மருத்துவ குறிப்பு

காது அடைப்பை எப்படிப் போக்குவது?

அடிக்கடி என் காது அடைத்துக் கொள்கிறது. இரைச்சலாக இருப்பதால் சரியாக கேட்க முடிவதில்லை. இந்த அடைப்பை எப்படிப் போக்குவது?

ஐயம் தீர்க்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் நீரஜ் ஜோஷி.”காதில் வெளிப்புற காது, நடுக் காது, உள்காது என மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன. வெளிக்காதின் ஜவ்வுக்கு பிறகு நடுக்காது ஆரம்பமாகிறது. நடுக்காதிலிருந்து ஆரம்பிக்கும் செவிக்கால்வாய் (Ear panel) மூக்கின் பின்புறம் தொண்டையில் முடிகிறது. வெளிப்புறக் காதின் வழியாக செல்லும் ஒலி அலைகள் செவிக்கால்வாய் (Ear panel) வழியாக காது ஜவ்வில் ஊடுருவிச் சென்று செவிப்பறையின் வெளி அறையை அடைகின்றன. இங்கு அதிர்வலைகள் ஆடியோவாக மாற்றப்பட்டு நாம் கேட்கிறோம்.

இந்த காது ஜவ்வில் நீர் கோர்த்துக் கொள்வதாலும் சளி சேர்வதாலும் காது அடைத்துக் கொள்ளும். சளி இருக்கும் போது சிலர் பலமாக தும்முவார்கள். இதனாலும் காது ஜவ்வு அடைத்துக் கொள்ளும். மேலும் செவிக்கால்வாயில் உண்டாகும் சதை வளர்ச்சி, பாக்டீரியா தொற்றுகள், சைனஸ் பிரச்னை, வீக்கமடைதல் போன்றவற்றாலும் காது அடைப்பு ஏற்படுகிறது. இதனால் காதில் இரைச்சல் உண்டாகும்.

காதில் சேரும் மெழுகினாலும் காது அடைப்பு ஏற்படுகிறது. வெளிக்காதிலிருந்து உள் காதிற்கு ஒரு குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் சிறிய மயிர்க்கால்களுடன் சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள்தான் மெழுகை உற்பத்தி செய்கின்றன. இந்த மெழுகே நம் காதினுள் தண்ணீர், தூசி, கிருமிகள், பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் செல்வதைத் தடுக்கின்றன. சில நேரம் அதிகமாக சுரக்கும் இந்த மெழுகு காதிற்குள் செல்லும் குழாயில் அடைத்துக் கொண்டு ஒலி அலைகள் செல்வதைத் தடுக்கும். இதனால் பாதி காதுதான் கேட்கும். இதைத்தான் நாம் அழுக்கு என்று நினைத்துக் கொண்டு ஹேர்பின், சேஃப்டி பின் போன்றவற்றால் குத்தி அது உள்காதில் அடைத்துக் கொள்கிறது.

காதினுள் அசுத்த நீர் புகாமல் காதை எப்போதும் சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருக்க வேண்டும். ஈரப்பதமான இடத்துக்குச் செல்வதானால் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாம். காதை கூர்மையான பொருட்கள், விரல், காகிதம் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. 6 மாதங்களுக்கு ஒருமுறை காதினுள் அதிக மெழுகு சேர்வதை சோதித்துக் கொள்ள வேண்டும். இதுபோல் அடிக்கடி காது அடைத்துக் கொள்ள நேரிட்டால் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது எளிதில் குணமடைந்துவிடலாம்.

காதில் ஏற்படப்போகும் தொற்றுநோயின் அறிகுறியே காது அடைப்பு. காதடைப்பை கவனிக்காமல் விட்டுவிட்டால் காதில் புகும் நீர் மற்றும் சளியால் சீழ் பிடித்து மூளைத் திசுக்களில் தொற்று ஏற்பட்டு மூளைக்காய்ச்சல் உண்டாகும். நீர்கட்டிகள் உருவாகி நிரந்தரமாக கேட்கும் திறனை இழப்பதற்கும் வாய்ப்புண்டு.”
ht4295

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button