ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

மழைக்காலத்தில் நம்மை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் ஈரப்பதத்துடனேயே இருப்பதால், பாக்டீரியாக மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியானது அதிகரித்து, விரைவில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். அதிலும் குழந்தைகளுக்கு தான் மிகவும் வேகமாக நோய்த்தொற்றுகள் ஏற்படும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுகளை கொடுக்க வேண்டும்.

இங்கு குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவுப்பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் சாதாரணமாக நாம் உண்பதாக இருந்தாலும், மழைக்காலத்தில் சற்று அதிகமாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த ஒரு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட கொடுக்கும் முன்னும், வினிகர் கலந்த நீரில் அவற்றை கழுவி, பின் சாப்பிடக் கொடுப்பது நல்லது. சரி, இப்போது குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் கொடுக்க வேண்டிய அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இதனை மழைக்காலத்தில் தவறாமல் தினமும் ஒன்று சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு புரோட்டீன்கள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்ள் போன்றவையும் கிடைத்து, மழைக்காலத்தில் சளி, இருமல் போன்றவை தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பழங்கள்

தற்போது அனைத்துப் பழங்களுமே மார்கெட்டில் கிடைக்கின்றன. இருப்பினும் சீசன் பழங்களை அதிகம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் சீசன் பழங்கள், அந்த சீசனில் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி இருக்கும். அதுமட்டுமின்றி அத்தகைய பழங்களை ஜூஸ் போன்று செய்து கொடுக்காமல், அப்படியே சாப்பிடக் கொடுங்கள்.

பாதாம்

குழந்தைகளின் பார்வையை கூர்மையாக்கவும், அழகான சருமம் மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பெறவும், தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து தோலுரித்துக் கொடுத்து சாப்பிட வையுங்கள். இல்லாவிட்டால், பாதாமை அரைத்து அதனை பாலுடன் சேர்த்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குங்குமப்பூ பால்

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு குங்குமப்பூ பாலைக் கொடுத்து வந்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

சூப்

மழைக்காலத்தில் சூப் குடித்தால் இதமாக இருக்கும். அதிலும் இதனை தினமும் குடித்து வந்தால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சூப்பில் சேர்க்கப்படும் காய்கறிகளால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மூலிகை டீ

குழந்தைகளுக்கும் அவ்வப்போது மூலிகை டீ கொடுத்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கிருமிகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

இஞ்சி

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து இருக்கும். இதனால் பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க ஒரு சிறப்பான வழி என்றால், அது இஞ்சியை உணவில் சேர்ப்பது தான். இதனால் வயிற்றில் எந்த ஒரு நோய்த்தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.

பூண்டு

குழந்தைகளுக்கு பூண்டு என்றாலே பிடிக்காது. இருப்பினும் பூண்டில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால், அதனை அரைத்து பேஸ்ட் செய்து சமைக்கும் உணவில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால், பூண்டின் சத்துக்களானது குழந்தைகளுக்கு கிடைக்கும்.

மசாலாப் பொருட்கள்

குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்களின் ஆரோக்கியத்திற்காக உணவில் மஞ்சள், மல்லி, கிராம்பு, மிளகு மற்றும் பட்டை போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து வாருங்கள்.

பருப்பு வகைகள்

உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. அதிலும் மழைக்காலத்தில் நோய்களின் தாக்கத்தினால் உடலில் உள்ள செல்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், அப்போது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், செல்களானது புதுப்பிக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button