மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டிலேயே பிரசவ வலியை தூண்டும் 10 வழிமுறைகள்!!!

அந்த கணத்திற்காகத் தான் கடந்த 9 மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? நாள் நெருங்க நெருங்க உங்களுடைய பொறுமை உங்களை விட்டு விலகிச் செல்கிறதா? எனினும், உங்களால் அமைதியாகவும், எளிமையாகவும் மட்டுமே இருக்க நேரிடும். ஆம், பிரசவத்தை எதிர்கொள்ளும் நேரத்தைப் பற்றியே மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன.

10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, வெளி உலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் நேரத்தை எதிர்பார்க்காத தாய்மார்கள் யார் தான் உளர் இந்த உலகிலே! இவ்வாறு குழந்தையை வெளி உலகத்திற்கு கொண்டு வரத் தேவையானது பிரசவ வலியேயன்றி, பொறுமையற்ற மனம் அல்ல. அந்த வகையில், பிரசவ வலியை வீட்டில் இருக்கும் போதே தூண்டுவதற்கு நாம் செய்யக்கூடிய சில நிவாரணங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோமா?

பிரசவத்திற்கான நாள் நெருங்கி வந்துவிட்டால், பொறுமையற்று காத்திருக்கும் தாய்மார்கள் மெதுவாக வயிற்றை அழுத்தி குழந்தையை வெளியே வர உதவி தூண்டுவார்கள். இது போன்றே, பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் பிரசவிக்கும் பொருட்டாக வலியை தூண்டும் சில வழிமுறைகள் உள்ளன.

அந்த இனிமையான நேரத்திற்காக காத்திருக்கும் வேளையில், இயற்கையான முறையில் தாய்மார்கள் பிரசவ வலியை தூண்டும் வழிமுறைகளைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம்.

அக்குபஞ்சர்

இந்த வழிமுறை சற்றே பயப்படுத்துவதாக இருந்தாலும், பிரசவ வலியைத் தூண்டும் திறனுள்ள வழிமுறையே இதுவாகும். உங்களுடைய உடலுக்குள் ஊசிகளை ஊடுருவச் செய்வது கடினமான வழிமுறையாகத் தோன்றினாலும், உண்மை அதுவல்ல! ஊசிகள் கூர்மையானவையாக இருக்கும் போது, வலி மிகவும் குறைவாகவே இருக்கும். அக்குபஞ்சர் வழியாக பிரசவ வலியைத் தூண்டும் முறை அதிகளவு வெற்றிகரமானதாக இருப்பதில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அக்குபஞ்சர் முறையில் வெற்றி பெற வேண்டுமானால், உங்களுடைய பிரசவ தேதி முடிந்திருக்க வேண்டும், அதுவும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கவும் வேண்டும். குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்குமே பாதுகாப்பான வழிமுறையாக அக்குபங்ச்சர் இருக்கும். மேலும், இது இயற்கையான செயல்பாட்டை வேகப்படுத்துவதாகவும் இருக்கும். மென்மையான ஊசிகளை குத்திக் கொள்வதை நீங்கள் விரும்பாத போது, அக்குபிரஸர் முறையைக் கையாளலாம்.

நிப்பிள் ஸ்டிமுலேஷன்

சிக்கலில்லாத, மென்மையான மற்றும் எளிமையான பிரசவத்தை நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள் எனும் போது, உங்களுக்கு ஏற்ற முறையாக இருப்பது நிப்பிள் ஸ்டிமுலேஷன் ஆகும். கருப்பையில் சுருக்கங்கள் ஏற்படுவதை தூண்டும், ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும் முறையாக நிப்பிள் ஸ்டிமுலேஷன் உள்ளதால் எளிமையாகவும், பிரசவ வலியை தூண்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் இந்த முறை உள்ளது. 40 வாரங்களுக்கும் மேலாக நீங்கள் கருவை சுமந்திருந்தால் நிப்பிள் ஸ்டிமுலேஷன் முறை நன்றாக வேலை செய்யும். ஒரு நாளில், ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை இந்த வழிமுறையை நீங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்யும் போது மென்மையாக கையாள வேண்டியது அவசியமாகும். கர்ப்ப கால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கலான பிரசவங்களின் போது இந்த வழிமுறையை பயன்படுத்த வேண்டாம்.

நடை பழகு!

