சரும பராமரிப்பு

தலைமுதல் கால் வரை… ‘தகதக’ வென மின்ன வேண்டுமா..?

தை மாதம், கல்யாண சீஸன் கலகலக்கும் மாதம். `பார்லருக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு?’ என்று பெருமூச்சுவிடும் மணப்பெண்களுக்கும், கல்யாணத்தில் வளையவரும் தோழிகள், உறவுப் பெண்களுக்கும்… வீட்டில், அலுவலகத்தில் அழகு மிளிர வலம்வர விரும்பும் பெண்களுக்கும் வீட்டிலேயே தலை முதல் பாதம் வரை பொலிவாக்கிக்கொள்ளும் வகையிலான பியூட்டி டிப்ஸ் வழங்குகிறார், சென்னையில் உள்ள ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அசோக்.

p18a
கை கருமை நீங்க!

பொதுவாகப் பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால்களுக்குக் கொடுப்பது இல்லை. முகம் மட்டும் பளிச்சென இருந்து கைகள் கருமை படர்ந்திருந்தால், வித்தியாசமாக தெரியும். எனவே, அதை நீக்க, 2 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்து, கைகளில் தினமும் மசாஜ் செய்து வரவும். கைகள் இன்ஸ்டன்ட் பிரைட் ஆவதைக் கண்கூடாகக் காணலாம்.

கண்கள் பளிச்சிட..!

ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்களில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கண்களைக் கழுவினால்… புத்துணர்ச்சியும், குளிர்ச்சியும் கிடைத்துக் கண்கள் கோலிக்குண்டுகளாய் பளபளக்கும்.

அனைத்து சரும வகைக்குமான ஃபேஸ் பேக்!

எல்லா ஸ்கின் டைப்களுக்கும் செட் ஆகக்கூடிய ஒரு ஃபேஸ் பேக் இது. விதையுள்ள பன்னீர் திராட்சை அரை கிலோவை மிக்ஸியில் அரைத்து காற்றுப்புகாத ஏர் டைட் டப்பாவில் எடுத்து மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும். மூன்று நாட்கள் கழித்துத் திறந்து பார்த்தால், அதன் மேற்பரப்பில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் உருவாகி இருக்கும். அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆவாரம் பூ பவுடர், 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் அரிசி மாவு கலந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபேஸ் பேக் ஆக அப்ளை செய்து, அரை மணி நேரத்தில் முகத்தைக் கழுவவும். கரும்புள்ளிகள் நீங்கி முகம் மலர்ச்சி அடையும்.

கேசம் பளபளக்க!

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் தலா 20 மில்லி சேர்த்துக் கலந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்து வர, கேசம் பட்டுப்போல மிருதுவாவதுடன் முடி உதிர்வும் நின்று, கேசம் வலுப்பெறும்.

வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி ‘ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்’ உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி.

இளநரை உள்ள பெண்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை, பீட்ருட் சாற்றுடன் ஹென்னா (இரண்டும் கூந்தலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்), 10 கிராம் சர்க்கரை, 2 டீஸ்பூன் கிராம்புத் தைலம் கலந்து தலைக்குப் பேக் போட்டு அலச, முடி இயற்கைக் கருமை பெற்று பளபளக்கும்.

பாதங்கள் பட்டுப்போல ஆக!

தினமும் குளிக்கும்போது ஸ்க்ரப்பரால் பாதவெடிப்புகளை மெதுவாகத் தேய்த்துக் குளித்தாலே, வெடிப்பு அதிகரிக்காமல் தடுக்கலாம். கூடவே மிருதுத்தன்மை பெற, மிதமான வெந்நீரில் 1 டீஸ்பூன் எப்ஸம் சால்ட், 10 மில்லி லிக்விட் சோப், 10 மில்லி எலுமிச்சைச் சாறு, 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் கலந்து ஒரு மணி நேரம் அதில் காலை ஊறவைத்துக் கழுவவும். இரவு உறங்கச் செல்லும் முன் பாதங்களில் க்யூட்டிகிள் க்ரீம் அப்ளைசெய்து சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கினால், பாதம் பூப்போல மென்மையாகும்.

பிறகென்ன… காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கலாம் அழகால்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button