மருத்துவ குறிப்பு

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

உடல் ஆரோக்கியத்திற்கு சீரான இரத்த ஓட்டம் மிகவும் அவசியமானதாகும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், உடலின் அனைத்து உறுப்புகளும் தடையின்றி ஆரோக்கியமாக இயங்கும். ஏனெனில் இரத்தத்தின் மூலம் தான் உறுப்புக்களின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஒருவரது பாதங்கள் அடிக்கடி ஜில்லென்று ஆவதற்கு காரணம், இரத்த ஓட்டம் மோசமாக இருப்பது தான். மோசமான இரத்த ஓட்டம் தலைச்சுற்றல், தலைவலி, தலைமுடி உதிர்வது போன்வற்றை உண்டாக்கும்.

இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படும். அதில் மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போனால், சோர்வு, தலைச் சுற்றல், ஞாபக மறதி, அடிக்கடி தலைவலி போன்றவற்றையும், இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாமல் போனால், மூச்சு விடுவதில் சிரமம், உயர் இரத்த அழுத்த பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனை, நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும், கல்லீரலுக்கு போதுமான இரத்தம் செல்லாமல் இருந்தால், பசியின்மை, எடை குறைவு, சரும நிற மாற்றம் போன்றவற்றையும், சிறுநீரகங்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால், கைகள், கால்களில் வீக்கம், இதய துடிப்பில் மாற்றஙகள், மிகுதியான சோர்வு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.

இக்கட்டுரையில் உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதைப் பின்பற்றி உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

மோசமான இரத்த ஓட்டத்திற்கான காரணங்கள்:

இரத்த ஓட்ட அமைப்பில் பிரச்சனைகள் வருவதற்கு மருத்து நிலைகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். அவற்றில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, காப்ஃபைன் பானங்களை அதிகம் பருகுவது, மோசமான உணவுப் பழக்கம், உடலுழைப்பு இல்லாமை மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசராமல் அமர்ந்திருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மோசமான இரத்த ஓட்டத்திற்கான சில மருத்துவ காரணங்கள்:

கர்ப்பம், பதற்றம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறுகள், இரத்த நாள கோளாறுகள், நரம்பு கோளாறுகள், இரத்த சோகை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்களது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். ங

இப்போது இயற்கையாகவே உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சில வழிகள் குறித்து காண்போம்.

ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான டயட்டில் பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உணவுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும். அதிலும் நைட்ரேட் நிறைந்த காய்கறிகள் உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். சில உணவுகள் இரத்த ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்களைத் தடுக்க உதவும். மீன், பசலைக் கீரை, க்ரீன் டீ, ஓட்ஸ், பெர்ரிப் பழங்கள், பூண்டு போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

சரியான உடைகளை அணியவும்

உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சரியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது அவசியம். ஒருசில உடைகள் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். அதில் உடலை இறுக்கும்படியான உடைகள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். எனவே மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். டைட்ஸ், இறுக்கமான ஜீன்ஸ் போன்றவை மறைமுகமாக இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எப்போதும் சற்று தளர்வான உடைகளை அணியுங்கள்.

போதுமான உடற்பயிற்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான சிறப்பான ஓர் வழி தான் உடற்பயிற்சி. அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. 10 நிமிடம் வாக்கிங் பயிற்சி செய்தாலே, இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எளிய உடற்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் ரன்னிங், நீச்சல், ஜாக்கிங் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். ஸ்கிப்பிங் கூட இரத்த ஓட்டத்தைத் தூண்டும் அற்புத பயிற்சியாகும். எனவே உங்களுக்கு பிடித்ததை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.

மசாஜ்

நல்ல உடல் மசாஜ் கூட இரத்த ஓட்டத்தைத் தூண்டும். அதிலும் தோள்பட்டை பகுதிகளில் மசாஜ் கொடுக்கப்படும் போது, அதனால் உடலின் முக்கிய உறுப்புகளில் இரத்த ஓட்டம் மேம்படும். மசாஜ் செய்யும் போது, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு மசாஜ் செய்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். முக்கியமாக வாரத்திற்கு 2-3 முறை ஒருவர் உடல் மசாஜ் எடுத்துக் கொள்வதால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

ஹைட்ரோ தெரபி

தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். உடலுறுப்புக்களின் முறையான செயல்பாட்டிற்கு உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். எனவே தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் ஒரு சிறப்பான வழி சுடுநீரில் குடிப்பது. சுடுநீரில் குடிப்பதாலும், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

வரமிளகாய்

வரமிளகாய், உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். இது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கச் செய்யும். ஆகவே அன்றாட உணவில் தவறாமல் வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

மன அழுத்தம் உடலை பெரிதும் மோசமாக பாதிக்கும். அதில் ஒன்று மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுப்பது. ஒருவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இதயத்தின் செயல்பாட்டில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக மன அழுத்தம் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ஒருவரது மன அழுத்தத்தைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. அந்த வழிகளை முயற்சித்து இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு அளவை குறையுங்கள்

அளவுக்கு அதிகமான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகளவிலான உப்பு தமனிகளை தடிமனாக்கும். குறிப்பிட்ட சில உணவுகளில் சோடியம் ஏராளமான அளவில் உள்ளது. அதில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உறைய வைக்கப்பட்ட பிட்சா, கேன் சூப் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த உணவுகள் உட்கொள்வதை ஒருவர் தவிர்த்தால், மோசமான இரத்த ஓட்டத்தைத் தவிர்ப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button