நடப்பதன் மூலம் பிரசவ வலியை இயற்கையாகவே தூண்டும் வாய்ப்புகள் உள்ளன. வயிற்றுக்குள் தலைகீழாக இருக்கும் உங்களுடைய குழந்தையை கருப்பை வாய்க்கு அருகே கொண்டு செல்லும் நிகழ்வாக நடை இருக்கும். நீங்கள் சீராக நடந்து செல்லும் போது, உங்களுடைய குழந்தையின் தலையில் ஏற்படும் சீரான அழுத்தம் ஆக்ஸிடோசின் ஹார்மோனை உற்பத்தி செய்வதால், கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்த முடிகிறது. எனினும், பின்நாட்களில் அதிகமான சக்தி தேவைப்படும் என்பதால் தேவைக்கும் அதிகமாக நடந்து உங்களுடைய சக்திகளை விரயம் செய்து விட வேண்டாம். குழந்தையின் தலைப்பகுதி இடுப்பெலும்பு கூடும் இடத்திற்கு கீழே நகர்ந்து வராத பட்சத்தில், நீங்கள் நடை பயணம் மேற்கொண்டால் குழந்தை சரியான நிலைக்கு வர உதவும். நடப்பதோடு மட்டுமல்லாமல், அப்படியே நகர்ந்து கொண்டிருந்தால், அது பிரசவ வலியை உண்டாக்க உதவும்.

அன்னாசிப்பழம்

கழுத்துப்பகுதியை பக்குவமாக கொண்டு வரும் குணம் கொண்ட ‘புரோமெலாய்ன்’ என்ற நொதியை தன்னகத்தே கொண்டுள்ள பழமாக அன்னாசிப் பழம் உள்ளது. 40 வாரங்களைக் கடந்த கர்ப்பிணியாக நீங்கள் இருந்தால், அன்னாசிப் பழங்களை சாப்பிட்டு பிரசவத்தை தூண்ட முடியும். எனினும், அளவுக்கு அதிகமான அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படும். அதுவும் குழந்தை பெறப் போகும் நேரத்தில் உங்களுடைய வயிற்றை தொந்தரவு செய்யக்கூடாது. அன்னாசிப் பழத்தை ஜுஸாக சாப்பிடாமல், அப்படியே .ஏனெனில், ஜுஸாக சாப்பிடுவதால் புரோமெலாய்ன் அழிந்து விடும்.

ராஸ்பெர்ரி இலை டீ

ராஸ்பெர்ரி இலையில் தேநீர் சாப்பிடுவதால் பிரசவம் தூண்டப்படாதெனினும், பிரசவ காலத்தை நெருங்கியுள்ள உங்களுக்கு பல்வேறு வகையிலும் உதவும் குணம் கொண்டதாக ராஸ்பெர்ரி உள்ளது. நீங்கள் இதனை தேநீராகவோ அல்லது மாத்திரைகளாகவோ சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 3 கோப்பை வீதம் குடித்து வரலாம். 32 வார பிரசவ காலத்திற்குப் பிறகு மட்டுமே இந்த தேநீரைப் பருக வேண்டும், அதற்கு முன்னால் அல்ல. ஏனெனில், இந்த தேநீர் கர்ப்பப்பையின் தசைகளை தூண்டும் திறன் கொண்டுள்ளது. இயற்கையான டோனராக இருக்கும் ராஸ்பெர்ரி இலைகளில், கருப்பைக்கு தேவையான இரும்புச்சத்து உள்ளதால், பிரசவத்திற்கு தயாராகும் பெண்களுக்குத் தேவையான இரத்தத்தையும் உற்பத்தி செய்து கொடுக்கும்.

உணவில் தேவை மசாலா

கர்ப்ப காலத்தில் பெண்களின் நா நரம்புகள் சுவையான மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை எதிர்பார்ப்பது சகஜம். அதிலும், நன்றாக சமைக்கப்பட்ட உணவுகள் பிரசவத்தை தூணடும் என்றால் சொல்லவும் வேண்டுமா? இது உண்மை என நிரூபிக்கப்படாமல் இருந்தாலும், ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. பிரசவத்தை தூண்டும் முக்கியமான உணவாக இஞ்சி உள்ளது. குடல்களை தூண்டும் முதன்மையான பணியை செய்வதால், தளர்வாக மலம் கழிக்கச் செய்கிறது. இதன் காரணமாக கருப்பை தூண்டப்பட்டு, சுருக்கமடையத் துவங்குகிறது. இந்நேரத்தில் காலியாக இருக்கும் குடல் பகுதி குழந்தை கீழ் நோக்கி வர ஏதுவாக அமைகின்றன. இந்த அறிகுறியை வைத்தே உங்களுடைய குழந்தை வெளியே வரத் தயாராகி விட்டான்/விட்டாள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

