கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க

குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்கு வழங்கப்படும் முதல் உணவு தாய்ப்பால் தான். தாய்பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அதற்கு முக்கிய காரணம் தாய்ப்பாலில் உள்ள நோய்எதிர்ப்பு திறனே ஆகும். பிரசவத்தை நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களில் ஒன்று தாய்ப்பால் சுரப்பு. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்த ஒரு பெண்ணுக்கு சுமார் 850 மி.லி தாய்ப்பால் தினமும் சுரக்கும். ஆரம்பத்தில் தாய்ப்பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். நல்ல சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடுசெய்துவிடலாம்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என ஆய்வில் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்.

தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவுசத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும். தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன், ஆகியவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், அதிகமாகவுள்ள கேரட், பீட்ரூட், கோஸ் பச்சைக் காய்கறிகள் கீரை வகைகள், இவற்றில் ஒன்றையாவது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

இரும்புச்சத்து வைட்டமின், ஙி12 அதிகமுள்ள உணவுப்பொருட்களான அவல் கோதுமை சோயாபீன்ஸ், சுண்டைக்காய், கொத்தமல்லி, பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கும்.

ஏலம்3 பங்கு, திப்பிலி 4 பங்கு, அதிமதுரம் 6பங்கு, ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினமும் ஒரு வேளை காலையில் உட்கொள்ள வேண்டும். நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும். 30-60 மி.லி அருகம்புல் சாற்றை தினமும் காலையில் குடித்து வர பால் சுரப்பு அதிகரிக்கும்.

அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும். ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம எடை எடுத்து பாலில் காய்ச்சி தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் குழந்தைகளுக்கு தேவையான பால் சுரக்கும்.ht1483

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button