ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் கோபத்தைக் கையாள 5 எளிய வழிகள்!!!

குழந்தைகளா இதுங்க! பேய்ங்க! என்று சொல்பவரா நீங்கள்? ஆமாம் குழந்தைகளைக் கையாளுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். அண்மையில் நட்த்தப்பட்ட ஆய்வு ஒன்று, குழந்தைகளின் கோபத்தைச் நல்ல முறையில் சமாளிப்பது என்கின்ற இந்த சவாலான பணி குறைந்த அளவு மட்டுமே முடிகின்றது எனத் தெரிவிக்கிறது.

உண்மையில், பெற்றோரில் சரிபாதியினர் இந்த சூழ்நிலைகளில் கத்திக் கூச்சல் போடுவது மற்றும் கதவினை படாரென மூடுவது ஆகியவற்றைச் செய்வதாக ஒத்துக்கொள்கின்றனர். உடல் ரீதியான மற்றும் வன்முறையான பிரதிபலிப்புகள் இதில் அடக்கம். சைக்கோபேதாலஜி ஆய்விதழில் வெளிவந்த ஒரு அறிக்கை, 85 சதவிகித இளம்பருவத்தினர் தங்களுடைய தவறான நடத்தைகளுக்காக அடி உதை வாங்குவதாகத் தெரிவித்துள்ளது. சரி பாவம் இந்த மாதிரி சூழ்நிலைகளை நிதானத்தோடு கையாளும் வழிகளைப் பார்ப்போமா?

அமைதியாக இருத்தல் மற்றும் அருகிலிருந்து கவனித்தல்

பெரும்பாலான பெற்றோர்கள் மிகுந்த சோர்வு மற்றும் பொறுமையின்மை காரணமாக கோபம் கொள்கின்றனர் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. சிலசமயம் அது அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் சவாலாகவும் அமைகிறது. சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக நேரிடும். அம்மாதிரி சமயங்களில் பெற்றோரின் கோப வெளிப்பாடு நிலைமையை மோசமாக்குவதுடன் அமைதி திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே, அவ்வேளைகளில் குழந்தைகள் வெளிப்படுத்தும் அதே விதமான உணர்வுகளை பயன்படுத்தாமல் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும். பெரும்பாலான நிபுணர்கள் அந்த சூழ்நிலைகளில் அமைதி காப்பதையே பரிந்துரைக்கின்றனர். குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றனர். இந்த முறையில் குழந்தை மனம் காயப்படுத்தப் படாமலும், கைவிடப்படாமலும் இருக்கும்.

உடல் ரீதியான அடக்குமுறைகள் அறவே கூடாது

கோபமாக இருக்கும் போது குழந்தை வீட்டில் உள்ள பொருட்களை உதைப்பதோ, உடன் பிறந்தோரை அல்லது பெற்றோரை துன்புறுத்துவதோ அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளத் தொடங்கும். அவ்வாறான சமயங்களில் பெற்றோர் உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும். உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும். அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது. பெற்றோர் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுங்கள்

கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம். குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும்.

முதலில், என்ன நடந்தது என்று விளக்கம் கேளுங்கள். பெரும்பாலான பெற்றோர் இதைச் செய்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தங்களுடைய பிரச்சனைகளே பெரிதாகப்பட்டதோடு, அவற்றை சரிசெய்யவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அடுத்ததாக அவர்கள் வெவ்வேறு வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுங்கள். இளம் குழந்தைகளிடம் பெற்றோர் இவற்றையெல்லாம் மிகவும் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும்.

இறுதியாக, கோபத்தைக் கையாள வேண்டிய விதங்களையும் நடந்து கொள்ள வேண்டிய விதங்களையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள். வெறுப்பான மற்றும் கோபமான தருணங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தைகளைக் குறித்து பேசுங்கள்.

கோபத்தைக் குறைக்க உடல் ரீதியான ஈடுபாடுகள்

போதுமான அளவு உடல் ரீதியான செயல்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழியில் கோபத்தை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி சரிசெய்யலாம். வீட்டிலுள்ள பின்புறத்தின் சுவரும் சில ஈரமான பழைய துணிகளையும் கொண்டு சில எளிமையான விளையாட்டை விளையாடலாம். குழந்தைகள் தங்கள் பள்ளியில் தங்களை கோபமுறச் செய்த விஷயத்தை நினைத்துக் கொண்டு, அந்த சுவற்றில் அது குறித்து எழுத வேண்டும். பின்னர் அந்த ஈரத்துணிகளைக் கொண்டு அவர்கள் எழுதியுள்ள சுவற்றில் அவற்றை வீசுவதன் மூலம் தங்கள் கோபத்தை ஆபத்தின்றி வெளிப்படுத்த முடியும். இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் கோபத்தை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளதை அடிமனதில் பதிய வைக்கலாம்.

நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்

மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள். இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள். நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள். உங்களுக்கும் சில இடைவெளி தேவை என்பதை உணர்த்த அச்சப்பட வேண்டாம். சிலர் தங்கள் கார்களை எடுத்துக் கொண்டு இந்த சூழ்நிலைகள் முழுவதும் காரிலேயே செலவிடுவார்கள். இன்னும் சிலர் தனியாக சென்று தங்கள் தலையணையை அடித்து கோபத்தை போக்கிக்கொள்வார்கள்.

இதில் பெரிய சவால் குழந்தைகள் கோபம் குறித்து பெற்றோர் ஆவேசப்படுவதான். ஏனென்றால் அவர்கள் தங்கள் பொறுமையின் எல்லையை அடைந்துவிடுகின்றனர். இதுதான் பெற்றோருக்கு ஒரு பெரிய சோதனை. மேற்ச்சொன்ன ஐந்து வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெற்றோர் தங்களுடைய மற்றும் தங்கள் பிள்ளைகளுடைய கோபத்தை நன்கு கையாள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button