைத்தாயிற்று, இப்பொழுது நாம் எப்படி உட்கார வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். லேப்டாப்பை வைத்த மேஜையின் முன் சரியான ஒரு நாற்கலியை போட்டு அதில் முதலில் உட்கார்ந்து உங்கள் கண்கள் லேப்டாப்பிற்கு நேராக இருக்கிறதா என பாருங்கள். கண்களுக்கு நேராக இல்லையென்றால் வேறொரு நாற்காலியை எடுத்து சோதித்துப் பாருங்கள், அல்லது தலையணையை நாற்காலியின் அடியில் வைத்து உயரத்தை சரிசெய்து கொள்ளுங்கள். அதே போல், முதுகும் நேராக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் முதுகு பகுதிக்கும் ஒரு தலையணை வைத்து முதுகு நேர் நிலையில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், முதுகு தண்டுவடத்தில் சிறிதளவு ஏற்படும் அழுத்தம், உங்களுக்கு பெரிய பிரச்சனையை பிற்காலத்தில் ஏற்படுத்திவிடும். கூன் விழுதல், முதுகு வலி, தண்டுவட தேய்மானம், போன்றவை சரியாக உட்காராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் ஆகும்.

கை மற்றும் கால்களை எவ்வாறு வைப்பது?

பொதுவாக முழங்கைக்கு கீழ் உள்ள பகுதி மேஜையின் மேல் நல்ல ஓய்வு நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் தனியாக கீபோர்டும் தனியாக ஒரு ட்ரேயில் வைத்து உபயோகிக்கலாம். அவர்கள் முடிந்தவரை ட்ரேவை முழங்கைக்கு கீழாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராக கைகளின் நுனி வரை செல்லும். அதே போல் கால்களை நாற்காலியின் மேலோ, மேஜையின் மீதோ நீட்டாமல், நன்கு நேரான நிலையில் கீழே தொங்க விட வேண்டும்.

சரியான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம்

உங்கள் லேப்டாப்பை முடிந்த வரை நல்ல வெளிச்சமான அல்லது காற்றோட்டமான இடத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் லேப்டாப்பின் ஆயுளும் கூடும். லேப்டாப்புகள், பொதுவாக எளிதில் சூடாக கூடியவை. நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கும் பொழுது அவை பெரிதாக சூடாவதில்லை. வெளிச்சமான இடத்தில வைப்பதால் உங்கள் கண்களுக்கு ஏற்படும் சிரமம் குறைகிறது. உங்கள் அறையை வெளிச்சமாக வைத்து கொள்வதுடன், உங்கள் திரையிலுருந்து வரும் வெளிச்சத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் கணினி செட்டிங்கை மாற்றினால் போதுமானது. இவற்றுடன் மிக முக்கியமாக ஒரு முறை சார்ஜ் ஏறியதும் லேப்டாப்பை சார்ஜரை கழற்றி விடுங்கள். இது உங்கள் லேப்டாப் அதிகமாக சார்ஜ் ஏறாமல் பாதுகாக்கும். நீங்கள் இரவில் உபயோகிப்பவராக இருந்தால், அறையின் விளக்கை அணைக்காமல் வெளிச்சத்திலேயே லேப்டாப்பை உபயோகியுங்கள்.

இடையிடையே உடற்பயற்சி

என்னதான் நீங்கள் மேற்சொன்ன முறைகளை பின்பற்றினாலும், நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு ஐந்து நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் கை கால்கள் புத்துணர்ச்சி அடைவது மட்டுமின்றி, கண்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. நடைப்பயிற்சி முடிந்ததும் ஒரு குவளை நிறைய தண்ணீரை அருந்திவிட்டு உங்கள் வேலையை நீங்கள் தொடரலாம். சிலர் வேலையில் மூழ்கிவிட்டால், சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு மணிக்கு ஒரு முறை அலாரம் அமைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவராக இருந்தால், இந்த பயன்பாட்டுக்காகவே நிறைய ஆப்கள் கிடைக்கின்றன. நீங்கள் அதனை உங்கள் போனில் அதை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

கணினி வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை, அவர்கள் ஏற்கனவே அதை பயன்படுத்த ஏதுவாக நல்ல மேஜையை வாங்கியிருப்பார்கள். மடிக்கணினி வைத்திருப்பவர்கள் அப்படியல்ல, எனவே, இல்லையென்றால் சரியான ஒரு மேஜையை புதிதாக கூட வாங்கி கொள்ளுங்கள். அதே போல், முடிந்தால் தனியாக ஒரு கீபோர்டு மற்றும் மௌசை வாங்கி கொள்ளுங்கள். இதை உங்கள் ஆரோக்கியத்திற்கு செய்யும் முதலீடு என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button