மருத்துவ குறிப்பு

மாதுளையின் அரிய சக்தி

மாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ்
மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில், மாதுளை சிறந்த பலனை தருகிறது.

மூன்று ரக பழங்கள்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு பழத்தை சாப்பிட்டால், இருதயத்துக்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது; பித்தத்தை போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையை பயன்படுத்தினால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது.
ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சக்தி உண்டு. மாதுளை, மலச்சிக்கலை போக்கும். வறட்டு இருமல் உள்ளவர்களுக்கு, சிறந்த மருந்தாகும்.

வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தாலும், அதை ஆற்றும் குணம் இதற்கு உண்டு. மலத்தில், ரத்தம் வருதல், சீதபேதி போன்றவைகளுக்கு மாதுளம் பிஞ்சு, ஒரு நல்ல மருந்து. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும். ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும். சளி தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் இது சிறந்தது.

நினைவாற்றலை அதிகரிக்கும்
பழத்தில் வைட்டமின் “சி’ என்ற உயிர்ச்சத்து உள்ளது; இது, ரத்த உற்பத்திக்கும். ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உகந்தது. நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாக சேர்த்து, வேளைக்கு 30 மில்லி வீதம், தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்கு கொடுத்தால், பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள், 15 கிராம் எடுத்து, 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

இருமல் நிற்கும்
இலைச்சாறு, வயிற்றுப்போக்கை தீர்க்கும். தண்டு மற்றும் வேர்பட்டை, வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது. தசை இறுக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்படும்போது, மாதுளையின் மலர் மொட்டுக்களை உலர்த்தி பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும். கனியின் சாறு குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து செய்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

விதை மற்றும் கனியின் உட்சதை, வயிற்று வலியை போக்கும். மாதுளம் பூச்சாற்றை, 15 மில்லியளவு சேகரித்து, சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்துக்கு கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களை தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
11128825 904748426214140 3164085914639264031 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button