மருத்துவ குறிப்பு

மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி?

பார்மசி… பார்மசி…

சாப்பாட்டுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரையை மறந்துவிட்டால், சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரைகளின் பக்கவிளைவுகளைத் தவிர்ப்பது எப்படி? தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? வைட்டமின் மாத்திரைகளை நாமே எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரைகள் பற்றி இதுபோன்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் எழுவதுண்டு. நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரான பரத் இந்தக் குழப்பங்களுக்கு விளக்கமளிக்கிறார்.

சத்துக்குறைபாடு காரணமாகவோ, எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகவோ உடலில் நோய் ஏற்படுகிறது. அந்த வேளையில் சில வேதிப்பொருட்களின் உதவியுடன் உடல்நிலையை சமன்படுத்துகிறோம். அதற்குப் பெயர்தான் மாத்திரை. வட்டம் அல்லது நீள்வட்டம், கேப்ஸ்யூல் என வடிவத்தைப் பொறுத்தவரை மாத்திரைகள் இருவிதமாக இருக்கின்றன. இதில் இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால் நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் (Water soluble), கொழுப்பில் கரையக் கூடிய மாத்திரைகள் (Fat soluble) என்று இருவிதங்கள் உண்டு.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி மாத்தி ரைகளை நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் என்றும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே மாத்திரைகளை கொழுப்பில் கரையக்கூடிய மாத்திரைகள் என்றும் பிரிக்கலாம். நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் பக்கவிளைவுகள் அற்றவை. ஏனெனில், உடலிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறி விடும். ஆனால், கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் மாத்திரைகள் உடலில் இருக்கும் கொழுப்புப் பகுதியில் சென்று அப்படியே தங்கி விடும். அதனால்தான் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

‘மருத்துவர்கள் நிறைய மாத்திரை எழுதிக் கொடுக்கிறார்கள். ஒருவேளை, இரண்டு வேளை சாப்பிட்டால் போதாதா’ என்று பலரும் நினைக்கிறார்கள். அதேபோல, நோயின் அறிகுறிகள் மறைந்த உடனே மாத்திரையையும் பலர் நிறுத்தி விடுகிறார்கள். இந்த இரண்டும் தவறானதே. ஒரு வாரத்துக்கான மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்தில் அந்தக் கால அளவு முழுவதும் எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் நோய்க்கிருமிகள் முழுமையாக நீங்கும். பாதியில் மாத்திரைகளை நிறுத்தும்போது பாதி நோய்க்கிருமிகளும் தப்பித்துவிடும். இதனால் நாம் ஏற்கெனவே உட்கொண்ட மருந்துகளின் சக்தியைத் தாண்டி புது எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடும்.

ஒருவேளைக் கான மாத்திரை தவறினால் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அடுத்த வேளைக்கு சேர்த்து எடுத்துக் கொள்வதால் பலன் இல்லை… பக்கவிளைவுதான் உண்டு. கால்சியம் மாத்திரையை ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றைச் சேர்த்து எடுத்தாலும் அந்த இன்னொன்று கழிவுப்பொருள்தான். அதேபோல், சர்க்கரை நோயாளிகள் சிலர் காலையில் தவற விட்ட மாத்திரையை இரவில் சேர்த்து எடுப்பார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் அபாயம் ஏற்படலாம். ஆன்டிபயாடிக் வகை மாத்திரைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் எடுத்தால் போதும். ஹார்மோன் குறைபாடுகளுக்கான மாத்திரைகளை மட்டும் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கும்.

சில மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். காரணம், மாத்திரை உணவுக்குழாயில் தங்கிவிடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். உணவுக்குழாயில் மாத்திரை தேங்கிவிட்டால் புண் உண்டாகிவிடலாம். சில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள்.

அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்தான். நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும். கால்சியம், இரும்புச்சத்து மாத்திரைகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரைந்தால்தான் பலன் தரும்.

அந்த வகை மாத்திரைகளை ஹைட்ரோகுளோரிக் அமிலம் வீரியமாக இருக்கும்போது, அதாவது, உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால்தான் பலன் கிடைக்கும். சில மாத்திரைகளின் வீரியத்தை ஹைட்ரோகுளோரிக் அமிலம் தடுத்துவிடும். அந்த வகை மாத்திரைகளை உணவுக்குப் பின் அதாவது, அமிலத்தன்மை குறைந்திருக்கும் போதுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி பற்றாக்குறைக்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பலரும் எடுக்கிறார்கள். வாரம் ஒருமுறை எடுக்க வேண்டிய மாத்திரையை தினமும் உட்கொள்கிறவர்களும் உண்டு. இதனால் கால்சியம் சத்து உடலில் அதிகமாகி சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது முதல் சிறுநீரகச் செயல் இழப்பு வரை பல்வேறு பாதிப்புகள் உண்டாகக் கூடும். வைட்டமின் ஏ மாத்திரைகளால் மூளையில் நீர் கோர்த்துக் கொள்வது, வாந்தி ஏற்படுவது, கண் பார்வை மங்குவது போன்ற பக்கவிளைவுகள் உண்டாகும். வைட்டமின் ஈ மாத்திரைகளால் இதயம் பாதிக்கும் என்பது பற்றிய ஆய்வுகளும் இருக்கிறது.

தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிடுகிறவர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரைச் சந்திப்பதே நல்லது. இதே மாத்திரைதானே மருத்துவர் எழுதிக் கொடுப்பார் என்று நாமே வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் கண்காணிப்பு இருக்கும்பட்சத்தில் அந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் வருகிறதா என்று ஆராய்ந்துதான் மீண்டும் அதே மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். ரத்த அணுக்களின் எண்ணிக்கை, கல்லீரலின் செயல்பாடு, சிறுநீரகத்தின் ஆரோக்கியம் போன்றவற்றையும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவு முறையைப் பின்பற்றுவதும் அவசியம்.

சூரிய ஒளியும் காற்றும் பட்டுவிட்டால் சில மாத்திரைகளின் வீரியம் போய்விடும். எனவே, இந்த மாத்திரைகளை கவனமாகக் கையாள வேண்டும். சில்லறையாக அவ்வப்போது வாங்காமல் மொத்தமாக வாங்குவதே பலன் தரும். உதாரணம், தைராய்டு மாத்திரைகள். மாத்திரைகளை முறையாகப் பயன்படுத்தினாலே எந்த பக்கவிளைவுகளும் வராது. தலைவலியாக இருந்தாலும் என்ன காரணத்தால் தலைவலி வந்தது என்று மருத்துவரைச் சந்தித்து தெளிவு பெறுவதே சரியானது. மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த மாத்திரையையும் நாம் பயன்படுத்தக் கூடாது. நமக்கு நாமே மருத்துவம் பார்க்கிற அளவுக்கு நாம் மருத்துவர் இல்லை என்பதையும் உணர வேண்டும்!ht44248

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button