ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த பொருள் கடைகளில் வாங்கினா ஆபத்து!! வீட்டில் தயாரிச்சா ஆயுள் கெட்டி!! எது தெரியுமா?

இது, நெய் இல்லாமல் உணவே இல்லை, நெய்யில்லாமல் நானில்லை எனும் நிலையில் அன்றாட வாழ்வில் நெய்யைப் பிரியாமல் வாழும் நெய்ப்பிரியர்கள் பலருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தாலும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற வாய்ப்பாகுமே, என்றே இந்தப் பதிவு!

நெய்யென்றால் உதிரியாக இருக்கணும், திரி திரியாக வரணும், மணலாகக் கொட்டணும், மூடியைத் திறந்தவுடன் வாசனை உங்களை மெய்மறக்க செய்யும், இது போன்ற எண்ணற்ற விளம்பரங்களை நாம் தினமும் கண்டு வந்திருப்போம், ஆயினும் அந்த நெய் எல்லாம் உண்மையிலேயே நல்ல நெய்யா, இல்லை அதன் தனி நறுமணத்திற்காகவும், தோற்றத்திற்காகவும், சுவைக்காகவும், அதில் ஏதேனும் பொருட்களைச் சேர்க்கிறார்களா, என்ற விவரங்களை நாம் அறிவதில்லை.

சில நெய்களில், வனஸ்பதி எனும் தாவர கொழுப்பு சேர்க்கப்படுகிறது என்பதை நாம் அறிவோமா? முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதெல்லாம் அநேகம் கடைகளில் நெய் கிடைக்காது, வீடுகளில் தயிரைக் கடைந்து, வெண்ணை எடுத்து, அதை உருக்கி காய்ச்சி நெய்யாக்கியே, அனைவரும் உபயோகப்படுத்தி வந்தனர்.

அக்காலங்களில் வெண்ணையின் விலை அதிகம் என்பதால், எல்லோரும் வாங்கவும் மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் நெய் கலந்த இனிப்பு வகைகள் செய்யவும் நெய்யை விட விலை குறைந்த டால்டா எனும் வனஸ்பதியை உபயோகித்தனர். டால்டா என்பது தாவரங்களில் எடுக்கப்படும் கொழுப்பில் இருந்து, நெய்க்கு மாற்றாக வந்த ஒரு பொருளாகும்.

இதயக் கோளாறு, தீவிர நோய்கள்!! அக்காலங்களில் தாவர நெய் என்று கருதப்பட்ட டால்டாவில் அதிகம் மிருகக்கொழுப்பும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் தடை விதிக்கப்பட்டது, அதன்பின், மக்கள் விழிப்புணர்வால் பயன்பாட்டில் இருந்து நீங்கிய டால்டாதான் தற்போது மீண்டும், வெஜிடபிள் நெய் எனும் பெயரில் மார்க்கெட்டில் இருக்கிறது. இதுவே, இன்று நெய்யில் செய்யும் கலப்படத்திற்கு, அதிக காரணமாகிவிட்டது. இந்த டால்டா, உடலின் இரத்த நாளத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இதயக் கோளாறுகளுக்கு காரணமாகிறது. மேலும், உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை பருமனாக்குகிறது.

எப்படி தவிர்ப்பது கலப்பட நெய்யை? முற்காலங்கள் போல, சுத்தமான வெண்ணையை வாங்கி, வீடுகளில் உருக்கி நெய்யாக்கி பயன்படுத்த, கலப்பட அச்சமில்லாமல், நெய்யை நாம் தொடர்ந்து உபயோகிக்கலாம், இல்லை என்றால், தரமான நிறுவனங்களின் தயாரிப்பை, அக்மார்க் மற்றும் ஐ.எஸ்.ஒ சான்றிதழ் பெற்றதை உறுதி செய்து கொண்டு, வாங்கிப் பயன்படுத்தலாம். இதைப் படிக்கும், நெய்யை அதிகம் உணவில் பயன்படுத்தாத சில வாசகர்கள் அப்படி என்ன நெய்யில் இருக்கிறது, அது உடலுக்கு நன்மைகள் தருமா, என எண்ணலாம், நிறைய நன்மைகள் இருக்கின்றன, என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

நெய்யை எப்படி உணவில் சேர்ப்பது? காலை வேளைகளில் சுடச்சுடத் தயாராகும் நெய் வாசம் மணக்கும், நெய்யில் மிதக்கும் மிளகுப்பொங்கலை, சிறிது எடுத்து சுவைக்க, நாவின் சுவை நரம்புகள் யாவும் நல்ல முறையில் வேலை செய்வதை, நாம் உணர சிறந்த வாய்ப்பாக அமையும்! அதேபோல, காலை வேளைகளில் தோசை அல்லது இட்லிக்கு தொட்டுக்கொள்ள வைக்கும் மிளகாய் பருப்புப் பொடியில் நெய்யை சூடாக்கி சாப்பிட, மீண்டும் ஒரு முறை நாவின் சுவை நரம்புகளின் நல்ல செயல்திறனை, நாம் உணர முடியும்!

