முகப் பராமரிப்பு

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போகமாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

சிலரது முகத்தைப் பார்த்தால், கண்களைச் சுற்றி கருமையான வளையம் அசிங்கமாக தெரியும். இப்படியான கருவளையம் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனை அல்ல. ஆனால் கண்களைச் சுற்றி கருமையான வளையங்கள் இருப்பது மற்றும் கண்கள் வீங்கி இருப்பது ஒருவரை சோர்வாகவும், ஆரோக்கியமற்றவராகவும் வெளிக்காட்டும்.

இந்த கருவளைய பிரச்சனையைப் போக்க பலர் நிறைய பணம் செலவழித்து க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கருவளையங்களைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை தவறாமல் தினந்தோறும் பயன்படுத்தி வந்தால், கருவளையங்களை போக்கலாம்.

கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் கருவளையங்கள் வரக்கூடும் என்பதைப் பார்ப்போம்.

தூக்கமின்மை

இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கத்தை சமாளித்து டிவி பார்ப்பது அல்லது அரட்டை அடிப்பது போன்றவை கண்களைச் சுற்றி கருவளையங்களை வரவழைக்கும். ஏனெனில் போதுமான தூக்கமின்மை சருமத்தை வெளிறச் செய்கிறது. இதன் காரணமாக கருமையான திசுக்கள் மற்றும் இரத்த நாளங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

திரை நேரம்

தற்போதைய மார்டன் வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் திரையைப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது மேலும் அதிகரித்துள்ளது. நீண்ட நேரம் திரைப் பார்ப்பது நம் கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கண்களைச் சுற்றி கருமையான வளையங்கள் தோன்றும்.

வயது

வயதாகும் போது, சருமம் மெல்லியதாகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கத் தேவையான கொழுப்பும், கொலாஜனும் குறைகிறது. இதனால் கண்களுக்கு கீழே உள்ள நீல-சிவப்பு இரத்த நாளங்கள் வெளிப்பட்டு, அவை கருமையான கோடுகளை கண்களுக்கு கீழே வெளிக்காட்டுகிறது.

மரபணுக்கள்

ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கருவளையங்கள் வந்தால், அதற்கு காரணம் உங்களின் மரபணுக்கள் தான். அதோடு சருமத்தில் மெலனின் அளவு அதிகமாக இருந்தால், அது கருவளையங்களை உண்டாக்கும். மெலனின் என்பது ஒரு நிறமி. இது தான் சருமம், தலைமுடி மற்றும் கண்களுக்கு நிறத்தை அளிக்கின்றன. சருமத்தில் மெலனின் அளவு அதிகமாக இருந்தால், அந்த சருமம் கருமையாக இருக்கும்.

பிற காரணிகள்

வேறு சில காரணிகளாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் வரும். அவையாவன:

* அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது

* அலர்ஜிகள்

* உடலில் போதுமான நீரேற்றம் இல்லாதது

கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகளை பார்க்கும் முன், இதை குணப்படுத்துதலானது காரணத்தைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஜங்க் உணவுகளை சாப்பிட்டு வயிற்று வலி வந்தால், ஜங்க் உணவுகள் சாப்பிடுவது நிறுத்துவது நல்லது. அதேப் போல் தூக்கமின்மை கருவளையங்களை உண்டாக்குகிறது என்பதால், நல்ல தூக்கத்தை மேற்கொள்வது நல்லது. மேலும் சிகிச்சைக்கு முன் தோல் மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை அணுகுவது நல்லது.

இப்போது கருவளையங்களைப் போக்கும் சில இயற்கை வழிகளைப் பார்ப்போம்.

ஐஸ் ஒத்தடம்

சில ஐஸ் கட்டிகளை எடுத்து, அதை ஒரு துணியில் வைத்து, கண்களுக்கு கீழே சில நிமிடங்கள் வைத்திருங்கள். இல்லாவிட்டால் குளிர்ந்த நீரில் நனைத்த துணியையும் கண்களுக்கு கீழே வைக்கலாம். இரண்டுமே ஒரே பலனைத் தரும். ஐஸ் கட்டிகளை கண்களுக்கு கீழே வைப்பது கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் கருவளையங்களை நீக்க உதவும்.

டீ பேக்குகள்

* இரண்டு ப்ளாக் அல்லது க்ரீன் டீ பேக்குகளை சுடுநீரில் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைக்க வேண்டும்.

* அதன் பின் அந்த டீ பேக்கை எடுத்து கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும்.

* இச்செயலால் டீ பேக்கில் உள்ள காப்ஃபைன் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண்களுக்கு கீழே தேங்கியுள்ள திரவங்களைக் குறைக்கும். இதன் விளைவாக கண் வீக்கம் மற்றும் கருவளையம் மாயமாய் குறையும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் அதை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள உட்பொருட்கள், கண் வீக்கம் மற்றும் கருவளையங்களைப் போக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒரு சுவையான காய்கறி மட்டுமின்றி, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை திறம்பட போக்கும் பொருளும் கூட. அதற்கு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்து எடுத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை இந்தியாவின் பெரும்பாலான வீடுகளிலும் காணப்படும் ஒரு செடியாகும். இத்தகைய கற்றாழை பல அழகு பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட கற்றாழையின் ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. அப்படிப்பட்ட பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையங்கள் மறைந்து கண்கள் பளிச்சென்று இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button