மருத்துவ குறிப்பு

வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்கார செடிகள்

என்னதான் மணிக்கணக்கில் செல்போனுடனும், டிவிக்கள் முன்னரும் நாம் அடிமைப்பட்டு கிடந்தாலும் அவை தர முடியாத மன அமைதியை தரவல்லது இயற்கை என்பதை மறுப்பதற்கு இல்லை. குழம்பிய நமது மனநிலையை கூட மாற்ற வல்லவை இயற்கையும் அதன் படைப்புகளும். திறந்த வெளி பூங்காங்களில் நடை பயிலுவது உடலுக்கும், உள்ளதுக்கும் நலம் என்பது அனுபவரீதியாக உணர முடியும். ஆனால் இன்று நாம் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் எங்கே பூங்காக்களுக்கு செல்வது, எங்கே இயற்கையை ரசிப்பது என்கிறீர்களா? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பது போல நேரம் இருந்தால் தானே இவற்றை எல்லாம் அனுபவிப்பதற்கு என கேலியாக சிரிப்பது தெரிகிறது.

நேரம் இல்லை தான், வாரத்தின் 6 நாட்களும் காலையில் அலுவலகம் சென்று இரவு அலுத்து சோர்ந்து வீட்டுக்கு வரும் ஆடவரும், மகளிருக்கும் வரப்பிரசாதமே வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்று க்கிழமை தான் என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த ஒரு நாளில் வீட்டு வேலை வெளிவேலை அயர்னிங், நண்பர்களை சந்திப்பது என்று ஷெட்யூல் வேறு என்னடா வாழ்க்கை இது என்று சிந்திக்கும் அளவுக்கு பெரும்பாலோருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் போதாது என்பது உண்மைதான். இவற்றை எல்லாம் தவிர்த்து நம்மையும் மறந்து இயற்கையை ரசிக்கும்போது நமக்குள் இருக்கும் பல பிரச்னைகள் காணாமல் போய்விடும். மன அமைதியும் கிடைக்கும்.

பூங்காக்களுக்கு செல்ல முடியவில்லையே என வருத்தப்படும் அனைவருக்கும் கண்டிப்பாக வீடு இருக்கும். அதுவும் நிற்பதற்கு கூட நேரமின்றி வேலை செய்வோரில் 100க்கு 60 சதவீதம் பேர் கண்டிப்பாக சொந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். இன்னும் சிலர் அபார்மென்ட்டுகளில் குடியிருப்பவர்களாக உள்ளனர். வெளியே சென்று தான் இயற்கையை ரசிக்க வேண்டும் என்பது இல்லை.

நமது வீட்டிலேயே இயற்கை பூங்காக்களை உருவாக்கி விட்டால் நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றை ரசிக்கலாமே….பச்சை பசேல் என மனதை கவரும் செடிகொடிகளை தோட்டத்தில் நட்டு பராமரிக்க முடியாது என்கிறீர்களா தேவையில்லை. தோட்டம் வேண்டாம். வீட்டிற்குள்ளேயே தொட்டிகளில் செடிகொடிகளை வளருங்கள். உங்கள் மனதுக்கு அமைதியை மட்டுமல்ல பச்சை பசேல் என காட்சியளிக்கும் அவை உங்கள் வீட்டுக்கும் அழகு சேர்க்கும். ஒவ்வொரு செடியையும் வளர்ப்பதால் ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கின்றன.
அவை என்ன என்பதை பார்க்கலாம்.

துளசி:

பழங்காலத்தில் வீட்டு முற்றத்தில் தொட்டி அமைத்து தினந்தோறும் பூஜை செய்து துளசி செடியை பராமரித்தார்கள். தற்போது நம்மால் அது இயலாது என்பதால் ஒரு தொட்டியில் துளசி செடியை நட்டு உங்கள் வீட்டு பால்கனியில் வைத்து வளர்க்கலாம். துளசி இருப்பதால் ஒரு தெய்வீக தன்மை உருவாவதோடு, சளி தொல்லைக்கு இரண்டு துளசி இலையை பறித்து ஓரிரு தினங்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்.

