ஆரோக்கிய உணவு

சுட்டீஸ் ரெசிப்பி: சத்துக்கு சத்து… சுவைக்கு சுவை!

பிள்ளைகளுக்கு லீவு விட்டால் போதும். லூட்டியும், சேட்டையும், கூச்சலும் கும்மாளமுமாக வீடே அதகளப்படும்.
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்… ஆனால், தாய்மார்களுக்குத்தான் திண்டாட்டம். அதுவும் இல்லத்தரசி என்றால் கேட்கவே வேண்டாம். ஒரே விஷயம், காலையில் எழுந்து அரக்கப்பரக்க டிபன் பாக்ஸில் எதையோ அடைத்து அனுப்ப வேண்டிய அவஸ்தை இருக்காது. லீவுதானே என்று லேட்டாக எழுவது, நிதானமாக சாப்பிடுவது என பசியும் அறியாமல், ருசியும் தெரியாமல் ‘ஜாலி’ என்பது மட்டுமே குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

p71p70 அதிலும், பெரும்பாலான பிள்ளைகள் சாப்பாட்டில் அக்கறை காட்டாமல், நேரம் காலம் இன்றி விளையாடுவதும், அரட்டை அடிப்பதுமாக சுழன்று கொண்டே இருப்பார்கள். ஓடி விளையாடுவதற்குத் தேவையான எனர்ஜி இல்லாமல், இரண்டே மாதத்தில், உடல் இளைத்து எடையும் குறைந்து, போதிய சத்துக்கள் இல்லாமல் போய் மெலிந்துவிடக்கூடும்.   உடல் வள‌ர்ச்சிக்கு மிக முக்கியமான காலக்கட்டமான ஐந்து முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளை அக்கறையோடு கவனித்துவிட்டால், ஊட்டமாக வளர்வார்கள். சுட்டீஸ்களுக்கான சத்தான உணவுகளை டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி பட்டியலிட, சத்தான ரெசிபிகளை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் பத்மா.

எள்ளு உருண்டை
p72

தேவையானவை:எள்ளு – 100 கிராம், வெல்லம் – 150 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன். செய்முறை:எள்ளை நன்கு வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்). வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி,  ஏலக்காய்த்தூள் சேர்த்து, கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும். குறிப்பு:வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது.

பைனாப்பிள் குழிப்பணியாரம்

தேவையானவை:இட்லி அரிசி – 200 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு – ஒரு கப், தேங்காய்ப்பால் – 100 மி.லி., நறுக்கிய பைனாப்பிள் – 200 கிராம், நெய் – 100 மி.லி., உப்பு – தேவையான அளவு.

p73

செய்முறை:அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.  பிறகு, களைந்து நைஸாக அரைத்து, தேங்காய்ப்பால் சேர்த்து தோசைமாவுப் பதத்தில் கரைக்கவும். பைனாப்பிளை நன்கு அரைத்து உப்பு சேர்த்து மாவுடன் கலக்கவும். பணியாரக் கல்லில் நெய் விட்டு, ஒரு சிறு கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். குறிப்பு:தேங்காய்ப்பால், வெந்தயம் வயிற்றுக்குக் குளிர்ச்சி.  வாய்ப்புண், வயிற்றுப் புண் வராமல் தடுக்கும். குழந்தைகளுக்கு காலை நேர உணவுக்கு, விருப்பமான பழங்களைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.

கார்ன் வடை

தேவையானவை:இனிப்பு சோளம் – 2, துவரம்பருப்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், எண்ணெய் – 200 மி.லி., மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

p74

செய்முறை:துவரம்பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து ஊறவைத்துக் களைந்து, தேவையான உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். சோளத்தை உரித்து, முத்துக்களை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து வடை மாவில் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். குறிப்பு:பருப்பு, சோளத்தில் புரதச் சத்து அதிகம். உடல் வளர்ச்சியைக் கொடுக்கும்.

வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்

தேவையானவை: கேரட் துருவல் – ஒரு கப், துருவிய கோஸ் – 4 டீஸ்பூன், திராட்சை – 10, பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வாழைப்பழம் – 1 (பொடியாக நறுக்கியது), நறுக்கிய பைனாப்பிள் – சிறிதளவு, மாதுளை முத்துக்கள் – சிறிதளவு, பப்பாளித் துண்டுகள் – சிறிதளவு, தேன் – 2 டீஸ்பூன்.

p75

செய்முறை:கேரட்-கோஸ் துருவல், திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளை முத்துக்கள், பப்பாளித் துண்டுகள் இவை எல்லாவற்றையும் ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, தேன் சேர்த்துக் கலந்து கொடுக்கலாம். குறிப்பு:ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சத்து உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகம் கிடைப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை:வறுத்த வேர்க்கடலை, வெல்லம் – தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

p76

செய்முறை:வேர்க்கடலையைத் தோல் நீக்கிக்கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும். வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும். குறிப்பு:புரதமும், இரும்புச்சத்தும் இதில் மிக அதிகம். ரத்த சோகை வராது.

