குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 1,000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011-ம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில் உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து உள்ளது. மாநில அளவில் கேரளாவில் (950) தான் அதிக அளவு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது.
இப்போது நகரம், கிராமங்களில் பெண் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது நூறு மணமகன்களுக்கு அதில் பாதி அளவே பெண்கள் இருக்கின்றனர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதால் இந்த நிலை உள்ளது.
பெண் குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பு மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்பட்டன இவை இப்போது பெருமளவு குறைந்துவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கேயாவது இது போல சம்பவங்கள் நடைபெறுகின்றன.
வடமாநிலங்களில் இது போல மூடத்தனமான காரியங்கள் சில இடங்களில் நடைபெறுகின்றன. இது போல செயல்களை முற்றிலும் நிறுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இது போல விஷயங்களை பயன்படுத்தி அதிகம் முளைத்துவிட்ட மேட்ரிமோனியல் நிலையங்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையை பயன்படுத்தி உங்கள் மகனுக்கு நாங்கள் பெண் பார்க்கிறோம் என கல்லா கட்டி வருகின்றன.