ஸ்பைடர் பிளான்ட்:

வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளான்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.

பீஸ் லில்லி:

வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்படுபவர்களின் சாய்ஸ் இதுதான். பீஸ் லில்லியை வீட்டில் வளர்த்தால் வீடு அழகாகக் காட்சியளிப்பதோடு சுத்தமாக இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

மார்ஜினட்டா:

மிகவும் அழகான அலங்காரச் செடிகளில் மார்ஜினட்டாவும் ஒன்று. நீளமான புற்கள் போல வளரும் இந்தச் செடிகள் வீட்டுக்குள் இருந்தால் தூசி எளிதில் அண்டாது.

ஸ்னேக் பிளாண்ட்:

உள் அலங்காரத்திற்கு ஏற்ற செடிகளில் ஸ்னேக் பிளாண்ட் முக்கியமானது. இந்தச் செடியை வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் வைக்கலாம். இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால் அழகு கூடும்.

கற்றாழை:

பெரும்பாலான வீடுகளில், வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒன்று. நிறைய பேர் இந்த செடியை ஒரு குழந்தை போன்றும், தெய்வம் போன்றும் நினைத்து பாதுகாப்புடன் வளர்கின்றனர். ஆனால் உண் மையில் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டினுள் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

கமுகு மரம்:

தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காட்சிதருபவை இந்த செடிகளின் இலைகள். பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால், குளிர்ச்சியான காற்று வீசுவது போன்ற உணர்வு ஏற்படும்.

ஐவி:

மணி பிளான்ட் போல இதுவும் ஒருவகையான படர்கொடி. வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்காரச் செடிகளில் மிகவும் பிரபலமானது. செடி சுவரில் படர்ந்து வளர்வது பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

ஃபேர்ன்ஸ்:

கோழி இறகுகள் போலக் காணப்படும் இந்தச் செடியின் இலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் வைத்து இந்தச் செடிகளைப் பராமரிக்கலாம்.

சைனீஸ் எவர்க்ரீன்:

இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந்தது. இதனால் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வளர்க்கின்றனர். வீட்டை அலங்கரிக்க மட்டுமின்றி பல்வேறு பயன்களையும் தரவல்ல இந்தச் செடிகளை வீட்டிற்குள் வளர்த்தால் நமது உள்ளம் மட்டுமின்றி வீடும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எப்படி வளர்ப்பது?

இந்த அலங்கார செடிகள் நர்சரி பண்ணைகளில் விதவிதமாக கிடைக்கின்றன. அந்தந்த தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப வளரும் செடி வகைகளை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவை செழிப்புடன் வளரும். அத்துடன் அந்த செடிகள் வளர்ப்புக்கு உகந்ததாக மண் ரகம் இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். அவையும் செடியின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் என்பதால் செடிகள் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக செடிகளை மண்ணின் தன்மையை கண்டறிந்து அதற்கு ஏற்ப வளர்த்து வந்தால் அழகிய நந்தவனமாக மாறும்.

செடிகளை வளர்க்கும்போது காலை, மாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். மழைக்காலங்களில் தொட்டியில் இருக்கும் மண்ணின் ஈரப்பதத்தை கவனித்து அதற்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும். செடிகள் நன்றாக வளர்கிறது என்பதற்காக அவைகளை அப்படியே விட்டுவிடக்கூடாது. அவ்வப்போது செடிகளின் கிளைகளை வெட்டி வர வேண்டும். அதிலும் செடிகள் நேராக வளர்வதற்கு ஏதுவாக ஆரம்பத்திலேயே கிளைகளை கத்தரித்து வர வேண்டும். இலைகள் அதிகம் கொண்ட தாவர செடிகளின் பக்கவாட்டு பகுதிகளை சீராக கத்தரிக்கோலால் கத்தரித்து வர வேண்டும். அப்படி செடிகளை ஒழுங்குபடுத்தினால் தான் பார்ப்பதற்கு அழகாக தெரியும். உங்கள் மனது மட்டுமன்று உங்கள் வீடும் அழகுடன் ஜொலிக்கும்.t3Mg6LW

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button