ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்குதான் இந்த விஷயம்! கணவன் மனைவி சண்டையின் போது செய்ய கூடாத சில விஷயங்கள்!

கணவன் மனைவி உறவு என்பது எப்போதும் ஆரோக்கியமான உறவாக இருக்க வேண்டும். இந்த உறவுக்குள் சண்டைகள் இல்லாமல் இருக்கவே முடியாது என்பது உண்மை.. ஆரோக்கியமான மற்றும் ஆழமான உறவுகளுக்குள் சண்டைகள் வருவது என்பது இயல்பான ஒன்று தான்..!

சண்டைகள் எப்போதுமே உறவை மேம்படுத்துவதாகவும், விவாதங்கள் எப்போதுமே ஆரோக்கியமான நல்ல விவாதங்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.. சண்டைகளை அடுத்த நாளுக்கு எடுத்து செல்வது என்பது கூடவே கூடாது..! சண்டையிடும் போது கோபம் வருவது இயல்பான ஒன்று தான்..

ஆனால் அதற்காக நீங்கள் உங்களது துணைக்கு பிடிக்காத விஷயங்களை வேண்டுமென்றே பேசி சண்டையை பெரிதாக்குவது என்பது கூடாது.. இந்த பகுதியில் கணவன் மனைவி சண்டையில் எதை எல்லாம் செய்ய வேண்டும் மற்றும் எதை எல்லாம் செய்ய கூடாது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்…!

கோபம்!

கணவன் மற்றும் மனைவி இருவருமே ஒரே சமயத்தில் கோபமாக இருக்க வேண்டாம்.. இது சற்று கடினமானது தான் என்றாலும், ஒருவர் கோபமாக இருக்கும் போது என்ன நடந்தாலும் மற்றோருவர் கோபப்படாமல் இறுதி வரையில் மற்றொருவரை சமாதனம் செய்ய பாருங்கள்.. இருவரும் ஒரே சமயத்தில் கோபமாக இருந்தால் சண்டை முடிவுக்கு வருவது மிகவும் கடினமானதாகும்.

கடந்த காலம்!

கணவன் மனைவி சண்டையின் போது எப்போதுமே கடந்த காலத்தினை பற்றி பேசி உங்களது துணையை காயப்படுத்தாதீர்கள்.. மறக்க நினைக்கும் கடந்த காலத்தினை நினைவுப்படுத்தி அவரது மனதை கஷ்டப்படுத்தாதீர்கள்..

குறை கூறுதல்

மனிதனாக பிறந்தால் நிச்சயம் சில குறைகள் இருக்க தான் செய்யும். அதற்காக இருவரும் மாறி மாறி சண்டையின் போது ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக் கொண்டே இருக்காதீர்கள்.. இது சண்டையை பெரிதுபடுத்துவதுடன், பேசிய வார்த்தைகள் காயத்தை உண்டாக்கும்.

வெற்றி யாருக்கு?

சண்டையில் யாரோ ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும்.. எனவே சண்டையில் வெற்றியடைவது உங்களது துணையாகவே இருக்கட்டும் என்று விட்டுவிடுங்கள்.. நான் தான் வெற்றியடைய வேண்டும் என இருவருமே நினைத்துக் கொண்டு இருந்தால் சண்டை முடியவே முடியாது..!

குறையை சொல்ல வேண்டுமா?

உங்களது துணையின் மீது உள்ள குறையை கூற வேண்டும் அல்லது அவர் செய்த தவறை எடுத்துரைக்க வேண்டும் என்றால், உடனே போர்க் கொடி தூக்கிவிட்டு சண்டையில் குதிக்காதீர்கள்.. அன்புடன் அந்த குறையை எடுத்து சொல்லுங்கள்.. யாராக இருந்தாலும் உணர்ந்து கொள்வார்கள்.. சண்டை வராமல் காக்கலாம்…!

விட்டுக் கொடுப்பது!

எந்த ஒரு சூழ்நிலையிலும், யாருக்காவும் உங்களுடன் வாழ்க்கை முழுவதும் வாழ போகும் உங்களது துணையை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள்.. உங்களது துணைக்கு எப்போதும் ஆதரவாக நடந்து கொள்ளுங்கள்..

இதை செய்யாதீர்கள்!

குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதனை தூங்கும் முன்னர் முடித்து சமாதானம் செய்து விட்டு தூங்குங்கள்.. எந்த ஒரு பிரச்சனையையும் அடுத்த நாளுக்கு எடுத்து செல்லாதீர்கள்.. பின் அது முடிவது என்பது கஷ்டமான ஒன்றாகும்.

புகழ்ச்சி!

குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்களது துணையை பற்றி புகழ்ந்து பேசுங்கள்.. அவர் செய்யும் விஷங்களை புகழுங்கள்.. இது அவருக்கு அந்த நாள் முழுக்க உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் மீது அன்பும் பெருகும். நீங்கள் அவரை காதலித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் என்பது அவருக்கு புரியும்.

புகழ வேண்டும் என்பதற்காக பொய்யான புகழ்ச்சிகள் வேண்டாம். இன்று சாப்பாடு சூப்பர்.. இன்று நீ ரொம்ப அழகா இருக்க என்பது போன்ற சின்ன சின்ன பாராட்டுகளை கொடுங்கள்…

தவறு செய்தால்..!

நீங்கள் உண்மையிலேயே ஒரு விஷயத்தில் தவறு செய்து விட்டீர்கள் என்று தோன்றினால் நீங்கள் அதனை நினைத்து வருந்தி முழு மனதுடன் உங்களது துணையிடம் மன்னிப்பு கேளுங்கள்.. இது உங்களது துணைக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்துவதோடு, உங்களது உறவையும் மேம்படுத்துவதாக அமையும்.

கண்ணீர்

சண்டை என்று வந்துவிட்டால் நீங்கள் உங்களது கணவர் இல்லாத நேரத்தில் அழுது கொண்டு இருப்பது, பக்கத்து அறையில் அமர்ந்து அழுவது போன்றவைகள் வேண்டாம்.. இது உங்களது கணவரின் மனதை காயப்படுத்தும். எனவே வெளிப்படையாக உங்களது மனதில் உள்ள பிரச்சனைகளை சொல்லிவிடுங்கள்.

மௌனம்!

சண்டை வந்தால் மௌனமாக இருந்து விடலாம் என்று மௌனம் காக்காதீர்கள். உங்களது மௌனமானது உங்களது துணையின் கோபத்தை பெரிதுபடுத்த தான் செய்யும். நீங்கள் மௌனமாக இருந்தால் உங்களது மனதில் என்ன உள்ளது என்பதை உங்களது துணையால் கண்டு பிடிக்க இயலாது. எனவே மனதில் உள்ளதை வெளிப்படையாக உங்களது துணையிடன் பேசிவிடுங்கள்…!

வெளியில் செல்லுதல்

சண்டை மிகவும் அதிகமாகிறது என்றால் உடனே வெளியில் சிறிது நேரம் சென்று விடுங்கள்.. உங்களது மனதில் இருக்கும் கோபங்களும் சற்று தணியும் வரை வெளியில் இருந்து விட்டு வீட்டுக்கு வரும் போது உங்களது துணைக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு பொருளை வாங்கி வாருங்கள்.. அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை..

அதே சமயம் வீடு திரும்பும் நேரமும் முக்கியம்.. அதிகபட்சமாக அரை மணி நேரத்தில் வீடு திரும்பிவிட வேண்டியதும் அவசியமாகும்.. இதனை அடிக்கடி செய்வதும் கூடாது.. பிரச்சனைகளை அமைதியான முறையில் பேசி தீர்ப்பது தான் பிரச்சனைக்கான சிறந்த முடிவாக இருக்கும்.

தகாத வார்த்தைகள்

சண்டையிடும் போது எக்காரணத்தை கொண்டும் தகாத வார்த்தைகளை உபயோகம் செய்வது கூடாது. இவ்வாறு தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது உங்களது மரியாதையை தான் குறைக்கும். எவ்வளவு பெரிய கோபமாக இருந்தாலும், தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

திசைமாற்றம் கூடாது

சண்டை எதை பற்றியதோ அதை பற்றிய விவாதங்கள் மட்டுமே இருப்பது வேண்டும். அதை விட்டுவிட்டு மற்ற எல்லா விஷயங்களை பற்றியும் விவாதிப்பது என்பது தவறான ஒன்றாகும். இது சண்டையை வேறு பாதையில் எடுத்து சென்றுவிடும்.

குடும்பத்தை இழுத்தல்

கணவன் மனைவி சண்டை எதை பற்றியதோ அதை பற்றி மட்டுமே பேசுவது முறையாகும். அதைவிட்டு குடும்பத்தை இழுத்து பேசுவது எல்லாம் கூடாது.. உங்களது குடும்பத்தை பற்றி பேசினால் உங்களுக்கு எப்படி கோபம் வருமோ, அதே போல தான் உங்களது துணைக்கும் அவரது குடும்பத்தை, அவரது நண்பர்களை பற்றி பேசினால் கோபம் வரும். என அவரது கோபத்தை சீண்டி பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

தோற்றம்

மேலும் கணவன் மனைவி சண்டையின் போது ஒருவர் மற்றொருவரின் தோற்றத்தை வைத்து இகழந்து பேச கூடாது.. உதாரணமாக நீ சொட்டையாக இருக்கிறாய்.. நீ குண்டாக இருக்கிறாய் என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button