மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

உங்களுடைய உடலில் 500 விதமான செயல்பாடுகளை செய்யக்கூடிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. கல்லீரலில் ஏற்படும் எந்தவிதமான பாதிப்பும், அது செய்யும் வேலைகளையும் பாதிக்கும். பொதுவாக கல்லீரலானது குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகிறது.

இதன் மூலம் உடலில் பல சிக்கல்கள் வந்து சேருகின்றன. இந்த கட்டுரையில் கல்லீரல் நோய் இருப்பதற்கான சில முக்கியமான அறிகுறிகளைப் பற்றிக் கொடுத்துள்ளோம்.

குமட்டல் மற்றும் வாந்தி

பெரும்பாலான நோய்கள் வரும் போது தோன்றும் பொதுவான அறிகுறியாகவே இது உள்ளது. குமட்டல் என்பது வாந்தியை வரச் செய்யும் உணர்வுடன், வேர்வை மற்றும் அதிகபட்ச எச்சில் சுரத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வாந்தியின் போது வயிற்றிலுள்ளவை அனைத்தையும் வாய் வழியாக, வலியுடன் வெளியேற்றுவதைக் குறிக்கும்.

வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படுதல்

உங்களது வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் தான் கல்லீரல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உங்களுக்கு வலி ஏற்படுவதாகத் தோன்றினால், கல்லீரல் நோய் அறிகுறிகளில் ஒன்றாக அதைக் கருதலாம். எனவே, உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

செரிமானக் குறைபாடு

சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் மிகவும் முக்கியமான உறுப்பாக இருக்கும் கல்லீரலில், எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் உணவுகள் செரிமானம் ஆவதில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக உங்களால் சரியாக சாப்பிட முடியாமல் போகலாம் அல்லது வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு தோன்றலாம்.

வலுவின்மை மற்றும் களைப்பு

உடலுக்குச் செல்லும் பெரும்பாலான தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்களை கவர்ந்திழுக்கும் பொறுப்பை கல்லீரல் கொண்டுள்ளது. எனவே கல்லீரல் முறையாக செயல்படுவது தடைப்பட்டால், உடல் வலுவின்மை மற்றும் களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எடை குறைவு

நாம் உட்கொள்ளும் உணவை நமது உடல் சரியாக செரிக்க முடியாத காரணத்தால், நமக்கு பசி ஏற்படுவது குறையும். அதனால், நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து விடும். இதன் காரணமாக நமது உடலில் சராசரியான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு, திடீரென்று உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். இதற்கும் கல்லீரல் நோய் தான் காரணமாக இருக்கும்.

சருமம் மஞ்சள் நிறமாதல்

ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுடைய சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறத் துவங்கியிருக்கும்.

குறிப்பு

கல்லீரல் நோயினால் வேறு சில சிக்கல்களும் வருகின்றன. எனவே, இந்த நோய் வருவதை உணர்ந்து கொள்ள வேண்டியதும், வருமுன் காத்து ஆரோக்கியத்தைப் பேணுவதும் மிகவும் அவசியமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button