ஆரோக்கியம்

திருமண வாழ்க்கையை பெண் சுதந்திரம் பாதிக்கிறதா?…

நீண்ட காலமாகவே பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து தனி மனிதனாகி சமுதாயத்தில் இணையும்போது, கற்பித்தலை தாய், தந்தை, ஆசிரியர், பாரம்பரிய குணங்கள் மூலம் பெறுகிறார்கள்.

ஆண், பெண் எனப் பாகுபடுத்தி, ஆண்களைச் சுதந்திரமாகவும், பெண்களை அவர்களுக்குக் கீழே மட்டுப்படுத்தியும் வளர்க்கிறார்கள்.

உளவியல் ரீதியாக அவர்களிடம் பெண்கள் தாழ்வு என்ற மனப்பான்மையே இருந்து வருகிறது.

முன்பெல்லாம் கணவன் இறந்தவுடன் மனைவியை, ‘உடன்கட்டை’ ஏற்றும் பழக்கம் இருந்தது. அதை ‘சாரதா தடைச்சட்டம்’ கொண்டுவந்து தடுத்து நிறுத்தினார்கள்.

thirumanam

பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசியும், எழுதியும் வந்தனர் தாகூர், விவேகானந்தர், பாரதி முதலானோர்.

பாரதி சகோதரி நிவேதிதையின் வேண்டுகோளை ஏற்றுப் பெண் கல்வியையும், சுதந்திரத்தையும் வலியுறுத்திப் பாடி, நாட்டு மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டினார்.

பெண்கள் ஓட்டுப்போடும் உரிமை பெற்றனர். நாடு சுதந்திரம் அடைந்ததும், கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு, ஆண்களுக்குச் சமமாக பெண்களும் கல்வி கற்றனர்.

பெண்களுக்கென தனிப் பள்ளி, தனிக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. விளைவு? எல்லா இடத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பெருகத் தொடங்கினர்.

சம வாய்ப்பு என்பதால், போட்டியைப் போன்றே கற்பது, வேலைக்குச் செல்வது என பெண்களும் முன்னேறினர்.

நடப்பு கல்வியாண்டில் கூட, பிளஸ்-2 தேர்வில் பெண்களின் தேர்ச்சி சதவீதம் ஆண்களை விட அதிகமே.

அரசும் அவ்வப்போது பெண்கள் முன்னேற்றத்திற்கென சட்டங்களைக் கொண்டு வந்தன.

அதனால், எங்கெல்லாம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் சட்டத்தின் துணைகொண்டு, சம உரிமை பெறும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சட்டம் என்பது வேறு; நடைமுறை வாழ்க்கை என்பது வேறல்லவா? சட்டம் மக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கருவியே!

அதை ஏற்றுப் பின்பற்ற வேண்டிய மக்களின் மனநிலை மாறினால் தான் சட்டம் உயிர் பெறும்.

திருமணம் என்று வரும்போது, இருவரின் படிப்பு, வேலை, சம்பளம் தவிர இருவரது குடும்ப செல்வாக்கும் சேர்வதால் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.

வரதட்சணையை ஒழிக்க, வரதட்சணை தடைச் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்த காலம் மாற, கல்வியறிவு பெற்ற பெண்களின் சிந்தனைகளும் மாறுகின்றன.

படிப்பறிவு வந்தவுடன், சுயமாக வாழவேண்டும்; தனக்குப் பிடித்த கணவனையும், வாழ்க்கையையும் தானே தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறாள்.

பழையன கழிதல் போல அடிமை என்ற நினைவும் அவர்களிடமிருந்து கழண்டு கொள்கிறது.

நினைப்பு மாறினால்……? வழி வழியாய் வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடும்ப வாழ்க்கை முறையை விரும்ப ஆரம்பித்தனர்.

அதனால் பெற்றோர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாயிற்று. அதைக் களைய ‘முதியோர் பாதுகாப்புச் சட்டம்’ வரலாயிற்றது.

தனிக் குடும்ப வாழ்வில் பிணக்குகள் வரும்போது, தீர்வு செய்ய முதியோரின்றி வாழ்வில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது.

முன்னைப்போல பெண்கள், சிரமமான வாழ்க்கையை சகித்து, காலம் முழுதும் வாழத் தயாராக இல்லை.

அவள் விருப்பப்படி வாழத் தீர்மானிக்கிறாள். அதையுணர்ந்து, சமரசம் செய்துகொண்டு, விட்டுக் கொடுத்துப் போகும் ஆண்கள் உள்ள குடும்ப வாழ்க்கைச் சீராகச் செல்கிறது; பழமையைக் கூறி கட்டாயப்படுத்தும் குடும்பத்தில், பெண்கள் மண முறிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வெளியுலகப் பார்வைக்கு பெண்களின் விவாகரத்து கேள்விக் குறியாய்த் தோன்றுகிறது.

பழமையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், புதியதை ஏற்காது மறுப்பதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியென்றே சட்டம் கருதுகிறது.

சுதந்திரம் கிடைத்தும் வெளி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பிற்கு ஆண் துணை தேவைப்படுகிறது.

வீட்டிலே முடங்கினால் கற்ற கல்வியும் பயனற்று, தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பிக்கும்.

‘ட்ரஸ்ட் லா’ என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் தரவரிசை பட்டியலில், இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கலாசார ரீதியாக பெண்களை ஒடுக்குவது, பெண் கடத்தல், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு, சிசுக்கொலை என சமூக அவலங்களும் தொடர்கின்றன.

அடக்கு முறையில், வரதட்சணை, பெண் பார்த்து நிராகரித்தல், புகுந்த வீட்டில் அவர்கள் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்க வழக்கங்களை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதும், இந்த அடக்குமுறைக்கு உட்பட்டதாகவே கருதுகிறது.

2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையின்படி பெண்களைச் சமமாக மதிக்காத தரவரிசையில் மொத்தமுள்ள 138 நாடுகளில் இந்தியா 122-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. எதிலும் அவசரம்.

அதனால் பெற்ற தாய், தந்தையரைப் பராமரிப்பது தம் கடமை என்பதையும், பெற்ற பிள்ளைகளை நன்முறையில் வளர்த்து ஆளாக்குவது தத்தம் கடமை என்பதையும் மறந்து, மன உணர்வற்ற ஒரு எந்திர வாழ்க்கை வாழத் தங்களைத் தயார் செய்து கொண்டு பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள்.

விருப்பமில்லா வாழ்வை ரத்து செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. விட்டுக் கொடுப்பதும், சகித்துப் போவதும் குறையும் போது பிரச்சினை எழுகிறது.

கணவன், மனைவி தனக்கு இணையானவள் என்ற மனோபாவமும், பழைய பழக்க வழக்கங்களைச் சுட்டிக்காட்டி மனைவியை தாழ்த்த முற்படாமல் இருந்தால் வாழ்க்கை சீராகச் செல்லும்.

மண முறிவுக்குக் காரணம் பெண்களின் சுதந்திரத்தைக் காரணமாக கூற இயலாது. அவர்கள் பெற்ற கல்வியால், சுயமாக சிந்திக்கிறார்கள்.

அடக்கு முறையை நிராகரிக்கிறார்கள்; அதற்கு சட்டமும் துணை நிற்கிறது. காலமாற்றத்தை ஏற்று வாழத் தெரிந்து கொண்டால் மட்டுமே, தம்பதியினர் நிம்மதியான வாழ்வினைத் தொடர முடியும். இல்லையேல் அவரவர் வழியென சட்டப்படி பிரிய நேரிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button