ஆரோக்கிய உணவு

சுவையான பூசணிக்காய் சாம்பார்

கோடை காலம் ஆரம்பிக்கும் நிலையில், உடலில் நீச்சத்துக்களின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. அப்படி உடலின் நீச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்களின் அளவை அதிகரிக்க, வெள்ளை பூசணிக்காயை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. இங்கு அந்த வெள்ளை பூசணிக்காயைக் கொண்டு எப்படி சாம்பார் செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் மதிய வேளையில் சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப்

புளி – 1 எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் – 3-4

தக்காளி – 1 (பெரியது, நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளை பூசணிக்காய் – 5 துண்டுகள்

கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் புளியைப் போட்டு 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து வெங்காயம், தக்காளியை போட்டு, நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

பிறகு பூசணிக்காயை போட்டு லேசாக வதக்க வேண்டும்.

பின் குக்கரில் உள்ள பருப்பை மசித்து, வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து, வாணலியில் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூசணிக்காய் சாம்பார் ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button