மருத்துவ குறிப்பு

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்
இவ்வுலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. இது கீரை இனத்தைச் சார்ந்தது. இதை மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல் மருந்தாகவும் விளங்குகிறது.வெந்தய விதைகளும் இதைப் போலவே உணவாகவும் மருந்தாகவும் நமக்குப் பயன் தருகிறது. இது சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளது. வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது, மலத்தை இளக்கும் தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்கும் தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத்தையும், உஷ்ணத்தையும் போக்க கூடியது, வற்றச்செய்யும் தன்மையுடையது,வறட்சித் தன்மையை அகற்றக் கூடியது, காம உணர்வைப் பெருக்கக் கூடியது, அகட்டு வாய்வு அகற்றி, உடலுக்கு உரமாவது. வெந்தயத்தின் விதைகள் பசியின்மையை போக்க வல்லது. வயிற்று உப்பசத்தைப் போக்க வல்லது, பித்தத்தை சமண்ப்படுத்த வல்லது, வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது, வயிற்றுப் போக்கையும் போக்கும்.சீதபேதியை நிறுத்த வல்லது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் கண்ட விடத்து அந்த வீக்கத்தைத் தணிக்க வல்லது, தாய்ப் பாலைச் சுரக்கச் செய்வது, குழந்தை பெற்ற இளந்தாய்மார்களுக்கு உடல் தேற்றும் டானிக்காக அமைகிறது, ஜெர்மானிய மருத்துவ வல்லுனர்கள் வெந்தயம் உடலில் எப்பாகத்திலும் சளித்தன்மையை அதிகரிக்க வல்லது, மேலும் ரத்த ஓட்டத்தைத் தூண்டக் கூடியது, சீழ்பிடிப்பதைத் தடுக்கக் கூடியது என்று உறுதி செய்துள்ளது.

ஆங்கில மூலிகை மருத்துவ அகராதி, வெந்தயம் உள்ளழலை ஆற்ற வல்லது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்தை குறைக்க வல்லது என்றும் பரிந்துரை செய்கிறது. உலக ஆரோக்கியக் குழுமம், வெந்தயம் சர்க்கரை நோய்க்கு ஒருதுணை மருந்தாகிறது, உணவு ஏற்றுக் கொள்ளாமை, கொழுப்புச் சத்து மிகுதல் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது என்று தெரிவித்துள்ளது.

வெந்தயம் சுபாவத்தில் கசப்புத் தன்மை உடையதாக இருப்பினும் வாணலியில் இட்டு சற்று பொன் வறுவலாக அதைவறுத்து எடுத்துக் கொண்டால் அதன் கசப்புத் தன்மை குறைந்து போகிறது. வெந்தயத்தில் “ட்ரைகோ நெல்லின்”, “ட்ரை கோநெல்லிக் ஆசிட்”, “லைசின்”, “எல்-டிரிப் டோபன், அதிக அளவிலான “சேப்போனின்ஸ்”, “உணவாகும் நார்ச்சத்து” ஆகிய உடலுக்கு நலம் தரும் சத்துக்களும் அடங்கியுள்ளன.

* வெந்தயத்தில் விட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பில் வெந்தயம் ஓர் கெடாது காக்கும் பொருளாக அதனுடன் சேர்க்கப்படுகிறது.

* வெந்தயம், எலுமிச்சைசாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீர் பன்னெடுங்காலமாக காய்ச்சலைத் தணிக்கப்பயன் படுத்தப்படுகிறது.

* வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிப்பதால் தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது.

* வெந்தயத்தை அரைத்து மேல் பூச்சாகப் பூசுவதால் “எக்ஸிமா” எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ்பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் கண்டு வலித்தல் ஆகியன குணமாகின்றன.

* வெந்தயம் உள்ளுக்கு சாப்பிடுவதால் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பலப்படுகிறது. மேலும் பிரசவத்தின்போது குழந்தைப் பிறப்பதைத் துரிதப்படுத்துகிறது. வெந்தயத்தை தாராளமாகப் பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் பெண்களின் சுரப்பிகள் சரியான நிலையில் செயல்படுவதோடு மார்பகங்கள் வனப்புற விளங்கும்.

கருவுற்ற பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அது ஊறு ஏற்படுத்தலாம். வயிற்றில் புண்கள், ரத்த ஒழுக்கு போன்றவை இருப்பின் அந்த ரத்த கசிவை அது அதிகப்படுத்த கூடும் என்பதால் இவ்வித நோயாளிகளும் வெந்தயத்தை அளவோடு பயன்படுத்துதல் நலம்.

* யாரேனும் சிலருக்கு தோலில் எரிச்சல், நமைச்சல், நெஞ்சுவலி, முகவீக்கம், மூச்சு முட்டல், விழுங்குவதற்கு சிரமம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.

* சிலருக்கு பேதி, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, சிறுநீரில் நாற்றம் ஆகியன ஏற்படலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button