கிறீன் டீ பேஸ் மாஸ்க்…
கிறீன் டீ என்றாலெ கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைப்பதுடன் பல மருத்துவ நன்மைகளைச் செய்யும் பானம் என்ற கருத்தே நம்மில் உலாவி வருகிறது. ஆனால் இதனை சரும அழகை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் இதனை ஸ்கிறப், கிளன்சர், மாஸ்க் என பல்வேறு முறையில் சரும அழகிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் உள்ள அதிகளவான அண்டிஒக்ஸிடன் வயதடைவதைத் பிற்போடுவதுடன், சருமத்தை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன் சூரியக் கதிர்கலின்பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது. அதுமட்டுமல்லாது கொலாஜன் உருவாக்கத்தை சீராக வைத்திருப்பதன் மூலம் சருமத்தை இறுக்கமாக பேணுகிறது.
இதன் சிறப்புக்களால் பல அழகுக்கலை நிலையங்களிலும் கிறீன் டீயை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி வருகின்றனர். அதே போன்று நீங்களும் உங்கள் வீட்டில் கிறீன் டீயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது பார்ப்போம்.
முதல் நிலை
சுத்தப்படுத்தியாக:
முதலில் சருமத்தை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமானது. சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகளவான எண்ணெய்த் தன்மை, தேவையற்ற கறைகளை நீக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
கிறீன் டியை தயாரித்து சிறிது நேரம் குளிரூட்டியில் வைக்கவும். அதில் றோஸ் வாட்டரைச் சேர்த்து, அந்தக் கலவையை முகத்தில் தடவி சில நிமிடங்களிற்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பின்பு நீரினால் கழுவினால் சுத்தமான சருமத்தைப் பெற முடியும்.
இரண்டாம் நிலை.
ஸ்கிறப்பிங்.
சருமத்தை சுத்தப்படுத்திய பின்பு ஸ்கிறப் செய்வதன் மூலம் அதில் உள்ள இறந்த கலங்களை நீக்கி சருமத்தை மேலும் மெருகூட்ட வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி சீனி, 2 மேசைக்கரண்டி வடித்த கிறீன் டீ, 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி குறைந்தது 6 நிமிடங்களாவது வட்டவடிவில் மசாஜ் செய்வதன் மூலம் இறந்த கலங்களை நீக்க முடியும். 5 நிமிடங்களின் பின்னர் முகத்தினை நீரினால் கழுவினால் சருமம் பளபளக்கச் செய்யும்.
மூன்றாம் நிலை.
பேஸ் மாஸ்க்
இறுதியில் பேஸ் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தை ஈரலிப்பாக பேணுவதுடன் சிறந்த தோற்றத்தை இலகுவாகப் பெற முடியும்.
கிறீன் டீயை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சில பேஸ் மாஸ்க்.
1. கிறீன் டீ தேன் பேஸ் மாஸ்க்.
பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் 2-3 மேசைக்கரண்டி கிறீன் டீ திரவத்தை எடுத்து அதில் 1 மேசைக்கரண்டி தேனைச் சேர்த்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்கள் அதனை உலரவிட்டு நீரினால் கழுவவும். தேனைப் பயன்படுத்துவதனால் சருமம் ஈரலிப்பாக இருப்பதுடன் பளபளப்பையும் பெற முடியும்.
2. கிறீன் டீயும் ஓட்ஸும்.
தேவையானவை:
• கிறீன் டீ
• தேன்
• ஓட்ஸ்.
•
பயன்படுத்தும் முறை:
மேற்குறிப்பிட்ட சேர்மானங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவினால் மிருதுவான சருமத்தைப் பெற முடியும். காலையில் சருமத்திற்கு மேக்கப் போடுவதற்கு முதல் சருமப் பராமரிப்பைச் செய்வது மிகவும் அவசியமானது.
3. கிறீன் டீயும் தயிரும்.
பயன்படுத்தும் முறை:
கிறீன் டீ பையை சுடு நீரில் ஊற வைத்து அதனை ஆற வைக்க வேண்டும். பின்பு பையை வெட்டி கிறீன் டீ இலைகளை எடுத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். அதிகளவில் தேய்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும். 10 நிமிடங்களின் பின்பு தயிரை மௌகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். மீண்டும் 10 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
இதனை வாரத்திற்கு ஒரு தடவை அல்லது மாதத்தில் இரு தடவைகள் இதனை செய்வது அவசியமானது.