பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?
மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்ததும் கண்கள் செருகுவதும், வேலை செய்து கொண்டிருக்கும்போது அல்லது மீட்டிங் நடக்கும்போது கண்ணயர்வதும் பலருக்கு வாடிக்கை. சிரமப்பட்டு தூக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றால், தொடர்ச்சியாகக் கொட்டாவி வரும். இதுவும் ஒரு வகையில் அவஸ்தையே. பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?
தினமும் காலையில் அலுவலகம் வருவதற்கு முன்னர் தியானம் செய்ய வேண்டும். இது உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்; வேலையின் மீதான கவனமின்மையைத் தடுக்க உதவும்.
தினமும் இரவு ஆறு முதல் எட்டு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதையும், காலையில் சீக்கிரமாகக் கண்விழிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், ரத்த ஓட்டம் சீராகி தூக்கப் பிரச்னைகள் தீரும்.
பகலில் அலுவலகத்தில் தூக்கம் வந்தால், எழுந்து நடக்கத் தொடங்குங்கள். மாடிப்படிகளில் ஏறி இறங்கியோ, சிறு உடற்பயிற்சிகளைச் செய்தோ தூக்கத்திலிருந்து விடுபட முயலுங்கள்.