நட்ஸ் பக்கோடா

தேவையானவை:கடலை மாவு, அரிசி மாவு, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா ஒரு கப், முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு – தலா 10, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 250 மி.லி., மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்.

p77

செய்முறை:கடலை மாவு, அரிசி மாவைக் கலந்து, முந்திரியைப் பொடியாகக் கிள்ளிப் போடவும். இதில், பாதாம் பருப்பு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பிஸ்தா மூன்றையும் உடைத்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பக்கோடாவாகப் பொரித்து எடுக்கவும். குறிப்பு:சாதாரண பக்கோடாவை விட, இந்த நட்ஸ் பகோடா வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. .

வெஜிடபிள் உப்புமா

தேவையானவை:அரிசி ரவை – 200 கிராம், வறுத்த முந்திரி – 10, பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட், பீன்ஸ் – தலா ஒரு கப், பட்டாணி – 100 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சைமிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு, எண்ணெய், நெய் இரண்டும் சேர்ந்து – 100 மி.லி., கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு. தாளிக்க:கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

p78

செய்முறை:அரிசி ரவை கடையில் வாங்கலாம். அல்லது அரிசியில் சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறி, 10 நிமிடங்கள் கழித்து மிக்ஸியில் ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளலாம். கடாயில் நெய், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய குடமிளகாய், கேரட், கறிவேப்பிலை, பீன்ஸ், பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, பெருங்காயத்தூள்  சேர்த்துக் கிளறி ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் அளந்து விடவும். காய்கறிகளுடன் சேர்ந்து நன்றாகக் கொதித்தவுடன் ரவையை தூவி கிளறி மிதமான தீயில் மூடிவைத்து வேகவிடவும். மேலாக வறுத்த முந்திரி சேர்க்கவும். குறிப்பு:நன்றாகப் பசி அடங்கும். அனைத்துக் காய்கறிகள் சத்தும் ஒன்றாக கிடைக்கும். முந்திரியும் சேர்த்துக் கொடுத்தால் உப்புமா சாப்பிடாத குழந்தையும் விரும்பிச் சாப்பிடும்.

வெந்தயக்கீரை – உருளைக்கிழங்கு ஃப்ரை

தேவையானவை:வெந்தயக் கீரை – ஒரு கட்டு, சிறிய உருளைக்கிழங்கு – 250 கிராம், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 100 மி.லி., எலுமிச்சம்பழச் சாறு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன். தாளிக்க:கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

p79

செய்முறை:வெந்தயக் கீரையைக் கழுவி, ஆய்ந்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து, இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயக் கீரையைச் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். மீண்டும், சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகுத்தூள், உப்பு, வெந்த உருளைக்கிழங்கைச் சேர்த்து தேங்காய்த் துருவல், வதக்கிய வெந்தயக் கீரை சேர்த்து கிளறவும்.  கடைசியில் எலுமிச்சம்பழச் சாறு கலக்கவும். குறிப்பு:உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகளே இல்லை. கிழங்குடன் வெந்தயக்கீரை சேர்ப்பதால் குளிர்ச்சி.  நல்ல ஜீரண சக்தியைத் தரும். வயிற்றுப்புண் வராமல் காக்கும். வெந்தயக்கீரை நார்ச்சத்து நிறைந்தது.

அவல் புட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – 200 கிராம், தேங்காய்த் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, சர்க்கரை – 100 கிராம், நெய் – 4 டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு – 10.

p80

செய்முறை: அவலை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து, கரகரப்பாகப் பொடிக்கவும். இதில் சிறிது தண்ணீர் தெளித்து, புட்டு குழாயில் நிரப்பி வேக விடவும். நன்றாக வெந்தவுடன் உதிர்த்து தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கலக்கவும். குறிப்பு: அவல் குழந்தைகளின் பசியைப் போக்கும். செய்வதும் சுலபம்.

பயத்தம் உருண்டை

தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், ஏலக்காய்தூள் – சிறிதளவு, நெய் – 100 மி.லி., வறுத்த முந்திரி பருப்பு – 20.

p81

செய்முறை: பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து, மெஷினில் நைஸாக அரைத்துச் சலிக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துச் சலித்து, இரண்டு மாவையும் ஓர் அகலமான பாத்திரத்தில் போடவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து முந்திரியை உடைத்துப் போட்டு, நெய்யை லேசாகச் சூடாக்கி மாவுடன் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். குறிப்பு: பாசிப்பருப்பு பொட்டுக்கடலையில் உருண்டை தயாரித்துக் கொடுத்தால், குழந்தைகள் சாக்லேட் பக்கம் போகாமல் தடுக்கலாம். அதிகம் புரதச் சத்து இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு உகந்தது.

புதினா தட்டை

தேவையானவை: அரிசி மாவு – 200 கிராம், வெண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா – ஒரு கப், பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன் (பொடிக்கவும்), எண்ணெய் – 250 மி.லி., மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்.

p82

செய்முறை: அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, நறுக்கிய புதினா, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.  ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டை வடிவத்தில் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து தட்டைகளைப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். குறிப்பு: இந்தத் தட்டை செய்யும்போது, வீடே மணக்கும்.  விருப்பப்பட்டால் மாவு பிசையும்போது இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளலாம். புதினா வாய் துர்நாற்றத்தைப் போக்கும். பசியைத் தூண்டும்.
Thanks to:-  http://www.vikatan.com/news/health/children-foods

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button