தலைமுடி சிகிச்சை

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை -பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

விதை நீக்கிய வேப்பம் பழம் 10 எடுத்து, அது மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சவும். தலைமுடியை இரண்டாகப் பிரித்துக் கொள்ளவும். லேசான சூடாக இருக்கும் போதே அந்த எண்ணெயை பஞ்சில் தொட்டு, பேன், ஈறுகள் உள்ள இடங்களில் தேய்த்து தூக்கி எறிந்து விடவும். குறிப்பாக ஈறுகள் அதிகம் இருக்கும் பின்னங்கழுத்துப் பகுதியில் இதைச் செய்யவும்.

மேலே சொன்னபடி எண்ணெய் தேய்த்து சுத்தப்படுத்தியதும் தலையை அலச வேண்டும். பேன், ஈறு பிரச்னை உள்ளவர்கள் எப்போதும் ஷாம்பு உபயோகிக்கக்கூடாது. அது அவற்றை பெருகச் செய்யும். வெந்தயத் தூள், வேப்பிலைத் தூள், துளசித்தூள், பூந்திக் கொட்டைத்தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் குழைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இந்த வாசனைக்கும் கசப்புச் சுவைக்கும் பேன், ஈறுகள் ஓடிவிடும். அடுத்தவருக்கும் பரவாது.

சீயக்காயை வெதுவெதுப்பான தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அத்துடன் சாதம் வடித்த கஞ்சி சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இதை வாரம் ஒருமுறை செய்யலாம்.

50 எண்ணிக்கையில் வேப்பங்குச்சிகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரில் சுத்தமான சீயக்காய் தூளைக் கரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் ஈறு, பேன்கள் ஓடிவிடும்.

வாள் மிளகு 1 டீஸ்பூன், பிஞ்சு கடுக்காய் 2, துவரம் பருப்பு 1 டேபிள்ஸ்பூன், பூந்திக் கொட்டை 4 – இவை எல்லாவற்றையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அம்மியிலோ, மிக்சியின் சின்ன ஜாடியிலோ அரைத்து தலை முழுவதற்கும் பேக் மாதிரி போட்டுக் கொள்ளவும். சிறிது நேரம் ஊறியதும் அதையே தலையில் தேய்த்து அலசவும். குட்டை முடியுடன் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை உடனடி பலன் தரும். முடியும் நன்கு வளரும்.

பேன் பிரச்னை இருப்பவர்கள் எப்போதும் குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிக்க வேண்டாம். வெதுவெதுப்பான அல்லது சூடான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button