நெய்யில் இருக்கும் நன்மைகள்.!! தினமும் பத்து அல்லது பதினைந்து கிராம் அளவில் நெய்யை உணவில் சேர்த்து வர, மூளைக்கு நல்ல ஊட்டமாகிறது, உடல் உறுதியாகும், கண் பார்வைத் திறன் மேலோங்கும், உடலில் சேர்ந்த நச்சுக்கள் வெளியேறிவிடும்.

தவிர்க்க வேண்டியவர்கள்!! மிகக்குறைந்த அளவே கொழுப்பு உள்ளதால், அனைவரும் நெய்யை சீரான அளவில் தாராளமாக உபயோகிக்கலாம், பால் பொருட்களில் ஒவ்வாமை உள்ளவர்கள் கூட நெய்யை சாப்பிடலாம், நலம் தரும், ஆயினும் இதய பாதிப்புகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.

குடல் புண்ணை சீராக்கும் : உடலின் அமிலத்தன்மையை சீராக்கி, குடல் புண்களை போக்கி, வயிறு மற்றும் குடலை உறுதியாக்கும். ஞாபக சக்தியை அதிகரித்து, சருமத்தை பொலிவாக்கி, கண் பார்வைகளை சீராக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி : உடலின் வியாதி எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, புற்று வியாதி மற்றும் வைரஸ் பாதிப்புகளை விலக்குகிறது.

உடல் வலுப்படும் : மதிய உணவில் முதலில் சாப்பிடும் சூடான பருப்பு சாதத்தில் சூடாக்கிய நெய்யூற்றி சாப்பிட, நல்ல சுவையுடன், மணமாக இருக்கும், இதுவே, வயிற்றின் பசி உணர்வைத் தூண்டும். தினமும் நெய்யை சிறிதளவு உணவில் சேர்த்துவர, உடல் சூட்டை தணித்து, உடல் வலுப்படும்.

மலச்சிக்கல் தீர : நெய்யில் வெல்லச்சர்க்கரையை சேர்த்து, சிறிது உண்ண, உடல் சூட்டினால் உண்டாகும் வயிற்று வலி தீரும். மலச்சிக்கலைப் போக்கும். சித்த மருந்துகள் யாவும் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க அதில் நெய்யை சேர்த்தே வந்தனர். சித்த மருந்து பொடிகளை நெய்யுடன் கலந்து உண்ண, நன்மைகள் கிட்டும்.

உடல் எடை கூடாது : நெய்யில் உள்ள கொழுப்புகள் கரையும் தன்மைமிக்கது, இதனால் நெய்யை உண்பதால் உடல் எடை மிகாது. நெய் நீண்டகாலம் கெடாமல் இருக்கும், எனவே, அதை குளிர்ப்பெட்டியில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. சமையலறையில் இருக்கலாம்.

சுத்தமான நெய்யை எப்படி செய்வது? சுத்தமான நெய்யை வீடுகளில் உருவாக்க முடியும், தேவை சிறிது பொறுமை மட்டுமே! ஒரு லிட்டர் பசும்பாலை நன்கு காய்ச்சி, அது ஆறிய பின், இரவில் சிறிது தயிரை சேர்த்து வைத்துவிட வேண்டும். காலையில் முழுமையாக தயிராக மாறியிருக்கும். அதன் மேற்பரப்பில் பாலாடைகளுடன் காணப்படுவதை சேகரித்து, வைத்து மர மத்தில் நீரூற்றி கடைந்துவர, வெண்ணை திரண்டு வரும். பாலாடைகள் இல்லாவிடில், அந்தத் தயிரில் சிறிது நீர் சேர்த்து, மத்தை வைத்து கடைந்து வர, சற்று நேரத்தில் வெண்ணை மேலே ஒதுங்கும், அதை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

நெய் தயாரிக்கும் முறை : இதனை நன்கு தண்ணீர் போக பிரித்து வைத்துக் கொண்டு ஒரு வாணலியில் இட, நல்ல நறுமணத்துடன் வெண்ணை உருகும். கூடுதல் நறுமணத்துக்கு சிறிது முருங்கைக் கொழுந்தை அதில் போட்டு சூடாக்க, நெய் கமகம மணத்துடன் நன்றாக பொங்கி வரும். அந்த நெய்யை சற்றுநேரம் ஆற வைத்து, பாத்திரத்தில் சேகரித்து வைக்க, நல்ல சுவையான, சத்தான வீட்டு நெய் தயார்.

முருங்கை இலையின் ருசி : முருங்கைக்கொழுந்தை என்ன செய்வது என்று கேட்கிறீர்களா, எழுத மறந்து விட்டோம், நெய்யிலிட்ட அந்த முருங்கைக்கொழுந்தை எடுத்து வாயில் இட, வெண்ணையைப்போல தொண்டையில் கரையும். உடல் செரிமான சக்தியைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த வியாதி எதிர்ப்பு மிக்க உணவாக அமையும், அற்புத சுவைமிக்க இந்த நெய்முருங்கைக்கொழுந்து! நெய்யில் உடலுக்கு வலு சேர்க்கும் நன்மைகள் அதிகம் இருந்தாலும், அதனை கவனமாகப் பார்த்து, தரத்தை உறுதி செய்து, வாங்குவதால் மட்டுமே, நற்பலன்களை அடையமுடியும்!coverimage 03 1509693892

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button