காதல் கொள்ளுங்கள்

காதல் கொண்டிருப்பதும் கூட கருப்பையில் சுருக்கங்களை தூண்டும் என்று நம்பப்படுகிறது. இதற்கு சான்றுகள் எதுவும் இல்லையென்றாலும், பெரும்பாலான தாய்மார்கள் தங்களுடைய கணவர்களிடம் காதலில் ஈடுபட்ட பின்னர் பிரசவ வலி வந்ததாக சொல்கின்றனர். ஆனால், காதல் கொள்வதால் ஏன் பிரசவ வலி தூண்டப்படுகிறது என்பதற்கு மற்றுமொரு காரணம் உள்ளது. உடலுறவின் போது வெளியேறிய உயிரணுக்கள், கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸை தளர்த்தி மென்மைப்படுத்துகிறது. உயிரணுக்களில் கலந்துள்ள ப்ரோஸ்டாகிளான்டின்ஸ் என்ற வேதிப்பொருள் தசைகளை தளர்வுபடுத்தும் குணத்தைக் கொண்டிருப்பதால், செர்விக்ஸ் தளர்ந்து விரிவடைகிறது. அதே போல, உடலுறவு கொள்வதால் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவர்களை சுருங்கச் செய்கிறது. உடலுறவின் போது உச்ச நிலையை அடைவதால் கூட தசைகள் தானாக சுருங்கத் தொடங்குகின்றன என்றும் நம்பப்படுகிறது. எனினும், உங்களுக்கு பனிக்குடம் ஏற்கனவே உடைந்திருந்தால், உடலுறவு கொள்வதைத் தவிர்க்கவும். பனிக்குடம் உடைந்த பின்னர் உடலுறவு கொள்வதால், மிகவும் ஆபத்தான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆமணக்கு எண்ணெய்

மிகச்சிறந்த மலமிளக்கியாக இருக்கும் ஆமணக்கு எண்ணெய், சில நேரங்களில் பிரசவத்தைத் தூண்டும் பணியையும் செய்கிறது. உங்களுடைய மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்னர், மிகவும் குறைந்த அளவு (114 மிலி) ஆமணக்கு எண்ணெயை, ஆரஞ்சு பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம். ஆமணக்கு எண்ணெயின் பிசுபிசுக்கும் குணத்தால், வயிறு தூண்டப்பட்டு, அடிக்கடி மலம் கழிக்கத் த}ண்டப்படுவீர்கள். இதன் காரணமாக கர்ப்பப்பையில் தானாகவே சுருக்கங்கள் ஏற்படத் துவங்கி விடும். சிறிதளவு குடித்தால் கூட உங்களுக்கு குமட்டல் வரலாம் என்பதை நினைவில் கொள்ளவும். சில நேரங்களில் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துவது பலனளிக்காது என்பதால், இதனை ஒரு முழுமையான தூண்டுதல் பொருளாகக் கருத வேண்டாம். ஆமணக்கு எண்ணெய் வயிற்றை மட்டுமே பதம் பார்க்கும், தாயையோ அல்லது சேயையோ அல்ல!

ஹோமியோபதி நிவாரணங்கள்

பிரசவத்தைத் தூண்டுவதில் ஹோமியோபதி நல்ல பலன் தருகிறது. பெரும்பாலான பெண்களால் இந்த வழிமுறை பயனுள்ளதாக இருந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புல்ஸாடில்லா மற்றும் காவ்லோபைல்லம் ஆகிய ஹோமியோபதி வழிமுறைகளை நீங்கள் கையாளும் போது, அவை பிரசவத்தைத் தூண்ட உதவுகின்றன. இந்த ஹோமியோபதி நிவாரணங்கள், சக்தி வாய்ந்த மருந்துகளின் கரைசலாக உள்ளன. இந்த நிவாரணம் தாய் மற்றும் சேய்க்கு ஆபத்துகளை விளைவிப்பதில்லை. எனினும், ஹோமியோபதி நிவாரணங்களை பயன்படுத்தும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது நலம். பிரசவத்தை தூண்டும் பொருட்டாக ஹோமியோபதி மருத்துவம் செய்து கொள்ள விரும்பினால், பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவரை அணுகவும்.

ரிலாக்ஸா ஒரு குளியல் போடுங்க…

மிதமான வெந்நீரில் ரிலாக்ஸாக குளியல் போடுவது பிரசவத்தை தூண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்நேரத்தில் உங்களுடைய மன நிலை மிகவும் முக்கியான பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, அமைதியாக கருப்பையை சுருங்கச் செய்கிறது. எனினும், நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சூடாக வைத்திருந்தால், உள்ளே ஏற்கனவே சூடாக இருக்கும் குழந்தையின் வெப்பநிலை அதிகரித்துவிடும். இந்த தண்ணீரில் 1 அல்லது 2 சொட்டுக்கள் லாவெண்டர் எண்ணெயை சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்களுடைய உடலை இயற்கையாகவே ரிலாக்ஸாக வைத்திருக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button