நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? உங்களுக்குதான் இந்த விஷயம்
மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். ஆய்வு ஒன்றில் 18 வயதிற்கு மேல் நகம் கடிக்கும் பழக்கம் கணிசமாக குறைவதாக செல்லப்படுகிறது. ஏன், நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரியுமா? நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோசமானது என்று தெரியுமா? ஏனெனில் நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும்.
இந்த பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்திவிட்டால், பிற்காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும். சரி, இப்போது நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!
நகங்கள்
நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை மொட்டையாகவும் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.
சருமம்
நகங்களைக் கடிப்பதால், நகங்கள் இல்லாமல் இருப்பதோடு, நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோலுரிய ஆரம்பித்து, அதனால் அவ்விடத்தில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
செரிமான மண்டலம்
நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள். இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானமாகால், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, ஏதேனும் யோசிக்கும் போதோ அல்லது டென்சனாக இருக்கும் போது, அப்படியே கையை வாயில் வைப்போம். இதனால் வயிற்றில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
பற்கள்
தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமையிழக்கச் செய்துவிடும். எனவே நகங்கள் கடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால், விரைவில் பற்களையும் இழக்க நேரிடும்.